குறிஞ்சி மலர்.. 31
கொஞ்சமே கொஞ்சம் உயரமான இடத்தில் இருந்ததால் மெல்லிய குளிர் காற்று வீச, கோதைக்கு உடம்பு மெல்லக் கூசிச் சிலிர்த்தது. அதே நேரத்தில் அவன் தூக்கும் போது அவன் கை பட்டும் உடல் லேசாகக் கூசியது.
எட்டாவது படிக்கு போக, அவளைத் தூக்கப் போனவனது கையைத் தடுத்தவளை என்னவென்பது போலப் பார்த்தான் ஜேம்ஸ்.
“இல்லை உங்களுக்கு கஷ்டமா இருக்கும்.. மெல்ல மெல்ல எக்கினால் நானே ஏறிடுவன் போல..”
என்று இழுத்தவள், அவன் பார்த்த பார்வையில் வாயை மூடிக் கொண்டாள்.
ஜேம்ஸ் நீயே ஏறு என்பது போல, ஒரு படி கீழே இறங்கி நிற்க, அவனைப் பார்த்துக் கொண்டே மெல்ல எம்பி எம்பிப் பார்த்தவளுக்கு மேலே போகவே முடியவில்லை, சரி கீழேயாவது போவோம் எனக் கீழே பார்த்தவளுக்கு, அவளது பாதம் கீழ்ப் படிக்கு எட்டவேயில்லை. அதைப் பார்த்தவளுக்கு தேவையில்லாமல் வாயைக் குடுத்து விட்டோம் என்பது நன்றாகவே புரிந்தது.
மெல்ல குனிந்து அவனைப் பாவமாகப் பார்க்க, அவனோ பேசாமல் அவளையே தான் பார்த்திருந்தான். சட்டு சட்டென்று மாறும் அவனது முக பாவனையில் அவள் அடிக்கடி தன்னைத் தொலைத்தாலுமே, இந்த முக பாவனையில் அவளுக்கு உள்ளூர லேசாக உதறியது.
இருந்தாலும் தைரியத்தை வரவழைத்து கொண்டு, அவனது தோளின் மேல் மெல்ல கை வைத்து
“சாரியிங்கோ.. என்னில பிழை தான்.. நான் வாயை மூடிக் கொண்டு இருந்திருக்கோணும்.. இனி வாயே திறக்க மாட்டன்.. பிளீஸ் தூக்கி விடுங்கோவன்.. இங்க பாருங்கோவன் பயத்துல கால் நடுங்குது..”
என்று கெஞ்சலோடு சொல்ல, அப்போதும் கோபம் குறையாமல் நின்றவனது விழிகள் எதேச்சையாக அவள் கால்களைப் பார்த்தன.
அவளின் கால்கள் நடுக்கு வியாதிக்காரர் போல அப்படி நடுங்கிக் கொண்டிருந்தது. உடனே சட்டென்று அவளைத் தூக்கி விட்டான். இப்போது பட்டும் படாமலும் எல்லாம் தூக்கவில்லை. நன்றாகவே இறுகப் பிடித்தணைத்து தான் தூக்கியிருந்தான்.
அவனது அணைப்பின் வித்தியாசம் அவளுக்கு புரிந்தாலுமே கூட, வாயை இறுக மூடிக் கொண்டு விட்டாள். பின்னே அவள் எதையாவது சொல்லப் போக, அவன் கோபமாகி அங்கேயிருந்தே அவளை கீழே போட்டாலும் போட்டு விடுவான். அவன் செய்யக் கூடியவன் தான். பிறகு தான் தான் சிதறு பூசணி போல சிதறிக் கிடக்க வேண்டும் என யோசனை செய்தவள், அவன் குடிலின் வாசலில் தூக்கி விடும் வரை வாயைத் திறக்கவேயில்லை.
அவளை மேலே தூக்கி விட்டு, தானும் மேலே வந்தவன், சட்டைப் பையினுள் இருந்த சாவியை எடுத்து அந்த மரக் குடிலின் கதவைத் திறந்து விட, வேகமாக உள்ளே சென்ற கோதை அப்படியே மலைத்துப் போய் நின்று விட்டாள். வெளியே இருந்த மரக் குடிலுக்கும், உள்ளே இருந்த அமைப்புக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல இருந்தது உள் அமைப்பு.
நடுவே ஒரு கூடம் இருக்க, அதன் இரண்டு பக்கமும் இரண்டு கதவுகள் இருந்தன. கால் வைத்து நடக்கும் இடத்தில் மென்மையான கம்பளி கிடந்தது. கூடத்தில் அலங்காரப் பொருட்களும், பூச்சாடிகளும் என அழகழகாக அடுக்கப் பட்டிருக்க, கூடத்தின் நடுவில் ஒரு பெரிய மெத்தை கிடந்தது. மெத்தைக்கு பக்கத்தில் கைக்கு எட்டும் தூரத்தில் ஒரு ராக்கையில் புத்தகங்கள் அடுக்கப் பட்டிருந்தன.
வாசலோடு ஒட்டி வலது புறமாக ஒரு நீளமான சோபாவும், சோபாவின் முன்னால் ஒரு சிறிய மரமேசையும் கிடந்தது.
வலது புறம் இருந்த அறைக் கதவைத் திறந்து பார்த்தாள் கோதை. அது ஒரு குளியலறை.
“இங்க எப்புடி தண்ணி வரும்.. வாளியில அள்ளி அள்ளிக் கொண்டு வந்து நிரப்புறனியளோ..”
என தனது முதல் சந்தேகத்தை கோதை கேட்க,
அவளுக்கு பின்னால் கை கட்டி நின்றிருந்தவன்
“அந்த சுவிட்சை போடு பேபி..”
என கை காட்டினான்.
அவன் காட்டிய இடத்தில் இருந்த சுவிட்சை கோதை போட, அங்கே கிடந்த தொட்டிக்குள் நீர் வேகமாக வந்து விழுந்தது. சட்டென்று சுவிட்சை நிறுத்தியவள்,
“எப்புர்ரா..”
என அவனைப் பார்த்தாள்.
“தண்ணி வார மாதிரியான சிஸ்டம் எல்லாம் போன கிழமை தான் பேபி செய்தன்..”
“அது தான் எப்புடி..”
“ஏன் பேபி.. அதொண்டும் கஷ்டமான வேலையில்லையே..”
“நானும் கஷ்டம் எண்டு சொல்லேல்லை.. எந்த வயரையுமே காணோமே எப்புடி இந்த இடத்துக்கு கரண்ட் கணெக்சன் குடுத்தியள் எண்டு கேக்கிறன்..”
“அது கீழால பைப் வைச்சு குடுத்திருக்கு.. அந்த ஆராய்ச்சி எல்லாம் உனக்கெதுக்கு.. உனக்கு இடம் பிடிச்சிருக்கோ..”
“பிடிக்காமல்.. ரொம்ப ரொம்ப பிடிச்சூ.. இந்த தொட்டி மரத்துல செய்து.. உள்ள ரப்பர் போட்டு இருக்கென்ன..”
“ஆராய்ச்சி முடிஞ்சால் அடுத்த பக்கம் போவமோ..”
“இன்னும் ஒரு டவுட்டு..”
“இப்ப என்னடி..”
“இதுக்கெல்லாம் என்ன செய்வியள்.. கீழ காடு தானே எண்டு ப்பிரீ பேர்ட் ஆயிடுவியளோ..”
என கோதை சின்ன விரலைத் தூக்கிக் காட்ட, முதலில் என்னவென்பது போல புரியாமல் பார்த்தவன் அடுத்த கணமே அவள் சொல்ல வருவது புரிந்து போக,
“அடிங்க..”
என பக்கத்தில் கிடந்த துவாலையால் அவளை நோகாமல் அடித்தான்.
பின்னர் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தவளிடம் உள்ளே கிடந்த இன்னொரு கதவை காட்ட, அதைத் திறந்து பார்த்தவள் அந்தக் கழிவறையின் சுத்தத்தில் அவனை மனதோடு மெச்சிக் கொண்டு திரும்பி பார்க்க,
“இப்ப என்ன.. உதுக்கு எப்புடி என்ன கணெக்சன் எண்டு கேக்கப் போறியோ..”
எனக் கேட்ட ஜேம்ஸை பார்த்து
ஈ எனப் பற்களைக் காட்டியவள் வேகமாக வெளியே வந்து விட்டாள்.
வெளியே வந்தவள் அடுத்த பக்கம் செல்ல முயல, அவளை மறித்தவன்
“என்னைய பாத்து ஏன் பயந்தனீ எண்டு கேக்க.. பிறகு சொல்லுறன் எண்டியே இப்ப சொல்லு..”
எனக் கேட்க, முழியை முழியைப் பிரட்டியவள், அவன் பதில் சொல்லாமல் விடப் போவதில்லை என உணர்ந்து தான் கண்ட கனவை அப்படியே ஒப்புவித்தாள்.
அவள் சொல்லி முடித்து விட்டு அவனின் முகம் பார்க்க, அதுவோ உணர்ச்சி துடைத்த முகமாக இருந்தது.
கோபமாகி விட்டானோ என அவள் உள்ளூர கலங்க, அடுத்த கணமே பக்கென சிரித்து விட்டான் ஜேம்ஸ். அவனுக்கு இப்படிக் கூட சிரிக்க தெரியுமா என அவள் விழி விரிக்க,
“ஆக மொத்தம் என்னைய ரத்தம் குடிக்கிற காட்டேரி எண்டே நினைச்சிட்டாய்..”
என மீண்டும் சிரித்துக் கொண்டு முன்னே போய் விட்டான்.
அவன் கோபப் படுவான் என அவள் நினைத்திருக்க, அவனது அந்த சிரிப்பு அவளுக்கு புத்துணர்ச்சியைக் கொடுத்தது.
அடுத்து இடப் பக்க அறையைத் திறக்க, ஒரு அழகான சமையலறை அவளை இரு கரம் நீட்டி வரவேற்றது.
ஒரு குட்டி பிரிஜ், மினி அடுப்பு, சமையலுக்கு வேண்டிய பாத்திரங்கள் என அந்த இடமும் படு சுத்தமாகவும் அழகாகவும் இருந்தது.
அவளைத் தாண்டி உள்ளே வந்தவன், பிரிஜ்ஜில் இருந்து அவளுக்கு தோடம்பழச்சாறு எடுத்துக் கொடுக்க, அவனுக்கு வில்லங்கமாகப் பாதி பழச்சாறைக் கொடுத்து விட்டு, மீதியை வாங்கி கடகடவென குடித்தவளுக்கு வயிறும் மனமும் குளிர்ந்து போனது.
“அவ்வளவு தானா..”
“என்ன..”
“நொறுக்குத்தீனி ஒண்ணுமே இல்லையா..”
“ஓ அதுவா..”
“அதே தான்..”
“அதெல்லாம் நான் வாங்கி வைக்கிறதில்லை..”
“என்ன வார்த்தை சொல்லி விட்டீர்கள்.. என் இத்தனூண்டு இதயம் சல்லி சல்லியா நொறுங்கிப் போச்சு போ.. இனி வாங்கி வைக்கோணும் சரியோ..”
“சரிங்க மேடம்..”
“சரி இப்ப என்ன இருக்கு கொறிக்க..”
“ப்புரூட்ஸ் இருக்கு..”
“அதையாவது குடுங்கோ தின்டு தொலைவம்..”
என்றவளின் கையில் ஜேம்ஸ் பழக் கூடையையே வைத்தான்.
அதில் இருந்த கொய்யாப் பழத்தை கொறித்தபடி
“இங்க நிண்டு எப்புடி வெளியால வானத்தை பாக்குறது.. முன் வாசல் பக்கமாவோ..”
என விளக்கம் கேட்க,
“எனக்கு பின்னால வா..”
என்று கொண்டு, சமையலறையை விட்டு வெளியே வந்தவன், கூடத்தில் மெத்தை கிடந்த இடத்தை நோக்கி நடந்தான்.
மெத்தைக்கு வலது பக்கம் கிடந்த திரைச்சீலையை விலக்க, அங்கே ஒரு கதவு, அதைத் திறக்க அங்கே விரிந்த காட்சியில் அடுத்த கட்டமாக கோதை மயங்கிப் போய் நின்றாள்.
அவளது முகத்துக்கு முன்னால் ஜேம்ஸ் சொடக்குப் போடத் தான் அவளுக்கு சுரணையே வந்தது. கிட்டத்தட்ட பால்கனி போன்று இருந்த அந்த இடத்தில் இடப் பக்கமாக ஒரு மர ஊஞ்சலும் வலப் பக்கமாக இரண்டு மரக் கதிரைகளும் கிடந்தன. அதைச் சுற்றி இருந்த அடைப்பும் மரத்தால் தான் செய்யப் பட்டிருந்தது. குடிலைச் சுற்றிப் படர்ந்திருந்த பூங்கொடிகள் அங்கேயும் காணும் இடம் யாவிலும் பற்றிப் படர்ந்திருந்தன.
போதாக்குறைக்கு இங்கிருந்து பார்க்கையில் மேற்கு வானம் அத்தனை அழகாகக் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தது.
தூரமாகத் தெரிந்த பச்சைக் காட்டின் வனப்பும், இடையே போன ஓடையின் வனப்பும், பலவிதமான பறவைகளின் காட்சியும் என பார்த்தால் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது அந்த இடம்.
கோதை அப்படியே வீட்டின் சுவரோடு சாய்ந்து, கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்து விட, அவளின் அருகில் ஜேம்ஸும் அமர்ந்து விட்டான்.
“காலம் முழுக்க இப்புடியே இருந்திடலாம் போல இருக்கே.. எவ்வளவு அழகு.. உலகத்துல இருக்கிற அழகு முழுக்க இங்க தான் கொட்டிக் கிடக்கிற போல கிடக்கு..”
என்றவளையே பார்த்திருந்த ஜேம்ஸ்
“பேபி.. நீ சொல்றது சரி தான்.. இந்த மாதிரியான ஒரு இடத்தை காட்டின எனக்கு என்ன செய்யப் போறாய்..”
எனக் கேட்க, அவனைத் திரும்பிப் பார்த்தவள்
“எதையோ எதிர்பார்த்து தானே கேக்கிறியள்.. என்னெண்டு கேளுங்கோ..”
எனச் சொன்னாள்.
கைகளைக் கட்டி காலை நீட்டி, வாகாக சுவரோடு சாய்ந்து கொண்டு மேற்கு வானத்தைப் பார்த்தான் ஜேம்ஸ். இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்டி விடும் என்பது போல, சூரியன் மறைந்து நிமிடங்கள் கரைந்திருந்தன.
என்ன கேக்கப் போறானோ என கோதை மூச்சைப் பிடித்துக் கொண்டு காத்திருக்க
“எனக்காக ஒரு பாட்டு பாடுறியா பேபி..”
என ஆழ்ந்த குரலில் கேட்டவனை இமை கொட்டாமல் பார்த்தாள் கோதை.
நேரம் ஆக ஆக அவள் மனதில் உயர உயரப் போய்க் கொண்டிருந்தான் ஜேம்ஸ்.
அவளது பார்வையில்
“என்னடி.. பாட்டு பாடுறியோண்டு தானே கேட்டன்.. ஓம் எண்டால் பாடு இல்லாட்டிக்கு இல்லையெண்டு சொல்லு.. அதுக்கேன் அப்புடிப் பாக்குறாய்..”
என லேசாகக் குரல் தடுமாறக் கேட்டவன், கோதைக்கு புதிது.
அந்த அசுரனுள் இருந்த அடுத்த பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தாள் கோதை. அவனின் அழகான அன்பான பரிமாணத்தில் கொஞ்சம் சலனமும் தடுமாற்றமும் அவளுள் மெல்ல மெல்ல நடந்து கொண்டு தான் இருந்தது.
அவனைப் பார்த்திருந்த விழிகளை விலக்கி மேற்கு வானத்தைப் பார்த்தவள்
“என்ன பாட்டு..”
என பதிலுக்கு கேட்டாள்.
“லவ் ஸோங்னு கேட்டால் நீ உதைப்பாய்.. அதனால ஏதாவது தத்துவ பாட்டா பாடு..”
என ஜேம்ஸ் சொல்லி முடிக்கவும், மீண்டும் ஒரு முறை அவனைப் பார்த்து விட்டு அந்தப் பாடலைப் பாடத் தொடங்கினாள் கோதை.
“அழகு மலராட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதைக் கேள்
என் சிலம்பொலியும்
புலம்புவதைக் கேள்..
விரல் கொண்டு மீட்டாமல்
வாழ்கின்ற வீணை
குளிர்வாடை கொஞ்சமாமல்
கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு
இருவிழியில் வரும் பொழுது..”
என அவளது உள்ளுணர்வுகள் வெடித்துப் பரவ, அவளின் குரலில் அந்தப் பாடல் அவளின் நிலையை பிரதிபலிப்பது போல வெளிப் பட்டது.
“ஆ.. ஆகாயம் இல்லாமலே ஒரு
நிலவு தரை மீது தள்ளாடுது..
ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும்
ஆடாமல் தலை சாயுது..
தாளத்தில் சேராத தனி பாடல்
ஒன்று சங்கீதம் காணாமல் தவிக்கின்றது..
விடியாத இரவேதும் கிடையாது
என்று ஊர் சொன்ன வார்தைகள் பொய்யானது..
வசந்தம் இனி வருமா
வாழ்வினிமை பெருமா
ஒரு பொழுது மயக்கம்
ஒரு பொழுது கலக்கம்
பதில் ஏதும் இல்லாத கேள்வி..”
எனப் பாடிக் கொண்டே போனவள்
“தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை வாழ்வில்
எதற்கு இந்த இளமை
வேறென்ன நான் செய்த பாவம்..”
என்ற வரிகள் பாடும் போது, கோதையின் மூடியிருந்த இமைகளின் ஊடே கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது.
கோதை பாடலை பாடி முடிக்கவும் அந்த இடமே மயான அமைதியைத் தத்தெடுத்துக் கொண்டது. தன் கண்ணீரை அவன் பார்த்து விடக் கூடாதென நாசுக்காக துடைத்தவள் மெல்ல நிமிரவும், ஜேம்ஸ் தெற்குப் பக்கமாகத் திரும்பி நின்றிருந்தான்.
பின்னால் இருந்து பார்க்கும் போதே, அவன் இறுகிப் போய் நிற்பது அப்படியே தெரிந்தது. அவள் மெல்லப் போய் அவனைத் தொடுவதற்கு முதல், வேகமாகத் திரும்பியவனது முகம் அதுவரை இருந்தவனா இவன் என்பது போல இறுகி இருக்க
அதற்கு தோதாக கடினக் குரலில்
“வீட்டுக்கு போகலாம்..”
என்றபடி அவன் முன்னே செல்ல, வேறு வழியில்லாமல் அவனைத் தொடர்ந்தாள் கோதை.
படிகளில் அவளை இறக்கி விடும் போதும் சரி, கீழே இறங்கி வீடு போய் சேரும் வரையும் சரி அவன் அவளது முகத்தைப் பார்க்கவே இல்லை.
அதுவரை இருந்த அழகான நேரம் சட்டென்று இருண்டது போல இருக்க, கோதையும் பேசாமல் தன்னறைக்குள் புகுந்து கொண்டாள்.