
முக்கியமான வேலை இருந்ததால் நேரமே எழுந்து கொண்ட அர்ஜுன், முதலில் தேடியது தன் மனைவியை தான்.
மெல்லிய குறட்டை சத்தத்தோடு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தால் அவள். தன் மீது போர்த்தியிருந்த போர்வையை விலக்கிவிட்டு அவள் அருகில் வந்த அர்ஜுன், வேகமாக அவளது நெற்றியை தொட்டு பார்த்து,
“இன்னும் காய்ச்சல் இருக்கே” என்று வருத்தத்துடன் கூறியவன், விலகி இருந்த போர்வையை நன்கு அவள் மேல் போர்த்தி விட்டு, தனது காக்கி சீருடையில் ஆயத்தமாகி கீழே வந்தான்.
வேகமாக நடந்து வரும் தன் மகனை கண்டதும் ப்ரீத்தா,
“வா பா” என்று புன்னகை முகமாக அவனை உணவு உண்ண அழைக்க, உடனே மறுத்த அர்ஜுன்,
” சாரிமா முக்கியமான வேலை இருக்கு நான் இப்போ கிளம்புறேன். அப்புறம் ம்மா நேத்து நைட்டு ஜுவாலாக்கு ரொம்ப காய்ச்சல்” என்று சொன்னதுமே பதறிய ப்ரீத்தா, “அச்சோ என்னை எழுப்பி இருக்கலாமே ” என்க,
” அம்மா ரிலாக்ஸ்” என்று தன் தாயை சமாதானம் படுத்திய அர்ஜுன்,
” நீங்க பயப்படற அளவுக்கு ஒன்னும் இல்ல, நானே டேப்லெட் கொடுத்து தூங்க வச்சிட்டேன். இப்போ காய்ச்சல் லைட்டா இருக்கு, நல்லா தூங்கிட்டு இருக்கா அதான் நான் எழுப்பல அவளா எந்திரிக்கும் போது எழும்பட்டும், அப்போ அப்போ மட்டும் போய் பார்த்துக்கோங்க, அவ எழுந்ததும் எப்படி இருக்கான்னு என்கிட்ட சொல்லுங்க. பீவர் கன்டின்யு ஆனா நானே வந்து ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன் ” என்று சொல்லவும் மகனை புன்னகையுடன் பார்த்த ப்ரீத்தா,
” இதத்தான்டா நான் எதிர்பார்த்தேன். ஒரு பொண்ணு முதல்ல தன் ஹஸ்பண்ட் கிட்ட எதிர்பார்க்கிறதே கேர் அண்ட் ரெஸ்பெக்ட் தான். எப்பவும் இதே அக்கறையோட அவள பாத்துக்கோ. அது போதும் மத்ததெல்லாம் சீக்கிரமா சரியாகிடும். ” என்றார்.
அதற்கு , ” அக்கறையும் மரியாதையும் எனக்கு எப்போதுமே ஜூவாலா மேல உண்டுமா.” என்ற தன் மகனை புன்னகையுடன் அனுப்பி வைத்த ப்ரீத்தா நேராக பூஜை அறை நோக்கி வந்தவர்,
” சீக்கிரம் அர்ஜூன் மனசு மாறி ஜூவாலாவோட சந்தோஷமா, வாழனும் . எல்லாமே சீக்கிரம் சரியாகனும், அப்போ தான் மதுவை மறுபடியும் வீட்டுக்கு அழைச்சிட்டு வர முடியும்.
இங்கிருந்து போனதுல இருந்து மது என்கிட்ட பேசவே இல்ல. எனக்கும் அவ கிட்ட பேசவே குற்ற உணர்ச்சியா இருக்கு, சந்தியா அவள நல்லா பாத்துக்குவா தான், ஆனாலும் வேறொருத்தர் வீட்ல அவள தங்க வைக்கிறதுல எனக்கு விருப்பமே இல்லை.
சீக்கிரம் எல்லா பிரச்சினையும் சரி பண்ணி குடுங்க. மதுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுத்தா தான் என்னால நிம்மதியா இருக்க முடியும் ” என்று கடவுளிடம் மனதார வேண்டிக் கொண்டார்.
@@@@@@@@@
கார் மருத்துவமனை வளாகத்தை அடைந்ததும் தன் இருக்கையில் இருந்து இறங்கி வந்த வீரா மதிக்கு கதவை திறந்து விட ,
“அதுக்குள்ள வந்துட்டோமா?!” என வீராவிடம் கேட்டபடி கீழே இறங்கினாள் மதுமதி .
அவனோ, “ஆமா மது வந்துட்டோம் வா ” என்று அவளை அழைத்து கொண்டு உள்ளே சென்றான் .
காட்டுமிராண்டி கூட்டத்தில் இருந்து விடுதலை பெற்ற உணர்வோடு நடந்த மதுவால் , அந்த அசுர வனத்தில் இருந்து தாம் தப்பித்து வந்துவிட்டோம் என்பதை இன்னுமும் நம்ப முடியவில்லை. சுகந்திர காற்றை மகிழ்ச்சியோடு சுவாசித்தவள்,
‘இது எந்த ஏரியா. ?சிட்டி மாதிரி தெரியலையே இங்க இருந்து எப்படி ஊருக்குள்ள போறது.? வீராகிட்ட இருந்து தப்பிக்க முடியுமா ? ஒருவேளை மாட்டிக்கிட்டா அந்த அரக்கன் என்ன பண்ணுவான்னு தெரியலையே?’ என ஆதித்யாவை விட துரியனை எண்ணி இன்னுமே மனதில் பயம் கொண்டவள் மறுநொடியே,
‘இதே மாதிரி வாய்ப்பு அடிக்கடி வராது மதி ஏதாவது பண்ணி தப்பிச்சிரு .’ என தன்னை தானே தேற்றியவள்,
‘ஒரு ஃபோன் கிடைச்சா எவ்வளவு நல்லா இருக்கும்’ என்று சிந்தித்தபடி வீராவுடன் நடக்காமல் நின்ற இடத்திலே தேங்கி நிற்க ,
வீரா தான் “வா மது” என்று அவளது சிந்தனையை கலைத்தபடி அவளது கையை பிடித்துக்கொண்டு உள்ளே அழைத்து சென்றான் .
அவர்கள் இருவரும் உள்ளே சென்றதும் தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்த ரிசெப்ஷனிஸ்ட் அவர்களை மரியாதையுடன் அழைத்து சென்று விஐபி அறையில் அமரச்செய்து குடிப்பதற்கு சூடான காஃபியை பரிமாறியவள் ,
“சார் இன்னும் அஞ்சு நிமிஷத்துல டாக்டர் வந்துருவாங்க. வேற எதுவும் வேணுமா சார்” என்று பணிவுடன் கேட்டாள்.
“நோ தேங்க்ஸ், டாக்டரை சீக்கிரமா வர சொல்லுங்க” என்றான் வீரா
“ஓகே சார்” என்றபடி அந்த அறையில் இருந்து அந்த பெண் வெளியேறிய மறுநொடி மது வீராவிடம் ,
“உன்னை இவங்களுக்கு தெரியுமா!”ஆச்சரியத்துடன் கேட்டாள் .
“ம்ம் தெரியாம எப்படி? இது எங்களோட ஹாஸ்ப்பிட்டல்.அதாவது ஆதித்யாவோட ஹாஸ்ப்பிட்டல். நம்ம ஆளுங்களுக்கு ஏதாவது அடிபட்டா இங்க தான் வருவாங்க. இங்க இருக்கிறவங்க எல்லாருமே நம்ம ஆளுங்க தான். ஸோ வெயிட் பண்ணவே தேவையே இல்லை சீக்கிரமா பார்த்துட்டு வீட்டுக்கு போய்டலாம் சரியா” என்றான் வீரா.
‘அச்சோ இது தெரியாம போயிட்டே மறுபடியும் அங்கேயா !?’ மதுமதியின் மனம் மலர்வதற்குள் வாடியது .
“ஏன் ஒருமாதிரி இருக்க ரொம்ப வலிக்குதா?” என்று வீரா கேட்கவும்,
“ஹெலோ வீரா” என்றபடி அங்கே வந்த ஆண் மருத்துவர்.வீராவின் கைகளை குலுக்கியபடி ஒரு சில வார்த்தைகள் பேசியவர், வீராவை வெளியே இருக்குமாறு கூறிவிட்டு மதுமதிக்கு வைத்தியம் பார்க்க தொடங்கினார்.
மதுமதியை பரிசோதித்த மருத்துவர் வீராவை உள்ளே அழைத்தார் .
“என்னாச்சு டாக்டர் சாதாரண தலைவலி தானே ?” அக்கறையோடு கேட்டான் .
“கொஞ்சம் அனிமிக்கா இருக்காங்க இந்த மருந்து சாப்பிட்டா.ப்ளட்க்கும் நல்லது. தலைவலியும் சரியாகிரும் ” என்றவர் மருந்து சீட்டை பணிப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு வீராவிடம் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து சென்றார்.
அவர் சென்றதும் மதுவோ வீராவிடம்,
” மருந்து வாங்கனுமே அவங்களே சீட்ட எடுத்துட்டு போறாங்க” என்றதும், அவளைப் பார்த்து புன்னகைத்த வீரா,
” பிரச்சனை இல்ல மது அவங்களே எல்லாம் வாங்கிட்டு வந்துருவாங்க” என்க, மதுவோ தலையில் இடி விழுந்த நிலையில் அமர்ந்திருந்தாள்.
வீரா மருந்து வாங்க செல்லும் இடைவெளியில் அவனை திசை திருப்பி விட்டு தப்பித்து செல்லலாம் என்று இருந்தவளுக்கு, இந்த விடயம் அதிர்ச்சியை கொடுக்க, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறினாள்.
தான் எண்ணியது நடக்கவில்லை என்றதுமே பதறிய மதுவால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சட்டென்று யோசிக்க முடியாமல் போக, வீராவோ பணிப்பெண் கொடுத்த மருந்தை வாங்கிக் கொண்டு மதுவையும் அழைத்துக் கொண்டு காரில் ஏறினான்.
“ரொம்ப வலிக்குதா மது சீக்கிரம் வீட்டுக்கு போய்டலாம், டேப்லெட் போட்டுட்டு நல்லா ரெஸ்ட் எடு சரியா ” என்ற வீராவிடம் சரி என்பதாய் தலையாட்டிய மதுவுக்கு, மீண்டும் அதே குகைக்குள் மாட்டிக்கொள்ள வேண்டுமே என்கிற எண்ணமே கோபத்தை கொடுக்க, என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே இருந்தவள் திடீரென்று தோன்றிய சிந்தனையில் முகம் மலர,
“வீரா யலைட் பிளாசாக்கு மட்டும் போகணும் கொஞ்சம் முக்கியமான திங்க்ஸ் வாங்கணும், போய்ட்டு வீட்டுக்கு போலாமே ” என்றாள். அதைக் கேட்டு வண்டியை ஓரமாக நிப்பாட்டிய வீராவோ,
” அங்கையா? அது சிட்டிக்குள்ள போகணும் மது, அவ்ளோ முக்கியமான திங்க்ஸா என்ன? இங்க எல்லாம் வாங்க முடியாதா” என்று கேட்டான்.
” அது லேடிஸ் விஷயம் ரொம்ப முக்கியம் அந்த ப்ராண்ட் வேற எங்கேயும் கிடைக்காது ப்ளீஸ், முக்கியம் வீரா ” கெஞ்சி கேட்டாள்.
“ஓ” வீராவோ யோசனையுடன் மதுவை பார்த்தவன், சில நொடிகள் கழித்து,
“சரி மது இவ்வளவு சொல்ற வாங்கிட்டே போய்டலாம் ” என்க மதுவோ மகிழ்ச்சியுடன் தலையசைத்துக் கொண்டாள்.
மருத்துவமனையைப் போல இந்த மால் ஒன்றும் அவர்களுடையது அல்லவே, போதாக்குறைக்கு விடுமுறை நாள் வேறு, நிச்சயம் கூட்டம் அலைமோதும், எளிதில் தப்பித்து விடலாம், என்று தன் மனதிற்குள் திட்டம் தீட்டியவள், தன் திட்டத்தை நிறைவேற்ற காத்திருந்தாள்.
@@@@@@@@
“என்னாச்சு இங்க வந்திருக்கோம்” என்ற ஜூவாலாவிடம்,
” எப்படியும் இந்த டிராஃபிக்ல வீட்டுக்கு போறதுக்கு ஒன் ஹவர் ஆயிடும், சாப்ட்டு முடிச்சுட்டு வீட்டுக்கு போகலாம், உனக்கு டயர்டா எல்லாம் எதுவும் இல்லையே ” என்று வினவினான் அர்ஜுன், சோர்வா அதுவும் அவளுக்கா? அவனோடு நேரம் செலவிடுவது என்றால் ஜூவாலாவுக்கு சோர்வு கூட பறந்து போகுமே, உற்சாகமாக அவள் இல்லை என்பதாய் தலையசைக்க,
“அப்புறம் என்ன உனக்கும் இங்க உள்ள புட் கோட் ரொம்ப புடிக்கும்ல வா” என்றான் அர்ஜுன்.
@@@@@
உள்ளே வந்தாயிற்று இனி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்கிற சிந்தனையுடனே மாலிற்குள் நுழைந்த மதுமதியால் தான் காண்பதை நம்பவே முடியவில்லை.
தன் எதிரே அர்ஜுனும் ஜூவாலாவும் ஏதோ பேசியபடி புட் கோட் பக்கம் செல்வதை கண்டவள், இனி தான் தப்பிக்க போவதை யாரும் தடுக்க முடியாது என்கிற மகிழ்ச்சியில் கண்கள் கலங்க அவர்கள் பின்னால் செல்ல போக அவளது கரங்களைப் பிடித்துக் கொண்ட வீரா,
“மது எங்க போற ஷாப் லெப்ட் சைட் இருக்கு வா” என்று அழைத்து சென்றான். மதுவோ வீராவை எப்படி திசை திருப்புவது என்று புரியாது அர்ஜுன் ஜூவாலா சென்ற திசையை பார்த்த படியே வீராவுடன் சென்றாள்.
பின் கடைக்குள் நுழைந்ததும் கைக்கு எட்டிய பொருட்களை எல்லாம் எடுத்து ட்ராலிக்குள் அள்ளிப் போட்டவள், ட்ராலியை நிரப்பிவிட்டு வேகமாக வீராவிடம் வந்து,
” வீரா எல்லாம் வாங்கிட்டேன் நீ பில் போடு நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு ஓடி வந்திடுறேன் ” என்க, அவள் திட்டம் புரியாது அவனும் சரி என்பதாய் புன்னகைத்தான்.
‘மன்னிச்சிரு வீரா எனக்கு வேற வழி தெரியலை’ என மனதிற்குள் கூறிய மது, வீரா பார்க்க கடையை விட்டு நிதானமாக வெளியேறியவள், அடுத்த நொடி வேகமாக அர்ஜுன் ஜூவாலாவை தேடி புட் கோட்டை நோக்கி விரைந்தாள்.
எங்கே வீராவிடம் மாட்டிக்கொண்டுவிடுவமோ என்கின்ற பதற்றத்தோடே புட் கோட்டிற்குள் நுழைந்து அவர்களை தேடியவளின் கண்களில் அவர்கள் படமால் போகவே மதுவுக்கு அழுகை வர ‘எங்க இருக்கீங்க ‘என கலங்கியவள் மீண்டும் அவர்களை தேடினாள்.
பதற்றத்தில் நெஞ்சம் தாறுமாறாய் துடிக்க சில நொடிகள் நிதானமாக சுற்றும் முற்றும் தன் பார்வையை சுழலவிட்டாள்.
அப்பொழுது கை கழுவும் இடத்தில் இருந்த கண்ணாடியை எதர்ச்சையாக பார்த்த மதுமதிக்கு , திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் நடுவே அர்ஜுன் மற்றும் ஜூவாலா உணவருந்தி கொண்டிருப்பது தெரிய, மகிழ்ச்சியுடன் கண்களை துடைத்துக் கொண்டு அவனை நோக்கி திரும்ப இருந்த கணம்,
“ஜில்லுனு ஜிகர்தண்டா சாப்பிடுறியா பேபி” என்ற குரல், அவள் காதருகே கேட்டது.
கர்ஜனையான அந்த குரலை கேட்டதுமே மதுமதிக்கு தன் பின்னால் நிற்பது யார் என்று தெரிந்து விட, மதுவால் நிமிர்ந்து கண்ணாடியை கூட பார்க்க முடியவில்லை, பயமும் கோபமும் அவளை நிலைகுலைய செய்ய, அடக்கப்பட்ட உணர்வுகளுடன் நின்றிருந்தாள்.
” உன் அக்காவும் உன் அக்கா புருஷனும் உயிரோட வீட்டுக்கு போகணும்ன்னா” என்றவன் ஒரு கணம் நிறுத்தி,
“ம்ஹூம் முதல்ல உயிரோட இருக்கணுமா” என்று அழுத்தமாக கேட்கவும் நிமிர்ந்து ஆதித்யாவின் கூரிய விழிகளை பார்த்தவள் ஆமாம் என்பது போல தன் தலையை அசைக்க,
” அப்ப என்ன பண்ணனும்னு உனக்கே தெரிஞ்சிருக்கும் ” என்றவன் சிரித்தபடி அவளை பார்த்து, “ஸ்மையில் ம்ம் ஸ்மையில்” என்க, அவளும் வேண்டா வெறுப்பாக அவனை பார்த்து புன்னகைத்தாள்.
ஆதித்யாவோ அத்தோடு நிறுத்தாமல் நேராக அர்ஜுன் அமர்ந்திருக்கும் டேபிளை நோக்கி செல்ல,
“இப்போ எங்க போறீங்க ” பதற்றத்துடன் வினவினாள் மதுமதி.
” இவ்வளவு ட்ராமா பண்ணி திட்டம் போட்டு வந்திருக்க, ஏசிபி சாரை பார்க்கலைன்னா நல்லா இருக்காதுல” என்ற ஆதித்யாவின் கரத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்ட மதுமதி,
“ப்ளீஸ் நான் சொல்றத கேளுங்க வேண்டாம் கிளம்பலாம்” கெஞ்சி கேட்டாள்.
அவளை ஆழ்ந்து பார்த்த ஆதித்யாவோ,
“அப்போ ஒரு கிஸ் குடு உன் பேச்சை கேட்கிறேன்” என்று சொல்லவும், அவனை முறைத்தவள் முகத்தை திருப்பி கொள்ள ஆதித்யாவோ நக்கலாக சிரித்தபடி அர்ஜுன் அமர்ந்திருக்கும் டேபிள் முன்பு சென்று அமர்ந்து,
” ஹலோ ஏ சி பி சார் வாட்ட அ ப்லசென்ட் சர்ப்ரைஸ்” என்றான்.
ஆதித்யாவையும் மதுவையும் அங்கு எதிர்பார்த்திறாத அர்ஜுனோ திகைப்புடன் அவர்களைப் பார்க்க, அவன் அருகில் இருந்த ஜூவாலாவுக்குமே அவர்களை அங்கே கண்டதில் அதிர்ச்சி தான், அர்ஜுனுக்கு மதுவை பார்த்ததில் என்ன உணர்வென்றே சொல்ல முடியவில்லை.
அதுவும் ஆதித்யாவின் கையணைவில் மதுவை பார்த்ததில், இதயத்தை யாரோ வேகமாக அழுத்துவது போல, ஒருவித வலியை உணர்ந்தவனுக்கு தொண்டை அடைத்து கொள்ள வார்த்தை வர மறுத்தது.
அப்பொழுது ஜூவாலா தான் வேகமாக சென்று மதுவை அணைத்துக் கொண்டாள். தன் தங்கையிடம் கேட்க வேண்டிய கேள்விகள் ஏகப்பட்டது இருந்தாலும், பொது இடம் என்பதால் மதுவின் நலனை மட்டும் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டாள்.
வெகு நாட்கள் கழித்து சந்தித்துக் கொண்டதில் சகோதரிகள் இருவரும் கண்ணீருடன் ஒருவரை ஒருவர் தழுவி கொண்டனர்.
அதன் பின் ஆதித்யாவை பார்த்து ஜூவாலா மரியாதை நிமித்தமாய் புன்னகைக்க, மதுவோ அர்ஜுனை பார்த்தாள். ஆனால் அவனது மொத்த பார்வையும் ஆதித்யா மீது தான் இருந்தது.
அர்ஜுனின் விழிகளில் தீப்பொறி தெறிக்கவில்லை அவ்வளவு தான், ஆதித்யாவை தன் கனல் விழிகள் தகிக்க முறைத்துக் கொண்டிருந்தான்.
ஆனால் ஆதியோ கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் அர்ஜுனின் கனல் விழிகளை நேருக்கு நேராய் பார்த்தவன் வேண்டுமென்றே, “அப்புறம் சகளை எப்படி இருக்கீங்க” என்க அர்ஜுனோ இன்னும் முறைக்க, ஜூவாலாவுக்கும் மதுவுக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
இதற்கிடையில் ஆதித்யாவோ,
” சகளன்னு சொல்றது ஏ சி பி சாருக்கு பிடிக்கல போல, அப்போ தம்பின்னு கூப்பிடவா ” தன் குரலில் ஏகத்துக்கு நக்கல் வழிய அவ்வாறு கேட்கவும், தலை கவழ்ந்த நிலையில் அமர்ந்திருந்த மதுவை ஒரு கணம் பார்த்த அர்ஜுன்,
“கால் மீ அர்ஜுன் ” என்றான் அழுத்தமாக.
“ஓகே அர்ஜுன் சார் ” என்ற ஆதித்யா ஜூவாலாவை பார்த்து,
” என்ன மா உன் ஹஸ்பண்ட் எப்பவுமே இப்படி வெரப்பா தான் சுத்துவாரா, இல்லை என்கிட்ட மட்டும் தான் இப்பிடியா ” என்று கேட்கவும் சங்கடமாக அவனைப் பார்த்து புன்னகைத்த ஜூவாலா ஏதோ பேச வரவும்,
“தட் இஸ் யுவர் லிமிட் மிஸ்டர் ஆதித்யா” என்று டேபிளை தட்டியபடி எழுந்து கொண்ட அர்ஜுன்,
” இந்த நடிப்பெல்லாம் என்கிட்ட வேண்டாம் , நம்ம ரெண்டு பேருக்குமே ஒருத்தரப் பத்தி ஒருத்தர் நல்லாவே தெரியும். சோ இந்த ஃபார்மல் பேச்செல்லாம் வேண்டாம்.
ஓப்பனா சொல்றேன் ஆதித்யா எவ்வளவு ஆடணுமோ ஆடிக்கோ, சீக்கிரம் உன் சாம்ராஜியத்தையே தர மட்டம் ஆக்குவேன் ” என்று ஆக்ரோஷமாக கூறவும் நிலைமை கை மீறுவதை உணர்ந்த ஜூவாலா,
” என்ன பேசிட்டு இருக்கீங்க அத்தான் அமைதியா இருங்க ” என்று அர்ஜுனின் காதில் கூறினாள்.
ஆனால் அளவுக்கு மிஞ்சிய கோபத்தில் இருந்த அர்ஜூனோ ஜுவாலாவின் பேச்சை காதில் வாங்காது, மதுவை பார்த்து,
” இப்ப நான் சொல்ற எல்லாமே உனக்கு தப்பா தான் தெரியும் மது , ஆனா உனக்கு ஒரு நாள் இவன் யாருன்னு புரிய வைப்பேன். அப்போ உனக்கு யாரும் இல்லைன்னு மட்டும் நினைச்சிடாத . உனக்கு நான் இருப்பேன் மது ” என்று கூறினான்.
அவ்வளவு தான் ஆதித்யாவின் முகம் சூடாகி சிவந்து விட்டது. அர்ஜுன் சொன்ன அனைத்தையும் எள்ளல் பார்வையுடன் எதிர்கொண்ட ஆதித்யாவால் மதுவிடம்,
‘உனக்கு நான் இருப்பேன்’ என்று அவன் கூறியதை மட்டும் அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
மர டேபிள் அதிரும் அளவிற்கு அதை ஓங்கி தட்டிவிட்டு,
” ஹவ் டேர் யூ ” என்று தான் அமர்ந்திருந்த சேரை பின்னால் உதைத்து தள்ளிவிட்டு எழுந்தான் ஆதித்யா.
ஆதியின் கோபத்தின் அளவை ஏற்கனவே அறிந்திருந்திருக்கும் மதுவோ மிகவும் பயந்து போனவள்,
“ஆதி ப்ளீஸ் ” தவிப்புடன் அவன் கரங்களைப் பிடித்துக் கொண்டு, அவனது கோபத்தை கட்டுப்படுத்த முயற்சித்தாள்.
அடங்கா ஆத்திரத்துடன், “நான் இருப்பேன்னா என்னடா சொல்ல வர ஹான்” என்று சீறிக்கொண்டு நின்றான் ஆதித்யா.
“எஸ் ஐ மீன் யிட், மதுக்கு நான் இருப்பேன் அன்னைக்கும் இருந்தேன் இன்னைக்கும் இருக்கேன் என்னைக்கும் இருப்பேன் ” என்று அர்ஜுன் அழுத்தமாக சொல்லி முடிக்கவில்லை,
கொதித்து போன ஆதித்யா “உன்னை” என்று அர்ஜுனிடம் பாய்ந்து அவன் சட்டையை பிடித்து விட, எங்கே இருவரும் அடித்து கொள்வார்களோ என்று பயந்த மது, வேகமாக இருவருக்கும் இடையில் வந்து, ஆதித்யாவை அணைத்து கொண்டவள் வலுகட்டாயமாக அவன் கன்னம் பற்றி, தன் முகத்தை பார்க்க வைத்து, “ப்ளீஸ் ஆதி போகலாம்” என்றாள் கண்ணீருடன். சில நொடிகள் அவள் விழிகளையே பார்த்திருந்தவன், தன் இறுக்கத்தை குறைத்து விட்டு, தனக்கும் மதுவுக்கும் இருக்கும் நெருக்கத்தை தன் விழிகளாலே அர்ஜுனுக்கு சுட்டி காட்டியபடி அவனை ஏறிட்ட ஆதித்யா,
“நல்லா கேட்டுக்கோ அன்னைக்கும் இன்னைக்கும் என்னைக்கும் மதி எனக்கு மட்டும் தான். மதி என் மகாராணி அவளுக்கு நான் இருக்கேன் அவளை எப்படி பார்த்துக்கனும்னு எனக்கு தெரியும் . சோ என் குடும்பத்தை பத்தி யோசிக்கிறத நிப்பாட்டிட்டு உன் மனைவியையும் உன் குடும்பத்தையும் பாரு.
அப்புறம் ஆம்பளையா இருந்தா ஏதோ சவால் விட்டியே என் சாம்ராஜ்யத்தையே அழிச்சு காட்டுவேன்னு அதை செஞ்சிட்டு என் முன்னாடி நின்னு பேசு டா” என்ற ஆதித்யாவின் பிடியில் இருந்த தனது சட்டையை வேகமாக பறித்தெடுத்த அர்ஜுன் அதே வேகத்துடன் அவனைப் பார்த்து,
“என் பொண்டாட்டியையும் என் குடும்பத்தையும் பார்த்துக்க எனக்கு தெரியும் அதை நீ சொல்ல வேண்டாம். அப்புறம் மிஸ்டர் ஆதித்யா எவ்வளவு ஆடனுமோ ஆடிக்கோ சீக்கிரம் உன் ஆட்டத்தை முடிச்சு வைக்கிறேன்” என்க,
முகம் கொள்ளா புன்னகையுடன் அர்ஜுனை பார்த்த ஆதித்யா,
“முடிஞ்சா செஞ்சிப்பாருங்க ஏ சி பி சார்” என்றவன் மதியின் கரத்தை பற்றிக்கொண்டு அங்கிருந்து செல்ல, செல்லும் அவர்களையே அர்ஜுன் அழுத்தமாக பார்த்துக் கொண்டிந்தான்.
அந்நேரம் சுற்றி இருந்த மொத்த கூட்டமும் தங்களையே பார்ப்பதை உணர்ந்த ஜூவாலாவோ, நிறைந்த விழிகளுடன் அர்ஜுனை ஒரு கணம் பார்த்தவள் அங்கிருந்து கிளம்பவும்,
” ஜூவாலா நில்லு” என்றபடி ஜூவாலாவை பின் தொடர்ந்து அர்ஜுன் செல்ல ஆனால் அவளோ வேகமாக அங்கிருந்து வெளியேறியவள் அர்ஜுன் தன்னை நெருங்குவதற்குள் ஆட்டோவில் ஏறி கிளம்பிவிட, ஜூவாலாவின் செயலில் பல்லை கடித்தான் அர்ஜுன்.
@@@@@@@@@
” நான் வரலைன்னா அவன் கூட போயிருப்பல்ல ” இறுகிய முகத்துடன் அவளை வெறித்து பார்த்தான் ஆதித்யா சக்கரவர்த்தி. மதுமதி அரண்டு போனாள். பயத்தில் இதயம் ‘ தட தட ‘ என ஓடியது. உள்ளங்கை முதல் மொத்த உடம்பும் வியர்வையில் குளித்தது .
கையில் பொருட்கள் அடங்கிய பையோடு நின்றிருந்த வீராவை கண்டாள், ‘ நம்புனதுக்கு நல்லா செஞ்சிருக்க ? ‘ ஐவிரல் பட்டு சிவந்திருந்த அவனது கன்னங்கள் மதுவை குற்றம் சாட்டியது .
வீராவின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் உதட்டை கடித்து கொண்டு தலை கவிழ்ந்தாள் மதுமதி .
” தலைவலி இப்போ எப்படி இருக்க பேபி “அடங்கியிருந்த அவன் குரலில் சூறாவளியின் சீற்றம் ஒளிந்திருப்பதை அறிந்த மதுமதியின் உடலில் நடுக்கம் பிறந்தது .’ பேபி ‘ என்னும் சொல்லில் இருந்த அழுத்தம். அவளை அச்சுறுத்தியது.
“…….”
” ஏதாவது சொன்னீங்களா எனக்கு கேட்கல ” – வேண்டமென்றே நக்கலாக கேட்டான் .
” ஸ்பீக் அவுட்” காட்டுக்கத்து கத்தினான்.
” சாரி “
” எதுக்கு ?”
“———————————” கண்களில் இருந்து கண்ணீர் மணிகள் உருண்டன.
மதுமதியின் வெளிறிய முகமும், வடியும் கண்ணீரும் வீராவை கலங்கடித்தது. அவள் மீது அவனுக்கும் கோபம் இருக்க தான் செய்தது. ஆனாலும் ஏனோ அவள் துன்பப்படுவதை அவனால் பார்க்க முடியவில்லை. அதனால் அவள் மீதுள்ள கோபத்தை ஒதுக்கிவைத்தவன் ,
” ஆதித்யா “- மதுவின் மீது ஆதித்யாவுக்கு இருந்த கோபத்தை திசை திருப்ப ஆதித்யாவை அழைத்தான் வீரா .
“… “
” ஆதி உன் கிட்ட கொஞ்சம் பேசணும் “
” ம்ம் லிசனிங் “- கேட்டுட்டு தான் இருக்கேன் ..மதியின் மீது இருந்த தன் பார்வையை அகற்றாமல் கூறினான் .
” ஆதி பேசணும்ன்னு சொன்னேன் “
” சொல்லுங்க சார். நீங்க என்ன சொல்ல போறீங்க ” இப்பொழுது அவனது பார்வை வீராவை எரித்தது .
‘ சொல்லி தான் பாரேன். அவளுக்கு சப்போர்ட் மட்டும் பண்ணு உன் மூஞ்சோடு சேர்த்து உன் பல்லையும் உடைக்கிறேன். என்கிட்ட சொல்லாம சுத்துற அளவுக்கு உனக்கு குளிர் விட்டு போச்சு ‘ என எண்ணியவனின் கை முஷ்டி இறுகியது .
‘ நான் பார்த்துகிறேன் ‘ கலங்கி போயிருந்த மதுவுக்கு தன் கண்களாலே தைரியம் கூறினான் வீரா. ‘ சாரி ‘ மதியின் கண்கள் மன்னிப்பை யாசித்தது. நொடி பொழுது நடந்த பார்வை பரிமாற்றம் தான். அதை கண்ட ஆதித்யாவின் விழிகள் தகித்தது .
“ஓ இதுவேரா !” இகழ்ச்சியில் ஆதித்யாவின் இதழ் வளைந்தது.
‘என்னை தவிர மற்ற அனைவரையும் பிடித்திருக்கிறது ??’ என திகுதிகுவென எரியும் ஆதித்யாவின் கனல் விழிகள் மதியை பஸ்மமாக்கி கொண்டிருக்க அப்பொழுது ,
“கொஞ்சம் ஈஸியா ஹண்டில் பண்ணு ஆதி” – என வீரா சொன்ன மறுநொடி.இதற்காக தான் காத்திருந்தவன் போல “ஹவ் டேர் யு. நீ எனக்கு சொல்லி தரியா” – உச்சஸ்தாதியில் கத்தியபடி வீராவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தவன். கரத்தில் இருந்த தன் அலைபேசியை தரையில் ஓங்கி எறிந்தான் .அலைபேசி சில்லு சில்லாக சிதறியது .
” என்ன பண்றீங்க ஆதி ..” என வீராக்காக பதறியபடி தன்னை நெருங்கிய மதுவை.
“ஏய் ஸ்டே தேர் என்ன ம்ம்ம் துடிக்கிற. அங்கையே நில்லு” தீவிரமாக ஆதித்யா எச்சரிக்க. அதிர்ந்தபடி பின்வாங்கினாள் .
செய்வதை செய்து விட்டு. மழைக்கு கூட அஞ்சும் பூனையை போல அழுது கொண்டு இருப்பவளை காண காண இளகும் தன் மனதை எண்ணி பல்லை கடித்தவன். ‘ எல்லாம் நடிப்பு. மத்தபடி பயமே இல்லை. இன்னைக்கு விட்டா திரும்ப திரும்ப இதையே தான் செய்வா ‘ என்று எண்ணியவன். தன்னிடம் இருந்து நழுவிக்கொண்டிருந்த கடுமையை மீண்டும் இறுக்கமாக பற்றி கொண்டான் .
“வீட்டுக்கு வா உனக்கு இருக்கு” என அவளது கரத்தை இறுக்கமாக பிடித்தவன் வலுக்கட்டாயமாக அவளை தன்னோடு அழைத்து சென்றான் .
ஆதித்யாவின் கைகளில் சிக்கிக்கொண்ட கார் சீறியபடி அவன் கோட்டையை அடைந்தது. அர்ஜுனை கண்டதும் அவள் கண்களில் தோன்றிய மகிழ்ச்சி ஆதித்யாவின் கண்முன் வந்து போக, ‘ அ..ர்…ஜு..ன் .’ வலியும் கோபமும் ஒன்றாய் வந்து அவனை வதைத்தது. கண்களை இறுக்கமாக மூடி திறந்தான் ஆதித்யா.
அவளை பார்த்தான் ! காரின் ஓரத்தில் ஒடுங்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள் . அவள் உடல் வெட வெடவென நடுங்கியது. விலகுகிறாள் ! ஆனால் அதை எப்படி அனுமதிக்க முடியும் உள்ளுக்குள் பொருமினான். தலையை அழுந்த கோதி சீரற்ற தன் மூச்சு காற்றை சமன் செய்தான் .
நல்லாதானே இருந்தாள் திடிரென்று ஏன்? அன்று கூட என் தொடுகைக்கு உருகி குழைந்தாளே. அப்படியிருக்க ஏன் என்னை விட்டு செல்ல துணிந்தாள். அப்படியென்றால் அனைத்தும் நடிப்பா? ஆத்திரமாய் வந்தது.
‘தப்பிக்க நினைத்தது கூட சரி. அந்த அர்ஜுன் அவனை கண்டதும் அவள் கண்களில் என்ன ஒரு ஆனந்தம் ஏதோ நான் கொடுமை காரன் போல ‘ அவனால் தாங்கிக்கவே முடியவில்லை. ஏதாவது செய்ய வேண்டும் போல் தோன்றியது.
‘மனதில் வேறு ஒருவன் இருக்கும் பொழுது உன்னிடம் குழையும் அளவிற்கு மது ஒன்றும் தவறானவள் இல்லை கிடையாது. அவள் கண்களில் தெரிந்த நேசம் ஒன்றும் பொய்யும் இல்லை. வேறு ஏதோ உள்ளது பொறுமையாக செயல் படு ஆதி ‘எச்சரித்தது மனம்! கண்களை மூடி ஆழமாக மூச்சை வெளியிட்டு கோபத்தை மட்டுப்படுத்த எண்ணினான். ம்ஹும். ஒன்றும் வேலைக்காகவில்லை.
அர்ஜுன் பேசியதும் அவனது நக்கல் பார்வையும் அவன் நினைவுக்கு வந்து வந்து சென்று ஆதித்யாவின் கோபத்தை தூண்டிவிட. ‘பாடம் புகட்டிய தீர வேண்டும்’ என உள்ளுக்குள் இருந்த மிருதன் ஏற்றிவிட்டான்.
தன் அறைக்கு செல்லும் வரை கூட பொறுமை இல்லாமல் போக. மதியை இறுக்கமாக முறைத்தான் ஆதித்யா .
‘அவன் உன்னை தான் முறைத்து பார்க்கிறான்.’ எச்சரித்தது அவளது மனம். தெரியாமல் இல்லை ! ஆனால் அவனை பார்க்காதது போல அமர்ந்திருந்தாள்.
முதல் நாள் தப்பித்த பொழுது நடந்த சம்பவங்கள் அனைத்தும் அவள் முன்பு தோன்றி மறைந்தன. முதுகுத்தண்டு சில்லிட்டது .
“இன்னும் உன் மனசுல தப்பிச்சு போகணும் என்கிற எண்ணம் இருக்கு….ம்ம்ம்ம் ” முரட்டு குரலில் விரவியிருந்த அமைதி.அவளை மேலும் கலவரப்படுத்தியது .
‘ சா… ர ‘ பயத்தில் வார்த்தை வர மறுத்தது .
” அப்போ அன்னைக்கு அவ்வளவு எச்சரிச்சும் உனக்கு பயம் இல்ல அப்படித்தானே “
“— ” பதில் சொல்ல முடியாமல் அமர்ந்திருந்தாள்..ஆனால் ‘ஏதோ நடக்க போகிறது ‘ என்று மட்டும் அவள் மனம் எச்சரித்து கொண்டே இருந்தது.
” அவன் தான் உன் அக்காவை கல்யாணம் பண்ணிக்கிட்டானே. தப்பிச்சி என்ன பண்ண போற, உன் வாழ்க்கையில இன்னும் வேற யாரும் இருக்காங்களா என்ன? ” அவளிடம் ‘உங்கள தவிர வேறு யாரும் இல்லை’ என்னும் பதிலை எதிர்பார்த்து அவன் கேட்டான்.
அவளும் அதையே தான் சொல்லிருப்பாள் நேற்று அந்த சம்பவத்தை காணாமல் இருந்திருந்தால். ஆனால் இன்று இந்த நொடி மதிக்கு ஆதித்யா மீது இருக்கும் கோபம் அவளை வேறு விதமாய் பேச வைத்தது.
” ஆமா இருக்காங்க. இப்போ என்ன” பயம் தான் ஆனாலும் சொல்லிவிட்டாள்.
ஆதித்யாவிடம் இருந்த கொஞ்ச பொறுமையும் காற்றில் பறந்துவிட. சுரீரென்று ஏதோ அவனுக்குள் பாய்ந்தது. சட்டென்று படபடவென துடித்த இதயத்தை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது என்று அவனுக்கு தெரியவில்லை. இது போன்று பதற்றமடைவதெல்லாம் அவனுக்கு மிகவும் புதிது. மனம் மோசமாக வலித்தது .
” ஆஹாங். ” வலியை மறைத்தவன் பொய்யாக வியந்தான் .
“ஆமா ” மீண்டும் ஆமோதிப்பதாக கூறி தலையசைத்தாள். அவனது தாடை இறுகியது. அவளை சில நிமிடங்கள் கூர்மையாக பார்த்தான். இதயம் துடிப்பின் வேகம் அதிகரித்தது. வலி. கோபம். வெறுமை. வெறுப்பு என ஏகப்பட்ட உணர்ச்சிக்குவியல்கள். ஆதித்யாவுக்கு அதை எப்படி கையாள்வது என்பது கூட தெரியவில்லை. அடக்கப்பட்ட கோபத்தில் தன் பின்னங்கழுத்தை நீவியவன் அவளை நெருங்கி ,
” ம்ம்ம் அது அப்போ..இனி உன் வாழ்க்கையில நான் மட்டும் தான். வேற எவன் இருந்திருந்தாலும் மறந்திடு, அது எவனா இருந்தாலும் சரி “என்று அழுத்தமாக கூறியவன், இதற்கு மேல் இங்கே இருந்தால் தனது கோபம் நிச்சயம் அவளை காயப்படுத்திவிடும் என்பதை உணர்ந்து, அவளது பதிலை எதிர்பாராமல் காரை விட்டு இறங்கி வேகமாக நடக்க,
மதுவுக்கு தான் ஆத்திரமாக வந்தது ‘இவன் யாரு இதை சொல்றதுக்கு ..?இவன் சொன்னா அப்படியே செய்யணுமா என்ன ? ‘ என எண்ணியவள் “முடியாது” என ஆதித்யாவின் காதில் விழும்படி கத்தினாள்.
அடுத்த நொடியே அவனது நடையின் வேகம் குறைந்திருக்க, ஆதித்யாவின் பார்வை இப்போது மதியின் முகத்தை முற்றுகையிட்டது.
” நீங்க சொன்னா நான் மறந்திடணுமா ?நான் ஒன்னும் உங்க அடிமை இல்லை ” அதரங்கள் துடிக்க கூறினாள்.
‘ தன்னவளின் கோபம் ‘ கலப்படமற்ற குழந்தையின் சிரிப்பை போல அழகாக இருந்தது
ரசிக்கத்தான் செய்தான். ஆனால் அதற்கு பிறகு அவள் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் அவனுக்குள் இருக்கும் அசுரனை எழுப்பிவிட்டது .
” நீங்க என்னை கட்டுப்படுத்தலாம் ஆனால் என் மனசை கட்டுப்படுத்த முடியாது. கேட்டீங்கல்ல இன்னைக்கு அர்ஜுன் சொன்னத, இன்னைக்கு இல்லைன்னாலும் ஒருநாள் கண்டிப்பா அர்ஜுன் என்னை கூட்டிட்டு போக வருவான்” என உறுதியாக கூறினாள். அவள் குரலில் தான் அத்தனை நம்பிக்கை .
“ஓ அவன் மேல அவ்வளவு நம்பிக்கை…! அப்போ உடைக்காம எப்படி ?இதோ இப்பவே உடைக்கிறேன் ” என தன் சிவந்த விழிகள் இடுங்க பார்த்த ஆதித்யாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது .
மதியை பயமும் கோபமும் ஒரே நேரத்தில் ஆட்கொண்டது.
‘ மிஞ்சி போனால் என்னை என்ன செய்துவிடுவான். ?? உயிர் தானே போனால் போகட்டும். இந்த வெறி பிடித்த மிருகத்தினரிடம் இருப்பதை விட மரணம் ஒன்றும் கொடூரம் அல்ல! ‘ என எண்ணியவள் தனக்குள் இருக்கும் பயத்தை முழுங்கியபடி தன் முகத்தை அவன் பார்க்க வேறுபக்கம் திருப்பிக்கொண்டு அலட்சியமாக நின்றாள்.
இங்கே வந்த இத்தனை நாட்களில் அவள் அர்ஜுனை என்ன வேறு யாரை பற்றியும் சில நிமிடங்கள் கூட முழுமையாக எண்ணியதே இல்லை காரணம், திட்டிக்கொண்டோ இல்லை ரசித்துக்கொண்டோ அவள் மனம் ஆதித்யாவை மட்டும் தான் நினைத்து கொண்டிருந்தது .
ஆனால் நேற்று இரவு சம்பவம் கொடுத்த ஏமாற்றமும் வலியும் மதியின் மனதை வெகுவாய் பாதித்தது அந்த பாதிப்பின் வெளிப்பாடு தான் இந்த அலட்சியம் .
அதை கொஞ்சமும் அறிந்திராத ஆதித்யாவுக்கு அவளது அலட்சியம் ஆத்திரத்தை கொடுத்தது. அவளது கோபத்தை ரசிக்க முடிந்த அவனால் அவளது உதாசீனத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவ்வளவு நேரம் இழுத்துப்பிடித்து வைத்திருந்த பொறுமை எல்லாம் எங்கோ பறந்திருக்க.வேகமாக அவளை நெருங்கியவன் முரட்டுத்தனமாக அவளது தாடையை பற்றி தன் பக்கம் திருப்பினான்.
” என்ன நெஞ்சழுத்தம் ! பேசிட்டு இருக்கும் போது முகத்தை திருப்புற” பல்லை கடித்துக்கொண்டு கேட்டான். லேசாக அவன் பிடித்ததுக்கே அவள் கண்கள் கலங்கியது.அப்பொழுதும் அவளது பார்வை அவனை சந்திக்க வில்லை .
” ம..தி. பாரு.லுக் அட் மீ ” கோபமாக கூறினான். இன்னும் கொஞ்சம் அழுத்தினால் வலி தாங்காமல் சரணடைந்துவிடுவாள் என்பது அவனுக்கு நன்றாக தெரியும்.. ஆனால் பெண்ணவளை காயப்படுத்தி தனது காரியத்தை சாதித்துக்கொள்வதை தன் ஆண்மைக்கு ஏற்படும் இழுக்காக நினைத்தவனால் அவளிடம் கடுமையாக நடந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அவளது பிடிவாதம் அவனை சோதித்தது .
” திமிரு உன்னை என்ன பண்றேன் பாரு ” பல்லை கடித்துக்கொண்டு தன் அழுத்தத்தை கூட்டினான். வலி தாங்காமல் அவன் முகத்தை பார்த்தாள் அழகிய மீன் விழிகள் இப்பொழுது வெறுப்பை கக்கியது. சட்டென்று தன் பிடியை தளர்த்தினான் .
” யு ஆர் ஸோ டிஸ்கஸ்டிங் ” – நீ மிகவும் அருவருப்பானவன் வலியில் தன் தாடையை பிடித்து நீவியபடி முகத்தை சுளித்தாள்.
‘என்ன வார்த்தை சொல்லிவிட்டாள்’ ! அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை .யார் நீ என அவனை தள்ளி நிறுத்திய அவளது பார்வை அவனது மனதை கூறுபோட்டது.
‘ மதி என்னை அப்படி பார்க்காத’ என்று மனதிற்குள் மிகவும் வருந்தினான். சிறு வயதில் இருந்து வலிகளையும் உதாசீனங்களையும் போராடி கடந்து வந்தவனால் இந்த சிறு பெண்ணின் நிராகரிப்பை மட்டும் ஏனோ தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் விலகி சென்றான் .
வேகமாக தன் அறைக்குள் நுழைந்து கதவை அடித்து சாற்றியவன் கட்டிலில் அமர்ந்து தலையை இறுக பற்றிக்கொண்டான். தன்னை தானே கட்டுப்படுத்த முடியாதளவு கோபம் கொண்டவனின் முகம் அதீத உணர்ச்சியில் சிவந்து இருக்க சுற்றும் முற்றும் பார்த்தவனின் கண்களில் அவன் அறையின் பால்கனியில் தொங்க விட பட்டிருந்த பஞ்சிங் பேக் கண்களில் பட. தன் பலம் முழுவதையும் சேர்த்து வேகமாக பஞ்சிங் பேகில் குத்தினான்.
” ஏன் மதி திடீர்ன்னு ஏன் என் மேல இவ்வளவு வெறுப்பு ? ” என ஆக்ரோஷமாக கத்தியபடி தன் பலம் முழுவதையும் சேர்த்து மூர்க்கத்தனமாக பஞ்சிங் பேகில் குத்தினான் அவன் வேகமாக குத்தியதில் பஞ்சிங் பேகில் அவனை நோக்கி நகர்ந்து வர ” ஏன் ?” என கர்ஜித்தபடி அதை தன் காலால் ஓங்கி உதைத்தான். அவனது நெற்றி நரம்பில் தொடங்கி வெற்று தேகத்தின் தசைகள் உட்பட அணைத்து நரம்புகளும் புடைத்திருந்தது .
அவன் ஆழ்ந்து இழுத்துவிட்டு மூச்சில் அவனது திண்ணிய மார்பு மேலும் கீழும் ஏறி இறங்கியது.. வெற்று தேகம் வியர்வையில் குளித்திருக்க கிட்டத்தட்ட ரெண்டு மணிநேரம் ஏதோ தன் எதிரியை துவம்சம் செய்வது போல பஞ்சிங் பேகை அடித்து துவைத்தவனின் மனம் இப்பொழுதும் சமாதானம் அடையவில்லை.
” ஏன் ?” என்ற ஒரே ஒரு கேள்வி அவனை படுத்தி எடுத்து. அடித்து அடித்து தளர்ந்து போனவனின் கைகளில் உள்ள மேல் தோல்கள் அணிந்திருந்த க்ளோவ்சையும் தாண்டி கிழிந்திருக்க. மேல் சட்டையை கழற்றி இருந்தவன் ஆறாய் வழியும் வியர்வையோடு அப்படியே தரையில் படுத்தான்.
அவனிடம் என்ன இல்லை ? அவனுக்காகவே வாழும் தாய் !பாசத்தை வாரி வாரி வழங்க அன்பான தங்கை !கேட்டால் உயிரை கொடுக்கும் நண்பன் ! யாருக்கும் கிடைக்காத பதவி ! இதற்கு மேல் ஒரு மனிதனுக்கு என்ன வேண்டும் ?? எல்லாம் இருந்தும் ஏன் இந்த வெறுமை ?? இதெல்லாம் இல்லாமல் பார்த்தால், ஆதித்யா என்பவன் யார் ?
சிறு வயதில் இருந்து ,எத்தனை வலிகள்.? எத்தனை போராட்டங்கள் ?
தாகத்தோடு சில நாட்கள் ! பசியோடு பல நாட்கள் ! உறக்கம் இன்றி எத்தனை நாட்கள் ?
அன்று அடிப்படை தேவைகளுக்காக தொடங்கிய அவனது போராட்டம் இன்று வரை ஏதோ ஒன்றிற்காக நீடித்து கொண்டு தான் இருக்கின்றது. அதில் சில விஷயங்களை அடைந்து விட்டான். ஆனால் பல விஷயங்கள் இன்னும் அவனுக்கு மறுக்கப்பட , ஒவ்வொரு கணமும் கனமாக தான் அவனுக்கு கழிகின்றது .
இப்பொழுது அவனுக்கு இருக்கும் செல்வாக்கிற்கு அவன் நினைத்தால் நொடிக்கு ஒரு பெண்ணுடன்.. மது மாது என்று உல்லாசமாக இருக்கலாம்.
ஆனால் அது அவன் அல்லவே.!
தனது இத்தனை வருட வாழ்க்கையில் ஒரு நொடி கூட அவன் மனம் அதற்கு ஆசை கொண்டதில்லை!
இனியும் அப்படி தான் ! அது தான் அவன் ! ஆதித்யா சக்கரவர்த்தி. !
தனிமை. வலிகள். உதாசீனங்கள் என அனைத்தையும் போராடி, கடந்து வந்தவனால் , மதியின் வெறுப்பை மட்டும் ஏனோ தாங்கிக்கொள்ள முடியவில்லை.
காதல். குடும்பம். மகிழ்ச்சி இதெல்லாம் தனக்கு எட்டாத கனி என்று நினைத்திருந்தவன் மனதில், என்றாவது ஒருநாள் உனக்கும் எட்டும் என்று நம்பிக்கை கொடுத்தது மதுமதியுடனான சந்திப்பு , ஆனால் இன்று அவன் மீது அவள் காட்டிய வெளிப்படையான வெறுப்பு அவனது ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்து , அதெல்லாம் உனக்கு எட்டவே எட்டாது என்பதை ஆணித்தனமாய் கூற சிலுவையில் அறைந்தது போல ஆதியின் மனம் புண்பட்டது.
வலிகளை தாங்க முடியாத மனிதன் ஒன்றும் அவன் இல்லையே. தனது குழந்தை பருவம் தொடங்கி எவ்வளவு வலிகளை அனுபவித்திருப்பான். ஆனால் அது அனைத்தையும் நொடி பொழுதில் கடந்து சென்ற இரும்பு மனிதன் அல்லவா அவன் !
இன்று போல அவன் ஒருநாளும் தோய்ந்து அமர்ந்ததே கிடையாது. அனைத்தையும் போனால் போகட்டும் என கடந்துவிடுபவனால். ஏனோ மதுமதியை மட்டும் அப்படி விட்டுவிட முடியவில்லை .
“காசுக்காக போராடினேன் ! பாசத்துக்காக போராடினேன் ! உணவுக்காக போராடினேன் ! அனைத்திலும் போராட்டம் அனைத்துமே போராட்டம். இறுதியில் இதிலும்(காதலும்) போராட்டம் என்றால் எப்படி ? எங்கே சென்றாலும் அடைக்கப்பட்ட கதவு , அதுக்குள் ஒளிந்திருக்கும் மறுக்கப்பட்ட பாசம். இதுக்காக மட்டும் எத்தனை இழப்புகளை நீ சந்தித்து விட்டாய். !இன்னுமா உனக்கு புத்தி வரவில்லை! மனம் திட்டாமல் இல்லை. ஆனாலும் அடிபட்ட மனம் ஏங்கியது.
இப்பொழுதும் அவன் விரும்புவது ஒன்று தான் அவன் விரும்பும் பெண் அவன் எப்படி இருக்கிறானோ அவனை அப்படியே நேசிக்க வேண்டும், என்ன ஆனாலும் அவனை நம்பி, காலம் முழுக்க அவனோடு வர வேண்டும். அதுவும் அந்த பெண் மதுமதியாக இருக்க வேண்டும். இங்கு வந்த பிறகு அவளுடனான நெருக்கம் அவள் மேல் அவனுக்கு இருக்கும் நேசத்தை அவனது மனதில் ஆழமாகவும் உறுதியாகவும் வேறுன்ற செய்திருக்க எப்படி? எப்படி அவனால் மதுவை விட முடியும்? முடியவே முடியாது !
” என்ன ஆனாலும் சரி , நீ என்னை தவிர வேறு யார் பெயரையும் சொல் அளவில் கூட உச்சரிக்க கூடாது. உன் மனசு முழுக்க நான் தான் இருக்கணும் இருக்க வைப்பேன்” என்று சூளுரைத்த ஆதித்யா, தேடி சென்றது மதியின் அறைக்கு.
போராடி வெல்ல பெண்ணின் மனம் ஒன்றும் யுத்த களம் இல்லையே ! அதை இந்த போராளி உணர்வானா?
– காதல் சொல்வான்
Post Views: 856