குறிஞ்சி மலர்.. 50
தன் வாகனத்தை மறித்தவர்களை நோக்கி முன்னேறிய ஜேம்ஸுக்கு வழமை போல கோபம் ஏறி, நிதானம் காற்றில் பறந்து போய் விட, ஒற்றையாளாக அத்தனை பேரையும் புரட்டிப் போட்டான்.
காரின் உள்ளே இருந்தபடி நடந்த சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்த கோதைக்கு, பயத்தோடு ஆச்சரியமும் சேர அவளது முட்டைக் கண்கள் விரிந்தன.
தன் கணவன் இத்தனை பலசாலியா என்று நினைத்து பெருமை கொள்வதா, அல்லது இப்படிப் போட்டுப் புரட்டி எடுத்தால் பொலிஸ் வந்து பிடித்துக் கொண்டு போய் சிறையில் அடைக்க மாட்டானா எனப் பயம் கொள்வதா என அவள் தடுமாறி நின்ற அந்த வேளை அது நடந்தது.
ஜேம்ஸ் தன் முன்னால் நின்றிருந்த மூவரை தனியாளாக சமாளித்துக் கொண்டு நிற்க, அவனுக்கு பின்னால் நின்றிருந்த ஒருவன் ஒரு இரும்புக் கம்பியால் ஜேம்ஸின் மண்டையில் அடிக்க பதுங்கிப் பதுங்கிப் போய்க் கொண்டிருந்தான்.
கோதைக்கு இருதயமே ஒரு கணம் நின்று விட்டதைப் போல இருக்கவே, என்னங்கோ என்று கத்தவே முடியாத அளவுக்கு பயத்தில் தொண்டையும் அடைத்துப் போய் விட, வாகனத்தை விட்டு வேகமாக இறங்கி அவனை நோக்கி ஓடினாள்.
ஜேம்ஸை அடிக்கவென்றே அவர்கள் கொண்டு வந்திருந்த கட்டையொன்று கீழே கிடக்கவே, அதை எடுத்து தன் கணவனின் பின்னால் கம்பியோடு போனவனின் முதுகில் ஓங்கியடித்தாள் கோதை.
அந்த அடியை கொஞ்சமும் எதிர்பாராத எதிராளி, அடியின் வேதனையிலும் கோபத்திலும் தன்னை அடித்த நபரை அடிக்கும் வேகத்தில் கத்திக் கொண்டே திரும்பினான்.
அவனது கத்தலில் திரும்பிப் பார்த்த ஜேம்ஸ், கட்டையோடு நின்றிருந்த மனைவியைப் பார்த்ததும் என்ன நடந்திருக்கும் என்பதை நொடியில் புரிந்து கொண்டான்.
கட்டையை கையில் பிடித்துக் கொண்டு பத்திரகாளி போல நின்றிருந்தவளை, அந்த நொடியிலும் இரசித்தவன் தன்னை சுதாரித்துக் கொண்டு அவள் பக்கத்தில் போகும் முன்னர், எதிரே நின்றவன் தன் கையில் வைத்திருந்த இரும்புக் கம்பியை அவளை நோக்கி ஓங்கினான்.
அதைப் பார்த்த ஜேம்ஸ் பதறிக் கொண்டு அதைத் தட்டி விடவும், கோதையின் தலையில் படப் போன கம்பி, அவளது காலில் லேசாகப் பட்டது.
லேசாகப் பட்டாலும் கூட, கம்பி பட்ட வேகத்தில் கோதைக்கு லேசாக வலிக்க, அவள் காலைப் பிடித்துக் கொண்டு கீழே இருந்து விட்டாள். வலியில் லேசாக சுருங்கிய மனைவியின் முகத்தை ஒரு நொடி தான் பார்த்தான் ஜேம்ஸ்.
அவ்வளவு தான் சுத்தி நின்ற அத்தனை பேரையும் இரத்தம் கொட்ட அடித்து துவைத்துப் போட்ட ஜேம்ஸுக்கு வெறி அடங்கவேயில்லை.
கீழே இருந்தபடி தன் கணவனையே பார்த்த கோதைக்கு பயத்தில் மயக்கமே வந்து விட்டது. எல்லோரையும் அடித்துப் போட்ட ஜேம்ஸ், மனைவி மயங்கிச் சரிய முன் அவளைத் தூக்கிக் கொண்டு ஹாஸ்பிடல் விரைந்தான்.
ஹாஸ்பிடல் போவதற்குள்ளேயே காருக்குள் கோதை தானாகவே மயக்கம் தெளிந்து கண்கள் திறந்து விட, ஜேம்ஸுக்கு அப்போது தான் மூச்சே வந்தது.
“என்ன பேபீ நீ.. பொசுக்கு பொசுக்குனு மயக்கம் போட்டு விழுறாய்.. டாக்டரிட்டை சொல்லி குளுக்கோஸ் ஏத்த சொல்லோணும்..”
என அவன் சிரித்துக் கொண்டே சொல்ல, அவனை வெறித்துப் பார்த்தாள் கோதை.
“என்னடி பேபீ.. என்னைய பாசமா பாக்குற போல கிடக்கு..”
“நான் ஊருக்கு போகோணும்..”
“அப்போ நானு..”
“எனக்கு இங்க இருக்க பிடிக்கேல்லை..”
“அப்போ நான் என்ன செய்ய..”
“உங்களுக்கு பிடிச்சால் நீங்கள் இருங்கோ.. என்னைய அனுப்பி விடுங்கோ..”
“அனுப்பாட்டிக்கு..”
“புரியேல்லை..”
“உன்னை ஊருக்கு அனுப்பாட்டிக்கு எண்டு கேட்டன்..”
“நேராப் போய் உங்கா தெரியுதே அந்த கடலுக்குள்ள குதிச்சு செத்து போயிடுவன்.. என்ரை பிணத்தை எரிக்க எண்டாலும் நீங்கள் ஊருக்கு அனுப்பி தானே ஆகோணும்..”
என கோதை சொல்லி முடிக்கவும், தனது வலப் பக்கத்து கார்க் கண்ணாடியை தன் கை முஷ்டியால் குத்தி உடைத்திருந்தான் ஜேம்ஸ்.
கண்ணாடி உடைந்து ஒன்றிரண்டு துகள்கள் அவனது கரத்தில் அப்படியே கிடக்க, கையில் இருந்து இரத்தம் வழிந்தது அவனுக்கு. அவனது இந்த செய்கையை கொஞ்சமும் எதிர்பாராத கோதை
“ஐயோ என்னங்கோ நீங்கள்..”
என்று கண்கள் கலங்க, அவனது கையைப் பற்றிக் கொண்டாள்.
வேகமாக அவளது கையை உதறியவன், கார்க் கதவை திறந்து கொண்டு வெளியே இறங்கி நின்று கொண்டான்.
அவன் குணம் தெரிந்தும் வார்த்தையை விட்ட தன்னை மானசீகமாகத் திட்டிக் கொண்டவள், காரை விட்டு இறங்கி அவன் பக்கம் ஓடினாள்.
முகம் இறுக, சாலையை வெறித்துக் கொண்டு நின்றவனின் தோற்றம் எப்போதும் போல பயத்தைக் கொடுத்தாலும், வழமை போல தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனை நெருங்கினாள் கோதை.
அவனது கோபத்தை அவளால் மட்டுமே சமாதானம் செய்ய முடியும். அவள் சமாதானம் செய்தால் மட்டுமே அவன் மனமிரங்கி மலையிரங்கி வருவான் என்பதை, இத்தனை நாள் அவனோடு குப்பை கொட்டியதில் அவள் கண்டு கொண்டு விட்டாள்.
கணவனை மெல்ல நெருங்கி, அவனது கன்னத்தைப் பிடித்து தன் பக்கம் திருப்ப, அவனோ பாறைக் கல்லு போல அசைவேனா என முகத்தை திருப்பியே நின்றிருந்தான்.
“சாரிப்பா சாரி.. ஏதோ லூசுத்தனமாக் கதைச்சிட்டன்.. என்னில பிழை தான் இனி இப்புடி கதைக்க மாட்டன் சாரிப்பா..”
என அவள் அவனின் நாடியைப் பிடித்துக் கொண்டு கெஞ்ச, அப்படியே தான் நின்றிருந்தான் ஜேம்ஸ்.
பலவாறு கெஞ்சிப் பார்த்தவள் கடைசி ஆயுதமாக, சுற்றும்முற்றும் யாரும் வருகிறார்களா என பார்த்து விட்டு, அவனது உயரத்துக்கு எக்கி அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.
அவளது அந்த முத்தம் கொஞ்சமே கொஞ்சம் அவனை இளக்கினாலும், கிராதகன் வேண்டுமென்றே அசையாமல் நிற்க, கோதை நொந்தே போனாள்.
அப்போது பார்த்து அவளது, இரும்புக் கம்பியால் அடி வாங்கிய கால் பக்கம் லேசாக வலிக்கவே, சட்டென்று கால்களைப் பிடித்துக் கொண்டு
“ஐயோம்மா.. வலிக்குதே..”
எனக் கத்திக் கொண்டே கணவனை ஓரக் கண்ணால் பார்த்தாள் கோதை.
அவளது அந்தக் கத்தலுக்கு பலன் இருந்தது. இறுக்கமாக நின்றிருந்தவன் வேகமாக குனிந்து
“என்னடி ரொம்ப வலிக்குதா..”
என்றபடி அவளது கால்களை மெல்ல வருட, நிமிர்ந்து நின்றவளுக்கு அப்பாடா என்று பெருமூச்சே வந்து விட்டது.
எந்த சூழ்நிலையிலும் மனைவிக்கு ஒன்றென்றால் உடனே துடித்துப் போகும் கணவன் கிடைப்பதெல்லாம், மனைவி செய்த தவம் அல்லவோ, அப்படிப்பட்ட ஒருத்தன் தனக்கு கணவனாய் கிடைத்ததில் கோதைக்கு அத்தனை பெருமை.
அதனால் தான் அவனைப் பற்றிய உண்மை தெரிந்த போது கூட அவளால் அவனைத் துளி கூட வெறுக்க முடியவில்லை. ஏனெனில் ஜேம்ஸ் எத்தனையோ அநாதை குழந்தைகளை படிக்க வைக்கிறான், முதியவர்களுக்கு தங்க இடம் செய்து கொடுத்திருக்கிறான், இன்னும் நிறைய சமூக தொண்டுகளை மறை முகமாக செய்து வருகிறான். இதெல்லாம் வியாகேசின் மூலம் அவள் அறிந்த, அவன் அவளிடம் சொல்லாத உண்மைகள்.
கணவன் உயர்வான சேவைகள் செய்யும் நல்லவன் என்றாலும், அவனின் இந்த தொழில் பற்றி அறிந்ததும் அவன் மேல் அவளுக்கு நிறையவே கோபம் இருந்தது.
அவன் இப்படித் தொழில் செய்வதற்கு ஏதும் தக்க காரணம் இருக்கும், அதைக் கண்டு பிடித்து இதில் இருந்து அவனை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு விட வேண்டும் என நினைத்தவள், அவனைத் தன்னால் மாற்ற முடியும் என முழுதாக நம்பினாள். அதற்கு தான் கொஞ்சமாவது கோபமாக இருக்க வேண்டும் என்று தான் கோதை இவ்வளவு நேரம் கோபமாக இருந்ததே.
ஆனால் அவளது கோபம் போன இடம் தெரியாமல், இப்போது அவனது கோபத்தை சமாதானம் செய்யும் நிலைக்கு கொண்டு வந்த கணவனை என்ன செய்ய என்பது போல அவள் நின்றிருக்க
“வா பேபீ.. ஹாஸ்பிடல்கு போலாம்..”
என்று கொண்டு அவளை காரினுள் அமர வைக்கப் போனவனது காயம் பட்ட கரத்தை பிடித்துக் கொண்ட கோதை, அதில் மெல்ல முத்தம் வைக்க, அவளிடம் இருந்து மெல்ல கையை உருவிக் கொண்டவன் அவளை காரினுள் அமர வைத்தான்.
அதன் பிறகு ஹாஸ்பிடல் சென்று சேரும் வரை இருவருமே ஒன்றுமே பேசிக் கொள்ளவில்லை.
அவனது பாராமுகம் கோதைக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. அவனது சாதாரணமான பாராமுகத்தையே தாங்கிக் கொள்ள முடியாத தன்னால், அவனது பிரிவை எப்படி தாங்கிக் கொள்ள முடியும் என அவள் தன்னுள் கேள்வி கேட்டு, அந்தக் கணமே எப்பாடு பட்டாவது அந்த போதை தொடர்பான தொழிலை அவனையே விட வைப்பேன் என தனக்குள் சத்தியம் செய்து கொண்டாள்.
வைத்தியசாலை வளாகத்தினுள் கார் போய் நின்றதும், காரை விட்டு இறங்கி வந்த ஜேம்ஸ், மனைவியை தூக்க வர,
“ஐயோ வேண்டாம்..”
என்று பின்னால் போனவளை முறைத்தவன்
“இன்னிக்கு நீ வாய் திறந்த வரைக்கும் போதும்.. மூடிட்டு வாடி..”
என்றபடி அவளைத் தூக்கிக் கொண்டு உள்ளே போனான்.
அந்த ஹாஸ்பிடலில் அவனை எல்லோருக்கும் தெரிந்திருக்கும் போல, அவனை யாருமே எதுவுமே கேட்கவில்லை.
நேராக அங்கிருந்த வைத்தியரின் பேர்ஷனல் அறைக்கே கோதையைத் தூக்கிக் கொண்டு போனவன், அவளை அங்கே அமர வைக்க, அந்த வைத்தியரும் சிநேகமாக முறுவலித்து விட்டு, கதையளக்காமல் அவளுக்கு மருந்து எழுதிக் கொடுத்து அனுப்பினார்.
ஜேம்ஸுக்கு முன்னாலே அறையை விட்டு வெளியே வந்த கோதை, வெளியே இருந்த கதிரைகளில் ஒன்றில் அமர்ந்து கொள்ள, ஜேம்ஸ் அந்த வைத்தியரோடு சிநேகமாக ஓரிரு வார்த்தைகள் பேசிக் கொண்டிருந்தான்.
ஜேம்ஸின் வருகைக்காக எதிர்பார்த்தபடி, அந்த வைத்தியசாலையை நோட்டம் விட்டுக் கொண்டிருந்த கோதையின் பார்வை ஒரு இடத்தில் நிலைத்து நின்றது.
கோதை அமர்ந்திருந்த இடத்தில் இருந்து சற்றுத் தள்ளி இருந்த வராண்டாவின் சுவர் முழுவதும், அழகழகான குழந்தைகளின் படங்கள் மாட்டப் பட்டிருக்க, கீழே கிடந்த கதிரைகளில் கர்ப்பிணிப் பெண்கள் அமர்ந்திருந்தார்கள்.
அவர்களை ஆசையோடு பார்த்த கோதை, தன் வயிற்றை மெல்லத் தடவிக் கொடுத்தாள். சில நொடிகளில் அவளது கரம் அப்படியே நிற்க, வேகமாக எதையோ மனக் கணக்கு போட்டுப் பார்த்தவள்
“ஒரு வேளை அப்புடி இருக்குமோ..” எனத் தனக்குத் தானே கேட்டுக் கொள்ள, அப்போது பார்த்து வெளியே வந்த ஜேம்ஸ்
“என்னடி தனியா புலம்பிட்டு இருக்காய்..”
எனக் கேட்டான்.
பக்கத்தில் வந்து நின்ற கணவனின் முகத்தை அண்ணாந்து பார்த்தவளுக்கு, அவன் இப்போது கோபமாக இல்லை என்பது தெரிந்து விடவே, எழுந்து அவனுக்கு பக்கத்தில் நின்று கொண்டு அவனது கையைப் பிடித்தாள்.
“என்னடி..”
“அப்புடியே உங்கடை காயத்துக்கும் மருந்து போடுங்கோவன்..”
“ஒண்ணுந் தேவையில்லை.. வா போகலாம்..”
“அப்புடி எல்லாம் வர ஏலாது.. இப்ப நீங்கள் மருந்து போடப் போறியளோ இல்லையோ..”
“போட முடியாதுடி..”
“அப்ப நானும் இந்தக் குழுசையளைப் போட மாட்டனாக்கும்..”
“போட்டுத் தொலையிறன்டீ..”
என்று கொண்டு ஜேம்ஸ் அங்கிருந்து வேகமாக உள்ளே போக, அவன் உள்ளே போய் விட்டதை உறுதி செய்து கொண்ட கோதை, கர்ப்பிணிப் பெண்கள் அமர்ந்திருந்த இடத்தில் இருந்த பெண் வைத்தியரை நோக்கி நடந்தாள்.