அசுரனின் குறிஞ்சி மலரே.. 34

5
(20)

குறிஞ்சி மலர்.. 34

ஜேம்ஸின் அருகில் மணப்பெண்ணாய் அவன் கட்டிய தாலியை சுமந்தபடி தலை குனிந்து அமர்ந்திருந்த கோதைக்கு, கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.

இப்படியொரு திருப்பம் தன் வாழ்வில் வருமென்று அவள் கனவு கூட கண்டிருக்கவில்லை. ஆனாலும் அவளும் சராசரி பெண்கள் போல கணவன், குழந்தை என ஒரு திருப்திகரமான வாழ்க்கை வாழ வேண்டும் என ஆசைப்படாதவள் இல்லை.

அவளுக்கு தன்னை முதலில் மணம் முடித்த வாகீசன் மீது, திருமணம் முடித்த புதிதில் எந்த ஈர்ப்பும் வரவேயில்லை. மாறாக அவனது சிநேகிதமான அணுகுமுறையில், மரியாதை அவளுக்கு நிறையவே இருந்தது. போகப் போக அவனைத் தனக்குப் பிடித்து விடும் என அவள் தனக்குத் தானே சொல்லிக் கொண்ட நேரத்தில் தான் அவன் இறந்தான்.

தில்லையம்பலத்தின் வீட்டில் இருக்கும் போது தான் தனக்கு நிம்மதியே கிடைத்ததில்லை. புகுந்த வீட்டிலாவது அது கிடைக்கும் என எதிர் பார்த்தவளுக்கு அங்கும் ஏமாற்றம் தான் மிஞ்சியது.

கோதை இயல்பிலேயே கலகலப்பான பெண் என்பதால் தான் அவளால், அவளுக்கு நடந்த கொடுமைகளை தாண்டி வர முடிந்திருந்தது. இதே வேறு பெண்ணாக இருந்திருந்தால் அவளைப் புதைத்த இடத்தில் புல் என்ன பூவரசம் மரமே வளர்ந்திருக்கும் என்பது தான் உண்மை.

இந்த திடீர் திருமணத்தை எப்படி எடுத்துக் கொள்வது என அவளுள் பெரிய போராட்டமே நடந்து கொண்டிருந்தது. தனது பெயருக்கு களங்கம் வரக் கூடாது என்பதற்காக தானே என் கழுத்தில் தாலி கட்டியிருக்கிறான் இந்த வெள்ளைக்காரன் என்கிற எண்ணம் அவளது மனதில் ஆழமாய் பதிந்து போய் விட்டிருந்தது.

மெல்ல நிமிர்ந்து பக்கத்தில் இருந்தவனைப் பார்த்தாள் கோதை
“காளியாத்தா.. என்னைய எங்க கொண்டு வந்து விட்டிருக்கிறாய்..”
என அவளது வாய் முணுமுணுக்க, அவளது பார்வை அவனை விட்டு விலகவேயில்லை.

எதேச்சையாக அவளைப் பார்த்த ஜேம்ஸோ குறுகுறுனு பார்க்கிறாளே கண்டு பிடிச்சிடுவாளோ என நினைத்தானோ தெரியவில்லை, உடனே முகத்தை வேண்டுமென்றே இறுக்கமாக வைத்துக் கொண்டான். அப்போது தானே அவனுக்கும் இது பற்றி ஒன்றும் தெரியாது என்றும், இது திடீர் திருமணம் தான் என்றும் அவள் நினைத்துக் கொள்வாள். அதை விட்டு முகமெல்லாம் பிரகாசமாக இருந்தால் அவள் கண்டு பிடித்து விட மாட்டாளா. 

ஜேம்ஸின் கடின முகத்தை பார்த்ததும் கோதைக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. இவ்வளவு தூரத்துக்கு பிடிக்காமல் எதற்கு என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும். என்ன தான் கௌரவத்தை காப்பாற்ற வேண்டும் என்றாலும் இப்படியா பிடிக்காத பந்தத்துக்குள் இணைவது என யோசனை செய்தவள். ஏதோ நடந்து தொலையட்டும் என்ன தான் நடக்கிறது பார்ப்போம் என நினைத்து மீண்டும் தலையைக் குனிந்து கொண்டாள்.

அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் திருமணச் சடங்குகள் அனைத்தும் முடிவடைந்து, ஜேம்ஸின் திருமண நாளுக்காக அங்கே வேலை செய்த அனைவருடைய குடும்பத்தினருக்கும் திருமண விருந்து நடந்தது.

அதைத் தொடர்ந்து வந்த றிஜிஸ்டார் மூலம், கோதை சட்டப்படி ஜேம்ஸின் மனைவியாகி விட, அவள் ஜேம்ஸ்பீட்டர்ஃபோல் பூங்கோதை ஆனாள். தன் கையணைவில் தன் புத்தம் புதிய மனைவியை வைத்துக் கொண்டு, அவள் தான்
மிஸஸ் ஜேம்ஸ்பீட்டர்ஃபோல் என மீடியாவின் முன் அறிமுகப் படுத்தினான் கோதையின் அசுரன். எல்லாவற்றையும் ஒரு இறுக்கத்துடன் எந்தவொரு ரியாக்ஷனும் இல்லாமல் செய்து கொண்டிருந்தாள் கோதை.

ஜீவோதயத்தின் வழக்கப்படி சமையலறையினுள் முப்பத்தெட்டு வேலையாட்களும் கைகட்டி நிற்க, புதுப் பானையில் பால் காய்ச்சினாள் கோதை. இதற்கு இந்த வீட்டின் மொத்த உரிமையும் வீட்டுக்கு வந்த மருமகளுக்கு போகிறது என அர்த்தம். இனி அவளுக்கு ஒரு மருமகள் வரும் வரை அவள் தான் இந்த அரண்மனைக்கு எஜமானி என்பது அங்கு ஆண்டாண்டாய் எழுதப் படாத சட்டம்.

ஜேம்ஸின் பரம்பரை நகைகள் ஒரு லாக்கரில் பூட்டப் பட்டு, அதன் சாவி ஜேம்ஸிடம் தான் இருந்தது.

அதை கோதையிடம் கொடுப்பதற்காக ஜேம்ஸ் எடுத்து வர, அவனைப் பிடித்து தடுத்து நிறுத்தினார் வியாகேசு.

“இப்ப என்ன செய்யப் போறாய் நீ..”

“இந்த சாவியை பேபியிட்டை குடுக்க போறன்..”

“உன்னைய எவ்வளவு பெரிய அறிவாளி எண்டு நினைச்சன்..”

“வை..”

“நீ பொசுக்குனு இவ்வளவு மதிப்புள்ள சாவியை அவளிட்டை தூக்கி குடுத்தா அவள் என்ன செய்வாள் தெரியுமோ..”

“ஹப்பியாயிடுவா..”

“அது தான் இல்லை..”

“ஏன்..”

“உன்னைய சந்தேகமா பாப்பா..”

“புரியல்லை..”

“புரியுற மாதிரியே சொல்லுறன் கேளு.. இப்ப உனக்கும் அவளுக்கும் நடந்த கலியாணம் நாங்கள் பிளான் போட்டது எண்டு அவளுக்கு தெரியாது.. அவளைப் பொருத்தவரை இது எதிர்பாராத விதமா உன்ரை மானத்தையும் அவளுந்தை நீலாம்மாந்தை மானத்தையும் காப்பாத்த நடந்த கலியாணம்..”

“ஓ அது தெரியும்.. அதுக்கென்ன இப்ப..”

“அதுக்கென்னவோ.. இந்த சாவியைக் கொண்டு போய் நீ கோதையிட்ட குடுத்தால் அவள் சந்தோஷப் பட மாட்டாள்.. சந்தேகப் படுவாள்.. இதை ஏன் என்னட்டை தாரியள் எண்டு கேப்பாள்.. நீ உடன உன்னை மறந்து.. நீ தான் என்ரை உயிர் பயிர் எண்டுவாய்.. கோதைக்கு கோணல் மாணலா மூளை வேலை செய்ய வெளுக்கிட்டிடும்.. பிறகு அந்த கோமாவர்ஷியை நீ தான் கடத்தினி எண்டு தெரிஞ்சிடும்.. பிறகு நடக்கிறதை நான் சொல்லத் தேவையில்லை எண்டு நினைக்கிறன்..”

“சரி தான் பேபிக்கு மூளை கொஞ்சம் சார்ப் தான்.. ஸோ கண்டு பிடிப்பாள்..”

“கண்டு பிடிப்பாள் இல்லை.. கண்டு பிடிச்சிருவாள்.. கண்டு பிடிச்சாளோ அடுத்ததா நடக்குற சம்பவத்தை பத்தி நான் சொல்ல தேவையே இல்லை எண்டு நினைக்கிறன்..”

“அதை வேறை ஏன் நினைவு படுத்திரியள்..”

“என்ன பீட்டர் பயப்படுறியோ..”

“பயமா எனக்கா.. அதுகும் எம் பொண்டாட்டி கிட்டேயா.. இந்த பீட்டரை பத்தி என்ன நினைச்சீங்கள்..”

“பயப்பிடுறீயோண்டு தான கேட்டனான்.. உன்ரை பொண்டாட்டி பத்தி நான் பேசவே இல்லையே.. நீயாவே சொல்லாமல் சொல்லுறாய்.. இதுல இருந்தே தெரியுது..”

“என்ன தெரியுது..”

“அதை என்ரை வாயால வேறை சொல்லோணுமோ.. அது கூட பரவால்லை இந்த பீட்டரை பத்தி என்ன நினைச்சீங்கள் எண்டு கேட்டீயே.. உன்னைப் பத்தி என்னென்னவெல்லாமோ நினைச்சனேடா.. இப்புடி பொசுக்குனு கவுந்திட்டியே..”

“போதும் போதும்..”

“ம்க்கும்.. இதுக்கொண்டும் குறைச்சல் இல்லை..”
என வியாகேசு பொய்யாக அலுத்துக் கொண்ட வேளை, நீலரூபி அங்கே வந்தார்.

வந்தவரோ நேராகப் போய் ஜேம்ஸின் கைகளைப் பிடித்துக் கொண்டு
“தம்பீ.. ஏதவோ என்ரை கோதை நல்லா இருக்கோணும் எண்டுறதுக்காகவும்.. நீங்கள் அவளை கலியாணம் செய்ய ஆசைப் பட்டதாலயும் தான் நான் இவ்வளவு தூரம் கஷ்டப் பட்டன்.. அதைப் போல அவளையும் ஒரு மாதிரி வேப்பிலையடிச்சு உங்களுக்கு கட்டி வைச்சிட்டன்.. இனியாவது அவள் நிம்மதியா இருக்கோணும்.. உங்களை நம்பி தான் நான் இருக்கிறன்.. ஆனா நாங்கள் செய்தது யாருக்குமே தெரியக் கூடாது..”
எனக் கண்ணீர் விட, அவர் செய்த உதவியை அவனால் மறக்க தான் முடியுமா. நீலரூபி செய்த உதவியை வியாகேசு மறுபடி நினைவுகூர்ந்தார்.

இன்று காலை முகத்தை தூக்கி வைத்தபடி தன்னறைக்கு வந்த வியாகேசின் காதுகளில் ஜேம்ஸ்
“இப்ப எதுக்கு முகத்தை தூக்கி வைச்சிட்டு சுத்துறியள்.. நான் சாக்லேட்டு நிற பேபியைத் தான் கலியாணம் கட்டப் போறன்..”
எனச் சொல்ல, முதலில் புரியாமல் விழித்த வியாகேசுக்கு அது கோதை என்பது புரிந்து போனது.

“டேய் உண்மையாவோடா..”
என சந்தோஷம் தாங்க முடியாமலும், அவன் சொன்னதை நம்ப முடியாமலும் வியாகேசு கேட்க, அவரின் தலையில் வைத்து சத்தியம் செய்ததோடு மட்டுமன்றி, திருமணம் முடிந்து ஒரு கிழமைக்கு பிறகு நடத்த வேண்டிய மணமக்கள் வரவேற்பிற்கான அழைப்பிதழை கொண்டு வந்து அவரிடம் நீட்டினான்.

அதில் அழகான தமிழ் எழுத்தில், மணமகள் என்பதன் கீழ் பூங்கோதை என அச்சடிக்கப் பட்டிருந்தது.

“டேய் அப்போ நீ.. அண்டைக்கு அந்தாளிட்டை.. உங்கடை மகளை கட்டிக் கொள்ள டபுள் ஓகே எண்டு சொன்னது கோதையை நினைச்சு தானா..”
எனக் கேட்க, அழகாக புன்னகைத்து ஆமாம் என்பது போல தலையசைத்தான் ஜேம்ஸ்.

அவனது அந்தப் புன்னகையைக் கண்டதுமே வியாகேசுக்கு ஒரே சந்தோஷமாகப் போய் விட்டது.

அதே சந்தோஷத்தோடே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு அந்த சந்தேகம் வரவே, அதை அவனிடமே கேட்டார்.

“இதெல்லாம் சரி தான் பீட்டர்.. ஆனா எனக்கொரு கேள்வி இருக்கே..”

“என்னது..”

“ஒருவேளை.. கோதைக்கு உன்னைய பிடிக்கேல்லை எண்டால்..”

“புரியேல்லை..”

“இல்லை அவளுக்கு உன்னை கலியாணம் கட்டுறதுல இஷ்டம் இல்லாட்டிக்கு..”

“அதெப்படி இஷ்டம் இல்லாமல் போகும்..”

“என்னடா உப்புடி கேக்கிறாய்.. அவளிந்தை தங்கச்சியை தானே நீ கட்டப் போறாய் எண்டு அவள் இப்ப வரை நினைச்சுக் கொண்டு இருக்கிறாள்..”

“அதுக்கு..”

“அதுக்கோ.. தான் வந்து வெளியால நிண்டால் அதை அபசகுனமா எல்லாரும் பாக்குங்கள்.. அதால தங்கச்சி கலியாணத்துல ஒரு தடங்கலும் வரக் கூடாது எண்டிட்டு அவள் வெளியாலயே வராமல் உள்ள அடைஞ்சு கிடக்கிறாள்.. இப்புடி யோசிக்கிறவள் தன்னால தன்ரை தங்கச்சி கலியாணம் நிண்டால் பேசாமல் இருப்பாளோ.. இல்லாட்டிக்கு உனக்கு கழுத்தை தான் நீட்டுவாளோ..”

“இந்தா இதைப் பத்தி எல்லாம் எனக்கு தெரியாது.. அவள்டை சம்மதத்தோட அவளை கட்டுறது எண்டால் கட்டுவன்..”

“இல்லாட்டிக்கு..”

“சம்மதம் இல்லாட்டிக்கும் கட்டுவன்..”

“என்னடா உப்புடி சொல்லுறாய்..”

“வேறை எப்புடி சொல்ல..”

“உனக்குப் பிடிச்சால் மட்டும் போதுமோ அவளுக்கு பிடிக்க வேண்டாமோ..”

“அதைப் பத்தி எல்லாம் எனக்கு தெரியாது.. அவ தான் எனக்கு பொண்டாட்டி..”

“சரி அவள் உன்னைய வேண்டாம் எண்டு விட்டு விலகிப் போனால்..”
என வியாகேசு கேட்டு முடித்திருக்கவில்லை அதற்குள்
“அவளைக் கொன்னுட்டு நானும் செத்துப் போயிடுவன்..”
என ஆக்ரோஷமாகக் கத்திய படி
முன்னால் கிடந்த மேசையை தூக்கியடித்து, பக்கத்தில் கிடந்த சோடாப் போத்தலை உடைத்து, தன் வலது கையை கிழித்திருந்தான் ஜேம்ஸ்.

வியாகேசு பதறி போய் அவனைப் பிடித்துக் கொண்டு
“என்ன இது பீட்டர்.. நீ மாறவே இல்லையடா..”
என ஆற்றாமையோடு சொல்ல
“நான் ஏன் மாறணும்.. அவளை என் கூடவே இருக்க சொல்லுங்கோ நான் மாற மாட்டன்..”
எனக் கிட்டதட்ட கர்ஜித்தான் ஜேம்ஸ்.

அவனை கஷ்ட ப்பட்டு கடினப் பட்டு சமாதானப் படுத்தி அமர வைப்பதற்குள், வியாகேசுக்கு விழி பிதுங்கி விட்டது.

“சரி அவளுந்தை மனசை நோகடிக்காமல் எப்புடி தாலி கட்டுறதுனு யோசிச்சு வைச்சுக்கிறாய்..”

“அதூ..”

“என்னடா இழுவையே சரியில்லை..”

“உங்களை கடத்தி வைச்சு பிளாக்மெயில் பண்ணலாம் எண்டு தான் முதல் யோசிச்சன்.. ஆனா பேபிடை மனசு நோகாமல் இருக்கணுமே.. அதுக்கு ஐடியா சொல்லுங்கோ..”

“ஓ உன்ரை போதைக்கு நானோடா ஊறுகாய் எல்லாம் என்ரை நேரம்.. அந்த கோமாவர்ஷியை பிடிச்சு எங்கையாவது அடைச்சு வைப்பமே..”
என வியாகேசு கேட்டுக் கொண்டு இருக்கையில் நீலரூபி அங்கே வந்தார்.

வியாகேசு திருதிருவென விழிக்க, கையோடு கொண்டு வந்த முதலுதவி பெட்டியை வைத்து ஜேம்ஸின் கைக் காயத்துக்கு மருந்து போட்டு விட்டார் நீலரூபி.

மருந்து போட்டுக் கொண்டே
“ரூபாவை எங்கையாவது அடைச்சு வையுங்கோ.. கோதை உங்களை கலியாணம் கட்ட சம்மதம் சொல்லுவாள்.. அதுக்கு நான் பொறுப்பு.. நேரமாகுது போங்கோ போய் ரூபாவை எங்கையாவது மறைச்சு வையுங்கோ..”
எனச் சொன்ன நீலரூபியை இருவருமே ஆச்சரியமாகப் பார்க்க,
“எனக்கு என்னோட கோதை நிம்மதியா இருந்தா மட்டும் போதும்..”
என்று விட்டு அவர் போய் விட்டார்.

அதன் பிறகு ரூபாவை தூக்கி, அவளை மிரட்டி கடிதம் எழுத வைத்து, கோதையை இந்த திருமணத்துக்கு சம்மதிக்க வைக்க, நீலரூபி பேசி என ஜேம்ஸ் கோதை திருமணம் சட்டென்று முடிந்தது.

இதோ இப்போது கோதைக்கு நடந்த திருமணம் கொடுத்த நிம்மதியில், நீலரூபி ஜேம்ஸின் கையைப் பிடித்துக் கொண்டு தன் மனதை அவனிடம் சொல்ல, அவர் இறுதியாக சொன்ன
“யாருக்குமே தெரியக் கூடாது..”
என்ற வார்த்தை அப்போது அங்கே தாயைத் தேடிக் கொண்டு வந்த கோதையின் காதில் விழுந்து தொலைத்தது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!