அசுரனின் குறிஞ்சி மலரே.. 51

4.9
(17)

குறிஞ்சி மலர்.. 51

தன்னை பரிசோதனை செய்த, அந்த பெண் வைத்தியர் சொன்ன பதிலில், கோதை சந்தோசம் தாங்க முடியாமல் திக்கு முக்காடி போனாள்.

வைத்தியசாலைக்கு வந்த இடத்தில், கர்ப்பிணி பெண்களை பார்த்ததும் தனக்கு உண்டான உடல் உபாதைகளுக்கு காரணம், தானும் உண்டாகி இருக்கிறேனோ என்ற எண்ணம் கோதைக்கு வந்ததால் தான், அவள் தன்னை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டாள்.

அவள் நினைத்தது போலவே அவள் தன் கணவன் மீது கொண்ட நேசத்திற்கான அடையாளம், அவள் நேசம் கொண்ட கணவனின் உதிரம் அவள் வயிற்றில் தோன்றி விட்டிருந்தது.

“நிசமாவே நான் அம்மாவாகப் போறேனா டொக்டர்..”

“நிஜமா தான்மா..”

“அச்சோ.. எனக்கு சந்தோஷத்துல ஒண்டுமே புரியேல்லை டொக்டர்..”

“வாழ்த்துகள்மா.. இனி நீங்கள் ஒரு ஆளில்லை.. இரண்டு ஆட்கள்.. உங்க ஹெல்த் அப்புறம் உங்க மைண்ட் இரண்டுமே நல்லா இருக்கோணும்..”

“புரியுது டொக்டர்.. டொக்டர் நான் இப்போதைக்கு பயணம் செய்யலாமோ..”

“உங்க ஹெல்த் கொஞ்சம் வீக்கா இருக்கும்மா.. குழந்தை உருவாகி ஒரு மாசம் தான் ஆகுது.. மூண்டு மாசம் முடியும் வரை நீங்கள் பயணம் எதுகுமே செய்ய வேண்டாம்..”

“சரி டொக்டர்.. மூண்டு மாதம் ஆன பிறகு பயணம் செய்யலாம் தானே..”

“தாராளமா செய்யலாம்.. அதுக்கு நீங்கள் நல்லா ஹெல்த்தை பாத்துக் கொள்ளோணும்..”

“டொக்டர்.. இன்னும் ஒரு சின்ன உதவி..”

“என்னம்மா..”

“இந்த மாதிரி நேரத்துல எது சாப்பிடோணும் சாப்பிடக் கூடாது.. என்ன செய்யோணும் செய்யக் கூடாது.. எண்டுறதை எனக்கு சொல்லிக் குடுக்க முடியுமோ..”

“கண்டிப்பாம்மா.. எங்களோட வேலையே அது தானே.. அடுத்தது அடிக்கடி செக்கப்புக்கு வாங்கம்மா..”

“கண்டிப்பா டொக்டர்.. ரொம்ப நன்றி..”
என்று கொண்டு வெளியே வந்த கோதைக்கு சந்தோஷத்தில் என்ன செய்வது என்றே தெரியவில்லை.

வயிற்றில் குழந்தை உண்டாகி விட்டது, என்பதை அறிந்து கொண்ட நொடியில் இருந்து, நிலத்துக்கு நொந்து விடுமோ என்பது போல, மெதுவாக நடக்கத் தொடங்கியவள், இதோ இப்போதும் வயிற்றில் ஒரு கையை வைத்துக் கொண்டு, மெல்ல நடந்து போய் ஒரு கதிரையில் அமரவும், ஜேம்ஸ் அவளைத் தேடி வரவும் சரியாக இருந்தது.

“போலாமா பேபீ..”

“கொஞ்சம் நேரம் இங்கினை இருந்திட்டு போகலாமோங்கோ..”

“ஏன்டி கால் வலிக்குதோ..”

“இல்லைங்கோ..”

“பிறகு ஏன்டி..”

“சும்மா தான்.. இப்புடி பக்கத்துல இருங்கோவன்..”
என்றபடி கணவனின் கரத்தைப் பிடித்து இழுத்து தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டாள் கோதை.

அவள் இழுத்த வேகத்தில், அவள் பக்கத்தில் இருந்து கொண்டவனது, கரத்தை தன் இரண்டு கைகளாலும் இறுகப் பற்றிக் கொண்டு, அவனது தோளில் தலையை சாய்த்துக் கொண்டாள் கோதை. தன்னியல்பாக மனைவியின் தலையை வருடிக் கொடுத்தான் ஜேம்ஸ்.

“பேபீ.. கால் வலிச்சா சொல்லுடி..”

“ம்ம்..”

“இப்போ பரவாயில்லை தானே..”

“ம்ம்..”

“மருந்து கசக்குது எண்டிட்டு போடாமல் எறியக் கூடாது..”

“ம்ம்..”

“ஒழுங்கா மருந்து எடுத்தால் தான்.. அப்புறம் வலிக்காது சரியா..”

“ம்ம்..”

“கேசப்பா கூட கதைச்சியோ..”

“ம்ம்..”

“சரி தான்.. இப்போ வெளிய எங்கையாச்சும் போலாமா..”

“ம்ம்..”

“எங்க போலாம்..”

“ம்ம்..”

“ஏதாவது சாப்பிட ஆசைப் படுறியா..

“ம்ம்..”

“என்ன சாப்பிடணும் சொல்லேன்..”

“ம்ம்..”
என்ற மனைவியை தலை சரித்துப் பார்த்தவன், அவள் எல்லாத்துக்குமே ம் கொட்டிக் கொண்டு இருக்கிறாள் என்பதை அப்போது தான் உணர்ந்தான்.

மெல்லிய சிரிப்போடு குறும்பு மின்ன
“எனக்கொரு கிஸ் குடுக்கிறியா பேபி..”
என அவன் கேட்க
“அதெல்லாம் குடுக்க முடியாது போடா..”
என்றபடி எழுந்து நடந்தவளை, உதடு சுளித்தபடி பார்த்தவன்,
“ரொம்ப உஷார்டி நீ.. இது மட்டும் தெளிவா கேட்டிச்சாக்கும்..”
என்று புலம்பாத குறையாக தொடர்ந்தான்.

…………….

தங்களது அறைக்குள் வந்ததுமே, கோதை பேசாமல் போய்ப் படுத்துக் கொண்டு விட்டாள். அவளுக்கு நிறைய யோசிக்க வேண்டி இருந்தது.

ஜீவோதயத்துக்குள் அவள் முதன் முறை வரும் போது, அந்த வீட்டுக்கும் அவளுக்கும் எது விதமான சம்மந்தமும் இருக்கவில்லை. ஐந்து மாதங்கள் முடிந்த பின்னர் தான் வெளியே போய் அடுத்து என்ன செய்வது என்பதை பற்றி மட்டும் தான் யோசனை செய்து கொண்டிருந்தாள். அதோடு அந்த வீட்டோடும் ஒரு ஒட்டாத தன்மையும் அவளுக்கு இருந்தது.

அந்த நேரத்தில் அவளுக்கு அங்கே இருப்பதற்கான ஒரு பிடிப்பை கொடுத்தது வஞ்சியும் வியாகேசும் தான், இந்த மாதிரியான ஒட்டாத மனநிலையோடு அவர்கள் இருவரின் அன்பில் மட்டுமே அந்த வீட்டில் இருந்த கோதைக்கு, எதிர்பாராத விதமாக தான் எலிசபெத் மற்றும் செபமாலை பற்றிய விவரங்கள் தெரிய வந்தது.

தான் யாரோவாக இருந்த போதே அவர்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என நினைத்தவளுக்கு, இப்போது அவர்கள் உறவான பின்னர் மட்டும் பேசாமல் இருக்க முடியுமா.  அவர்கள் இருவர் பற்றியும் ஜேம்ஸிடம் சொல்ல முயன்ற தருணங்களில் எல்லாம் ஏதேதோ தடை வந்து சேர, இதோ இப்போது அவனுக்கு மனைவியான பின்னர் கூட அவள் இன்னும் அது பற்றி வாய் திறக்கவில்லை.

அது தான் இப்போது அவளது மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தது. தனக்கு நல்லதொரு வாழ்க்கை கிடைத்ததும் அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை மறந்து விட்டேனோ என தன்னையே நொந்து கொண்டவள், அவர்களை அந்த கொடுமைகளில் இருந்து மீட்டு, தன் கணவனையும் அந்த ஆபத்தான தொழிலில் இருந்து மீட்டு கொள்ள வேண்டும் என தன் மனதோடு பேசிக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு ஜேம்ஸின் குணம் நன்கு தெரியும். அவனிடம் நேரடியாக இந்த தொழிலை விட்டுவிடு என்றோ, அவர்களுக்கு அப்படி ஒரு ஆபத்து இருக்கிறது என்றோ சொல்ல முடியாது என்பதை அவள் இப்போது நன்கு புரிந்து கொண்டு விட்டிருந்தாள்.

அவள் அது தொடர்பாக வாய் திறந்தாலே நீ என்னை கவனித்து பாசமாக இருந்தால் மட்டும் போதும் பேபி, உனக்கு வேறு வேண்டாத வேலையோ எண்ணமோ வேண்டாம் என முடித்து விடுவான்.

“பேபீ..”

“ம்ம்..”

“என்ன தூக்கம் வருதோ..”

“ம்ம்..”

“சரி தூங்கு.. நாம நாளைக்கே இங்கேருந்து கிளம்புறோம்..”

“ம்ம்..”
என பழக்க தோஷத்தில் ம் கொட்டியவள், உடனே
“இல்லையில்லை..”
என்று கொண்டு வேகமாக எழுந்து அமர்ந்து கொண்டாள்.

“என்னடீ.. எதுக்கு இப்புடி விழுந்து முறியிறாய்..”

“எப்போ சிறிலங்கா போப் போறம் எண்டு சொன்னியள்..”

“நாளைக்கு.. ஏன் இப்பவே போகணுமோ உனக்கு..”

“என்னங்கோ..”

“ம்ம்.. நான் தான் சொல்லு..”

“இப்போதைக்கு போக வேண்டாமே..”

“அப்போ..”

“அது..”

“ஏன் பேபீ.. டயர்டா இருக்கியோ..”

“ஓம் ஓம்..”

“சரி எப்போ போலாம் நீயே சொல்லு..”

“ஒரு ரெண்டு மாசத்துக்கு பிறகு..”

“என்னடீ.. அதிசயமா இருக்கு.. சிறிலங்கா போகோணும் போகோணும் எண்டு உசிரை எடுத்தியே..”

“ம்ம்.. அது அப்போ..”

“அப்போ இப்போ..”

“ரெண்டு மாசத்துக்கு பிறகு போகலாமுங்கோ பிளீஸ்..”

“ஹேய் பேபீ.. நீ விருப்பப் பட்டால் ரெண்டு மாசம் என்ன ரெண்டு வருஷமே இங்க இருக்கலாம் போதுமா..”

“அவ்வளவு எல்லாம் வேண்டாம்.. ரெண்டு மாசம் போதும்..”

“உன் இஷ்டம்டி..”
என்று கொண்டு எழப் போன கணவனின் கன்னத்தை பிடித்து ஆட்டி,
“அப்புறம் இன்னுமொரு விஷயம்..”
என்று சொன்னவளை அணைத்துக் கொண்டு
“இப்ப என்ன நீ சொல்றதை மட்டும் தான் நான் கேட்கணும்.. உன் கூடவே இருக்கணும்.. கண்ட கண்டபடி கோபப் பட கூடாது அது தானே..”
என்ற கணவனின் தோளில் சாய்ந்து கொண்ட கோதையின் கரம் தன் வயிற்றை மெல்ல தடவிக் கொடுத்தது.

மனதோடு தன் மகவோடு பேசிக் கொண்டாள்
“செல்லம்.. அம்மா உங்கப்பாவை எப்பாடு பட்டாவது அந்த போதைக் கடத்தல் தொழில்ல இருந்து விலக வைச்சிட்டு தான்.. உன்னைப் பத்தின விஷயத்தை சொல்லுவேன்.. இது உன் மேல சத்தியம் குட்டி.. இந்த சத்தியம் ஏன் தெரியுமா.. உன்னை பத்தி உங்கப்பாட்டை சொல்லோணும் சொல்லோணும் எண்டு என்ரை மனசு கிடந்து துடிக்குது.. இந்த துடிப்பு இருந்தால் தான் என்னால வேகமா எதையாவது யோசிச்சோ இல்லாட்டிக்கு செய்தோ அவரை நல்ல வழிக்கு கொண்டு வர முடியும்.. சீக்கிரமா உங்கப்பாவை நான் நல்ல வழிக்கு கொண்டு வந்திருவன்.. அவருக்கு அதோட சீரியஸ் புரியலை.. புரிய வைக்கிறன்..”

…………….

கோதை தான் குழந்தை உண்டாகி இருப்பதை பற்றி தன் கணவனிடம் மூச்சு கூட விடவில்லை. அதே நேரத்தில் வேறு யாரிடமும் கூடச் சொல்லவில்லை.

ஆனால் வயிற்றில் உன் உயிர் வளர்கிறது என்கிற உண்மையை அவனிடம் சொல்லாது போனாலும், அதை மறைக்க பெரும்பாடு பட்டுப் போனாள்.

அவுஸ்திரேலியாவில் இருந்த இரண்டு மாதங்களும், மசக்கை அவளைப் படுத்தி எடுத்தது. அதோடு எப்போதும் விழுந்து எழும்பி வேகமாக நடப்பவள், இப்போதெல்லாம் மெல்ல மெல்ல அன்னநடை நடக்கத் தொடங்கியிருந்தாள். ஜேம்ஸ் தான் அவளைப் பார்த்து பயந்து போனான். அவனைச் சமாதானம் செய்வதற்குள் இவளுக்கு முழு சத்தும் வடிந்து போக, மசக்கையில் உடல் வாடியும் போக, சரியாக மெலிந்து போனாள் கோதை.

இரண்டு மாதங்கள் முடிவடைந்து இருவரும் தாய் நாடு திரும்பும் நாளும் நெருங்கி விட்டிருந்தது.

“பேபீ..”

“ம்ம்..”

“என்கிட்டே இருந்து ஏதாச்சும் மறைக்கிறியாடி..”

“ஏன் அப்புடிக் கேக்கிறியள்..”

“உனக்கு உடம்புக்கு ஏதவோ செய்யுது.. பாரு அடிக்கடி வாமிட் பண்றாய்.. ஹாஸ்பிடல் வா எண்டாலும்.. நீ நினைக்கிற நாளுல மட்டும் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டு.. என்னைய வெளியிலயே வாட்ச்மேன் மாதிரி நிக்க வைச்சிடுறாய் உள்ள வரவும் விடுறதில்லை.. ஏதும் எண்டால் சொல்லிடுடீ.. எனக்கு கொஞ்சம் பதட்டமாவே இருக்கு..”

“அச்சோ.. என்ன நீங்கள்.. நான் தான் எனக்கு எந்த வியாதியும் இல்லை எண்டு சொல்லீட்டனே பிறகு என்ன..”

“பிறகு ஏன்டி இப்புடி வாமிட் பண்றாய்.. போதாக்குறைக்கு தடிக்கு சேலை கட்டி விட்ட கணக்காய் வந்திட்டாய்.. என்னோட அந்த குண்டுபூசணி பேபீயை நான் ரொம்ப மிஸ் பண்றேன்.. அவளை காணவே முடியேல்லை..”

“அதெல்லாம் ஒண்டுமில்லை..”

“அப்போ எதுக்குடி இப்போல்லாம் அடிக்கடி ஹாஸ்பிடல் போறனீ.. இப்போ சொல்லப் போறியோ இல்லையோ..”
என குரலில் அழுத்தம் குடுத்து கேட்டவனின் தோற்றம் அவன் எந்தளவுக்கு பொறுமையாக இருக்கிறான் என்பதைக் காட்டவே, அவனைச் சமாதானம் செய்வதே பிரதானம் என்ற நிலையில் ஒரு பொய்யை சொன்னாள் கோதை.

“அது ஒண்டுமே இல்லையுங்கோ.. எங்களுக்கு கலியாணம் ஆகி நாலு மாசம் ஆச்சுதே.. இன்னும் நமக்கு குழந்தை உண்டாகேல்லையே எனக்கு ஏதும் குறை இருக்கோ எண்டுதான் ஆசுப்பத்திரிக்கு போறனான்..”

“லூசாடி நீ.. வெடிங் ஆகி முழுசா நாலு மாசம் கூட ஆகேல்லை.. அதுக்குள்ள என்னடி அவசரம்.. சரி உன் எணணப்படி நமக்கு குழந்தை இன்னும் உண்டாகல்லைன்னா.. நீ மட்டும் செக்கப் போனா சரியாகிடுமா.. எனக்கும் ஏதும் குறை இருக்கலாம் தானேடி..”

“இல்லையுங்கோ.. அது எனக்கு தான்..”

“இங்க பாரு பேபீ.. குழந்தை பிறக்கும் போது பிறக்கட்டும்.. இல்லை நமக்கு பிறக்கவே பிறக்காதுனாலும் போகட்டும்.. ஏதவோ நமக்கு கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆகியும் குழந்தை பிறக்காத போல நடந்து கொள்ளக் கூடாது.. தேவையில்லாமல் உடம்பை கெடுத்துக் கொள்ளக் கூடாது.. இப்ப தானே விளங்குது.. அங்க உனக்கு ஏதவோ மாத்திரை குடுக்கினம் போல அது தான் அதை போட்டு தான் அலர்ஜிக் ஆகி வாமிட் பண்றாய் போல.. இனி நீ ஹாஸ்பிடல் பக்கம் போய் பாரு பிறகு உனக்கு இருக்கு..”

“அச்சோ இல்லைங்கோ..”

“வாயை மூடிட்டு.. பெட்டியை அடுக்கு.. நாளைக்கே சிறிலங்கா கிளம்புறம்..”
என்றவனது குரலில் அவனின் டென்ஷன் கோதைக்கு புரியவே வாயை மூடிக் கொண்டாள் அவள்.

இங்கே அவனை சமாளித்தாகி விட்டது, அங்கே நீலும்மாவிடம் இதை மறைக்க முடியாதே என்ன செய்வது, என யோசனை செய்தபடி தன் பொருட்களை அடுக்கத் தொடங்கினாள் கோதை.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!