Category:
ஆரோனின் ஆரோமலே!
4. ஆரோனின் ஆரோமலே!
written by Competition writers
அரோமா – 4
“அம்மா… அண்ணனுக்கு பசிக்குதாம்… இப்ப மீட்டிங் முடிஞ்சிடுமாம்… உடனே டின்னர் எடுத்து வைக்கணுமாம்…” என்று மேல் மாடியிலிருந்து கத்திக் கொண்டிருந்தாள் அந்த வீட்டின் குட்டி வாண்டு, பதினேழு வயதே ஆன சஷ்விகா.
“சச்சு… எல்லாம் ரெடியா தான் இருக்கு… நீயும் இறங்கி வா, நாலு பேரும் ஒன்னாவே சாப்பிடலாம்…” என்று பார்வதி சொல்ல,
“ஓகே ம்மா… டூ மினிட்ஸ்…” என்றவள் கீழே வந்தாள்.
“எங்க டி உங்க அண்ணன்… அந்த கூப்பாடு போட்ட, இன்னும் காணோம்?” என்று பார்வதி கேட்க,
“ஹான்… இதோ வராங்க ம்மா…” எனக் கூறி பூரியை விழுக்கினாள் சஷ்வி.
“என்னடா கண்ணா, வேலை அதிகமா?”
“எஸ் ம்மா… கொஞ்சம் லைட்டா ஹெவி தான்…”
“சரி மொதல்ல வந்து சாப்பிடு…” எனக் கூறியபடி அவனுக்கும் பூரியை தட்டில் வைக்க, அமைதியாக சாப்பிட்டான் எல்வின்.
“எங்க ம்மா அப்பா?”
“ரூம்ல இருக்கார் பா… வாங்க ன்னு கூப்பிட்டேன்… வரேன்னு சொல்லியே அரை மணி நேரம் ஆகிடுச்சு…”
“மணி ஒன்பது ஆகுது… இன்னமும் சாப்பிடாம என்ன பண்றார்?” எனக் கேட்கும் பொழுதே சாமுவேல் வந்துவிட்டார்.
“வந்துட்டேன் டா கத்தாத!” என்றபடி அவர் இருக்கையில் உட்கார,
“சுகர் டேப்லெட் போடணுமே ப்பா… அதுக்கு நீங்க சீக்கிரம் சாப்பிட்டா தானே…”
“சரிடா இனி டைமுக்கு சாப்பிடறேன் போதுமா…”
எல்வினோ, “ஃபர்ஸ்ட் சாப்பிடுங்க… அப்பறம் நம்பறேன்…” எனவும்,
பார்வதி கணவரிடம், “ஏங்க நீங்க பேசறீங்களா? இல்ல நானே கேட்கட்டுமா?” என்று கண்களால் மிரட்ட,
சாமுவேலோ பதிலுக்கு, “நீயே கேட்டுக்க…” என்று ஜாடை காட்ட, அதற்கு அவரை முறைத்தபடி இருக்க,
“அண்ணா… எனக்கு அண்ணி தேடுறது பத்தி தான் ரெண்டு பேரும் தீவிர டிஸ்கஷன்ல இருக்காங்க…” என்று சஷ்விகா உடைத்து பேசிவிட,
“ஏது… உனக்கு அண்ணியா!”
“ஈஈஈ… உன் வருங்காலம் எனக்கு அண்ணி தானே ண்ணா… அத சொன்னேன்…”
அதில் ஆரோனும், “வாண்டு சும்மாவே இருக்க மாட்டீயா நீ…” எனச் சொல்லி சிரிக்க,
“சொல்லுடா கண்ணா, உனக்கு ஏதாச்சும் பொண்ணை பிடிச்சி இருக்கா என்ன?” என்று பார்வதி கேட்க,
சாமுவேலும், “நீ லவ் பண்றதா இருந்தாலும் சொல்லு எல்வின், அப்பாவும் அம்மாவும் அந்த பொண்ணு வீட்ல போய் பேசிட்டு வரோம்…” என்று சொல்ல,
“அப்படி இருந்திருந்தா மொதல்ல உங்க கிட்ட தானே சொல்லி இருப்பேன் ப்பா…”
சஷ்வியோ இடையில் புகுந்து, “ப்பா… இதெல்லாம் என் கிட்டயும் கேட்கலாமில்ல… நானும் ஏதாவது சொல்லுவேன்ல….” என்று குறும்புடன் பேச,
“அடிக்கழுதை… ஸ்கூல் படிக்குற வயசுல என்னடி பேச்சு…” என்று பார்வதி அவளது காதை திருக,
“ம்மா… ம்மா… விடுங்க, நான் ஒன்னும் ஸ்கூல் படிக்குற பொண்ணு இல்ல… இந்த வருஷம் காலேஜ் ஜாயின் பண்ண போறேன்… ஹான்… அப்பறம்… நீயும் என் வயசுல தானே அப்பாவ லவ் பண்ணி… கல்யாணமும் பண்ணிக்கிட்ட, அப்பறம் என்னவாம்!” என்று காதை தேய்த்து கொண்டே கூற,
“பாரு… பிள்ளை மேல கை வைக்காத… நீ வாடா செல்லம், உனக்கு யாரை பிடிச்சி இருந்தாலும் சரி அப்பா சேர்த்து வைக்கறேன் ஓகேவா…” என்று தந்தை சொல்ல,
“அய்ய… அப்பா, இந்த லவ்ல எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லப்பா… நான் சும்மா அம்மா கூட விளையாடினேன் ப்பா…” என்றவள், “ப்பா… நீங்க அண்ணன கேளுங்க ப்பா…” என்றாள்.
சாமுவேல் மகளின் தலையை செல்லமாக தடவி விட்டு, மகனை பார்த்து, “சொல்லு எல்வின்…” என்றார்.
“எனக்கு நோ இன்ட்ரெஸ்ட் ப்பா… இப்போதைக்கு மேரேஜ் பண்ற தாட் வர மாட்டேங்குது…” என்று ஆரோன் சொல்லவும்,
“டேய்… இப்பவே உனக்கு வயசு 29 டா… கல்யாணம் வேணாம்னு சொல்ற, யாரையும் பிடிக்குது அப்படின்னு கூட சொல்ல மாட்ற… என்னதான் கண்ணா பிரச்சனை?” என்று பார்வதி ஆதங்கமும் கவலையுமாக கேட்க,
“ப்ச்… பாருங்க மம்மி… நான் ஒன்னும் பிரம்மச்சாரி ஆக போறேன்னு சொல்லல… இப்ப வேணாம், கொஞ்ச நாள் போகட்டும்னு மட்டும் தான் சொன்னேன்… அதுக்கு ஏன் இவ்வளவு சோகம்…”
“இருந்தாலும் கண்ணா…”
“ம்மா… இப்ப நான் என்ன சொல்லணும்னு நீங்க எதிர்பார்ககறீங்க…”
“வேற என்ன அண்ணா… ஜஸ்ட் வன் வேர்ட், டூ லெட்டர்ஸ், O…K… அவ்வளவு தான்… அப்படி தானே மம்மி…” எனச் சொல்லி சிரித்தாள் சஷ்விகா.
“சச்சுசுசு….”
“நான் எதும் பேசல ம்மா… யூ கண்டியூ…” என்று வாயைப் பொத்தி கொண்டாள் சஷ்வி.
“சரி விடு கண்ணா… இது உன் வாழ்க்கை… உன் முடிவு… உன் இஷ்டம்… இதுல நான் ஆசையோ அபிப்பிராயமோ சொல்றதுக்கு எல்லாம் ஒன்னும் இல்ல பா… சீக்கிரம் சாப்பிட்டு போய் படு… உனக்கு நிறைய வேலை வேற இருக்கும்…” என்று ஏனோதானோவென்று பேசினார் பார்வதி.
சஷ்வியோ அடங்காமல், அண்ணனின் காதில், “அண்ணா, மம்மி உங்களை எமோஷனலா பேசி கவுக்க பார்க்கறாங்க… ஏமாந்து போய்டாதீங்க ப்ரதர்… உசார் அய்யா உசாருரு…” என்று குசு குசுவென்று பேச,
அதில் சத்தமாக சிரித்து வைத்து பார்வதியிடம் இருந்து முறைப்பை பெற்றுக் கொண்டான் எல்வின் ஆரோன்.
சாமுவேல் மற்றும் பார்வதி தம்பதிகள் இருவரும் முப்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஊரை விட்டு ஓடிச் சென்று காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.
இதுநாள் வரையிலும் கூட அவர்களுடைய இரு வீட்டாரின் சொந்தங்களும் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை! அந்த மனவருத்தம் உள்ளுக்குள் இருந்தாலும், அவற்றை கடந்து வந்து, இருவரும் இணைந்து இத்தனை வருடத்தில் அவர்களின் பிள்ளை செல்வங்களை நன்முறையில் வளர்த்து, கணவன் மனைவி இடையே எவ்வித சண்டை சச்சரவுகளும் இன்றி அன்னியோன்யமாக காதலுடன் வாழ்ந்து வருகின்றனர்.
தாயின் முகம் பொலிவிழந்து வாடிப் போய் இருப்பதை காண பொறுக்காமல், “ம்மா… நான் இப்ப ஓகே தான சொல்லணும்… நீங்க பொண்ணு பார்க்குறது பாருங்க… எனக்கு பிடிச்சா மாதிரி இருந்தா ஓகே… கல்யாணம் மட்டும் ஒரு வருஷம் கழிச்சு பண்ற போல இருக்கட்டும்…” என்று விட்டான் எல்வின்.
“சரி சரி அம்மாக்கு ரொம்ப சந்தோஷம் டா கண்ணா… உனக்கு பொண்ணு இந்துவா இருக்கட்டுமா? இல்ல கிறிஸ்டியனில் பார்க்கட்டுமா?” என்று பார்வதி கேட்க,
அதில் மென்னகை புரிந்தவன், “ம்மா… உங்களை போல ஸ்வீட் அண்ட் சாஃப்ட்டா இருந்தா எந்த மதமா இருந்தாலும் சம்மதம் தான் போதுமா…” என்று சொல்லி விட்டு அவனது அறைக்கு சென்று விட்டான் எல்வின் ஆரோன்.
இரவு 11.45.
சென்னை நகரம் தூங்க தயாராகி விட்டிருந்தது. வீடுகளின் விளக்குகள் மெதுவாக அணைந்து கொண்டிருந்தன. ஒரு சில வீடுகளின் ஜன்னல்கள் மட்டும், யாரோ இன்னும் விழித்திருக்கிறார்கள் என்பதை அடையாளம் விதமாக பளிச்சென்று இருந்தன.
ஆரோனின் அன்றைய நாளுக்கான அனைத்துப் பணிகளும் முடிந்து விட்டன.
வீடியோ ஷூட்டிங், பிண்ணனி ஒலி சரிபார்ப்பு, வீடியோ எடிட்டிங், அலுவலக கால்கள், அவர்கள் உடனான ஜூம் மீட்டிங் கலந்துரையாடல்கள், நெருங்கிய வட்டத்தின் நட்பான விசாரணைகள், அவனது காணொளிக்கு வரும் கருத்துக்களை பார்வையிடுவது என்று அனைத்தும் முடிந்து, அவனது படுக்கையில் வந்து படுத்துக் கொண்டான் ஆரோன்.
அவனது படுக்கையறையின் ஓரத்தில் ஒரு சிறிய வின்டேஜ் தேக்கட்டயில் ஆன மெத்தையும் டேபிளும் போடப்பட்டிருக்க, அதன் பக்கத்தில் ஒரு கிளாசிக் ஸ்டைல் வாசிப்பு விளக்கு, அதன் அருகே ஒரு மூடப்படாத புத்தகம், அவன் போடும் வீடியோவிற்கான குறிப்புகளை எழுத ஒரு அழகிய எழுதுகோல், ஒருசில ஓட்டும் குறிப்புகள் (sticky notes), அவன் நான்கு நாளாக எழுத ஆரம்பித்திருக்கும் புதிய காணொளிக்கான ஸ்கிரிப்ட் என்று அனைத்தும் அதனதன் இடத்தில் சரியாக பொருந்தி இருந்தது.
அவனது தனிப்பட்ட கைப்பேசியை திறக்க, அதில் இருந்த அறிவிப்பை கண்டதும், அவனது இதழ்கள் தானாக மென்னகையில் விரிந்தன.
“தஞ்சாவூர் அரோமா சமையல் – Kulukku Roti | Healthy sweet recipe for kids”
அந்த நொடி அவனது கண்கள் அந்த அறிவிப்பையே ஆர்வமுடன் பார்க்க, கைகளோ அதை தொட்டு, உள்ளே செல்லவும் சிறிய விளம்பரம் ஒன்று வந்தது.
அவன் கண்ணை மூடி, தலையணியில் தலையை மிதமாக தள்ளி வைத்து, அந்த குரலை கேட்க ஆர்வமாக காத்திருந்தான்.
30 வினாடி காத்திருப்புக்கு பின், அவள் குரல் ஒலித்தது.
“ஹெலோ கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ், நான் அரோமா, ரொம்ப நாள் கழிச்சு இங்க வந்திருக்கேன், சில கமெண்ட்ஸ் என்ன வீடியோ வரலன்னு, கொஞ்சம் பெர்சனல் வொர்க்..”
அந்த சில வாக்கியங்கள் போதுமானதாய் இருந்தது. அவனது நெஞ்சினுள் ஒரு மெல்லிய வெறுமை – யாரும் நிரப்ப முடியாத அந்த இடம் – ஏதோ ஓரளவுக்கு நிரம்பியதைப் போல உணர்ந்தான் எல்வின் ஆரோன்.
“எனிவே, இப்போ ஒரு புது ரெசிபி உடன் வந்திருக்கேன், இது நம்ம குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும், நமக்கு பசங்க ஹெல்தி முக்கியம், ஆனா பிள்ளைகளுக்கு டேஸ்ட் முக்கியம், இது ரெண்டையும் பேலன்ஸ் பண்ற போல ஒரு ரெசிபி தான்,
குலுக்கு ரொட்டி, குழந்தைகளுக்கு சாக்கோ பால்ஸ் ன்னு சொல்லி குடுத்து பாருங்க, நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா அவங்களே உங்க கிட்ட வேணும்னு வந்து நிப்பாங்க…” என்று பெண்ணவள் தொடர்ந்து அதன் செய்முறை விளக்கங்களை விரிவாக சொல்ல ஆரம்பித்தாள்.
அவள் குரல் வரக்கூடிய அந்த காணொளியை பார்க்கும் பொழுது , அவனுடைய உள்ளத்தில் ஒரு பதட்டமா, காத்திருப்பா, மென்மையான துடிப்பா ஏதோ ஒன்று ஓடிச் சென்றது. எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாத ஓர் நிம்மதியை தந்தது.
அவள் குரல் அவனது மனதில் மெல்லிசை பாடல் போல ஒலித்துக் கொண்டு இருந்தது. அந்த குரல் அவனுக்கு அமைதியை இனிமையாய் கொடுத்தது எனலாம்.
அவனது மனமோ எப்போதும் போல, ‘சச் அ மெஸ்மெரிசிங் வாய்ஸ்… இட்ஸ் ஹெவன்லி ஏஸ்தெட்டிக் ஃபீல்…’ என்று வியந்து நினைக்க, அந்த சமையல் வீடியோவை முடியும் வரை பார்த்துக் கொண்டிருந்தான்.
அதில் இருப்பது யார் எவர் என்ற தெரியாமல் போனாலும், அதில் சமையலை தவிர்த்து எவ்வித உணர்வுகளை பற்றியும் கூறாத போதிலும், அந்த அரோமா பேசும் விதம், பக்குவமாக சமைப்பது, அந்த சமையலில் எடுத்துக்காட்டும் பழைய பாரம்பரியம், அதில் உபயோகப்படுத்தும் உபகரணங்கள், அவளது உள்ளங்கையில் போட்டிருக்கும் மருதாணியின் அடர் சிவப்பு நிறம், அவள் அணிந்திருக்கும் அந்த கண்ணாடி வளையிலின் மெல்லிய சினுங்கல்… என்று அனைத்தும் ஒரு அழகிய கவிச் சிந்தனையை போல இருந்தது.
இவை அனைத்துமே அவனுக்கு ஒரு அழகியல் தோற்றத்தை கொடுத்தது. அவளது சமையலின் ஒவ்வொரு அசைவும் அவனது பார்வையில் கவிதையாகவே பட்டது.
எல்வின் மனமோ, “காட், இந்த வாய்ஸ்யை கேட்டுடவே கூடாதுன்னு நினைச்சாலும் கூட, கேட்காமல் இருக்க முடிய மாட்டேங்குது… இந்த குரலுக்கு சொந்தக்காரர் யாருன்னே தெரியல… இது ஒரு பெண்ணா, ஆன்டியா ன்னு கூட எனக்கு சரியா தெரியல, அப்படி இருந்தாலும் கூட இந்த குரலை கேட்ட அடுத்த நிமிஷம் மயங்கி போய் தான் கேட்டுட்டு இருக்கேன்… என்ன நினைச்சா எனக்கே கோபம் தான் வருது...” என்று வெளிப்படையாகவே திட்டிக் கொண்டான்.
அவனது புத்திக்கு எல்லாமே புரிந்து இருந்தாலும் கூட, மனமோ அவனது பேச்சை துளியும் கேட்க மாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்ததில் நொந்து போய் விட்டான் எல்வின் ஆரோன்.
3. ஆரோனின் ஆரோமலே!
written by Competition writers
அரோமா – 3
அன்வியின் கைகளோ மிதமாக புளித்திருந்த மாவை கரண்டியில் எடுத்து இட்லி பாத்திரத்தில் ஊற்றிக் கொண்டிருந்தது.
அப்படியே சிறிது மாங்காய் நறுக்கி, அதனுடன் அரை கைப்பிடி சின்ன வெங்காயம், நான்கு காய்ந்த மிளகாய், மூன்று பச்சை மிளகாய், இரண்டு பற்கள் பூண்டு, கொஞ்சம் கருவேப்பிலையும் உப்பும் சேர்த்து சட்னியை அரைத்து முடித்து, கொஞ்சம் தாளிப்பையும் சேர்த்து முடித்திருந்தாள்.
அவள் சமையல் செய்யும் அழகை மாங்காய் தின்றபடி பார்த்துக் கொண்டு இருந்தாள் ஷிவாஷினி.
“ஏலே! நீ ஒரு ஆர்டிஸ்ட்டுன்னு அடிக்கடி நிருபிக்குற புள்ள… நீ சமைக்கும் அழக பார்த்தாலே சாப்பிட நாக்குல எச்சி ஊருடி…” என்று புகழவும்,
“ஊரும்… ஊரும்…”
“இன்னுமும் அவங்களை காணல பாரேன்…”
“வரட்டும் இன்னைக்கு, சட்னியில நாலு கரண்டி உப்பை அள்ளி போட்டு தரேன்…” என்று அன்விதா சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, ஆதித்யனின் புல்லட் சத்தம் காதில் கேட்டது.
ஷிவாவோ, “வந்துட்டான் கரிச்சட்டி, அவனோட தங்க ரதத்துல…” என்று உதட்டை சுழித்துச் சொல்ல,
அன்வி முறைத்து விட்டு, “ஆதிய திட்டாம விட்டுட்டா உனக்கு அந்த நாளே ஓடாது ல…”
“க்கும்… நீயாச்சும் உன் ஆசை நண்பனாச்சு…” என்றவள், ‘என்னை விட இவளுக்கு அவன் தான் ரொம்ப முக்கியம்… வரான் பாரு காலன்… கரிச்சட்டி காலன்…’ என்று வாய்க்குள்ளேயே முணுமுணுத்தபடி இருந்தாள் ஷிவா.
“டேய் மச்சான், அந்த முட்டைகோஸ் வேற இன்னேரம் ஏதோதோ பத்த வச்சி இருப்பா… அதனாலேயே உன் தங்கச்சி செம காண்டுல இருக்கான்னு நினைக்கேன்…” என்று ஆதித்ய கரிகாலன் முழி பிதுங்கிட,
வந்தியத்தேவனோ, “விடுடா… நம்ம அம்மு தானே பார்த்துக்கலாம்… ஒரு அழகான வீடியோவ ஷூட் பண்ணி எடிட்டிங் பண்ணி தந்துட்டா கூல் ஆகிடுவா…” என்று அசட்டையாக கூறிச் சென்றான்.
வீட்டிற்குள் நுழையும் போதே, “தங்கச்சி…” என அன்போடு அழைக்க,
அவனது பாசமலரோ, “தங்கச்சி நொங்கச்சி ன்னு வந்த, கத்திய எடுத்து சொறுகிடுவேன்…” எனவும், ஷிவாவோ சத்தம் போட்டு சிரித்தாள்.
“சுண்டெலி கம்முனு இருந்துடு…” என்று ஆதி கத்திட,
“நான் ஒன்னும் உன் மூஞ்சிய பார்த்து சிரிக்கல… வந்திய பார்த்து தான் சிரிச்சேன்…”
வந்தியனோ, “அம்மாடி பரதேவதை…” என்று அவளுக்கு கையெடுத்து கூப்பிட்டவன், வாயை பொத்திக்கொண்டு இருக்கும்படி சொல்லிவிட்டு,
“அம்மு, நாங்க சும்மா வாய்க்கால் பக்கம் போனோம்… அப்படியே கிணத்தை பார்க்கவும்…”
“விழுந்துறலாம்னு முடிவு பண்ணிட்டங்களோ?” அன்வி கேட்க,
“ச்சீ… ச்சீ… ஒரேயடியா குளிச்சு ஃப்ரெஷ் ஆகிட்டு… நேரா இங்க தான் வந்தோம்… பாரு என் மச்சான் கையில என்ன இருக்குன்னு… என் கையில் லேப்டாப் கூட வச்சி இருக்கேன் பாரு… முதல்ல நாம சுடச்சுட மல்லிப்பூ இட்லியை ஒரு கை பார்த்துட்டு, களத்துல இறங்கறோம்… இன்னைக்கு வேற லெவல் சம்பவம் பண்றோம்… ஓகேவா டி அம்மு…” என்று ஆதித்யா பேசவும், அப்படியே மலையிறங்கி விட்டாள் பெண்ணவள்.
“சரி சரி… அம்மு வா… இட்லி வச்சி எங்களுக்கு குடு… இல்லாட்டி இந்த வெட்டி பீஸே மொத்தத்தையும் முழுங்கிடுவா…” என்றபடி தட்டை எடுத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான் வந்தியத்தேவன்.
‘அவன் பேச ஆரம்பிச்சாவே இவளுக்கு கோபம் எல்லாம் போயிடும்… இதுல என் மேல சத்தியம் பண்ணி நீ மட்டும் தான் என் பெஸ்ட் ஃப்ரெண்ட் ன்னு சொல்லுவா… ஹ்ம்ம்… உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது…’
ஆதித்யனோ ஷிவாவின் தலையில் தட்டி, “அடியே கிறுக்கி… அங்க மைண்ட் வாய்ஸ்ல புலம்பாம வந்து சேரு…” என்கவும்,
“ஆஹ்! நீ போடா, எனக்கு வரத் தெரியும்…”
“உனக்கு மரியாதை ன்னா என்னன்னே தெரியாதா டி…”
“இந்த அழகு மூஞ்சிக்கு இந்த மரியாதையே ஜாஸ்தி தான் கரிச்சட்டி…”
“அடிங்…”
“அம்மு என்ன காப்பாத்து டி…” என்றபடி ஓடி விட்டாள் ஷிவாஷினி.
“குட்டி சாத்தான்… உன்னைய நான் ஒன்னுமே பண்ணல…”
“அம்மு… அதையெல்லாம் கண்டுக்காத… நீ எனக்கு ரெண்டு இட்லி சேர்த்து வை… சட்னி சூப்பர்…” என்று சப்புக் கொட்டி சாப்பிட்டான் வந்தியத்தேவன்.
ஷிவாஷினியும் அமைதியாக சாப்பிட்டு கொண்டிருக்க, “தீனி பண்டாரம்… யாரும் அந்த சுண்டெலிய எதுவும் கேட்டுடாதீங்க… அதுனால தான் ரொம்ப ஆடறா…” என்றதும் அவள் அன்வியை முறைக்க,
“ஆதி…” என்று சத்தம் போட்டதும் மௌனமாக சாப்பிட ஆரம்பித்தான்.
அன்வியும் இட்லியை விழுங்கிய படி, “எல்லாரும் சாப்பிட்டு முடிச்சா… தோட்டத்துக்கு கிளம்பலாம்… அங்க போய் இன்னைக்கு விடியோ ஷூட் எடுக்கலாம்… ஒரு சிம்பலான டிரெடிஷனல் ஸ்வீட் ரெசிபி பண்ணலாம்னு யோசிச்சு இருக்கேன்…” எனக் கூற,
வந்தியத்தேவனோ, “அப்படி என்ன செய்ய போற?”
“ஈசு சொல்லி குடுத்த குலுக்கு ரொட்டி தான்… பட் அதை இன்னும் கொஞ்சம் வித்தியாசமா சின்ன பிள்ளைங்க விருப்பி சாப்பிடற போல பண்ணலாம்னு இருக்கேன்… பாப்போம் இன்னைக்கு செய்யறது நல்லா இருந்தா வீடியோ அப்லோட் செய்யலாம், இல்லன்னா வேணாம்… வேற ஏதாவது ட்ரை பண்ணுவோம்…”
“நல்லா வராம போனாலும், வீடியோ அப்லோட் பண்ண சொன்னா பண்ணவே மாட்டீயே நீ..” என்று ஷிவு அலுத்துக் கொள்ள,
“அதெப்படி ஷிவு முடியும்… என்ன நம்பி எத்தனையோ பேர் என்னோட வீடியோ பார்த்து அவங்களோட நேரத்தை ஒதுக்கி சமையல் செய்றாங்க… அவங்களை எப்படி நம்ம ஏமாத்த நினைக்கலாம் சொல்லு… உன்னோட கம்பல்ஷனுக்காக தான் சொதப்புன ரெசிப்பி சிரீஸ் ன்னு தனியாவே வீடியோஸ் போடுறோமே… அப்பறம் என்ன… நம்ம கஷ்டபட்டு எடுக்கும் வீடியோ எல்லா வீணாகாம தானே இருக்கு…” அன்வி சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
இடையில் புகுந்த ஆதியோ, “எல்லாரும் அவங்கவங்க செய்யும் வேலைக்கான ஒருசில எதிக்ஸ் வச்சி இருப்பாங்க… அப்படி சிலது அம்மு கிட்டயும் இருக்கு… அதுல நீ ஏன் குறுக்க போற சுண்டெலி…”
“எனக்கு எல்லாம் தெரியும்… யூ ஷட் யோர் மவுத்…” எனக் கூறி முகத்தை திருப்பி கொண்டாள் ஷிவு.
“அன்வி… உனக்கு தேவையான பொருள் எல்லாம் எடுத்து வை போ… இவங்க இந்த ஜென்மத்துல திருந்த மாட்டாங்க… நான் போய்ட்டு வீடியோ எடுக்க லொகேஷன் செக் பண்ணிட்டு வரேன்…” எனச் சொல்லி சென்றான் வந்தியன்.
அதன் பின்னரே நண்பர்கள் இருவரையும் முறைத்து கொண்டே, தேவையான பொருட்களை எடுக்க சென்று விட்டாள் அன்விதா.
“எல்லாம் உன்னால தான்டி… எப்பவும் சண்டை தான்…”
“ஆமா… எனக்கு அது மட்டும் தான் வேலை பாரு… மரியாதையா போய்டு கரிச்சட்டி…”
“சூனிய பொம்மை இப்ப வந்தேன்னு வச்சிக்க அவ்வளவு தான்…” என்றபடி ஆதித்யன் அவளை அடிக்க துரத்த,
ஷிவாஷினியோ அதற்குள், “போடா பொடலங்கா…” என கத்திக் கொண்டே ஓடி விட்டாள்.
அதன் பின்னர், நால்வரும் இணைந்து தோட்டத்திற்கு சென்று அன்வி சமைக்கவும், அதனை படம் பிடிக்கவும் ஏதுவாக அனைத்தையும் எந்த ஒரு அமர்க்களமும் ஆர்பாட்டமும் இல்லாமல் செய்து கொண்டிருந்தனர்.
தஞ்சாவூர் அரோமா சமையல்
அன்விதா அவளுடைய பதினைந்தாவது வயதின் தொடக்கத்தில் ஆரம்பித்த யூடியூப் சேனல், அதாவது கொரோனா தொற்று ஏற்பட்ட காலகட்டத்தில் பொழுதுபோக்காக ஆரம்பித்து எடுத்த சமையல் வீடியோக்கள் தான் இன்று மூன்று மில்லியன் சந்தாதாரர்களை கொண்டு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.
இது முழுக்க முழுக்க அவளுடைய சமையல் செய்யும் திறனையும் அவளது குரலையும் வைத்து மட்டுமே கிடைத்த வெற்றி.
சிறு வயதிலிருந்தே அவளுடைய பாட்டி சமைக்கும் பொழுதெல்லாம் எல்லாவற்றையும் பார்த்து, அதனை ரசிக்க, அவளுக்கும் சமையல் மீது ஆர்வம் ஏற்பட, அவளாகவே சமைக்க ஆரம்பித்திருந்தாள்.
அவற்றில் கொஞ்சம் புதுமையையும் சேர்ந்து புதுப்புது வகைகளில் செய்து வீட்டினரை அசத்தினாள், அவளுக்கு சமையலின் மீதிருந்த அந்த ஆர்வமே இன்று இப்படி வளர்ச்சி அடைய வழிசெய்து இருந்தது.
அவளது சமையல் வீடியோவை காணும் பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் பசுமையாகவும் பாரம்பரிய முறையிலும் இருக்கும், அதுமட்டுமின்றி அவளது குரல் கேட்பவர்களை கவர்ந்திழுத்து மயங்க வைக்கும்.
இதுநாள் வரையிலும் அவள் யாரென்று ஒருவருக்கும் தெரியாது, உண்மையான பெயர் கூட என்னவென்று தெரியாது, அவளது முகத்தை கூட இத்தனை வருடத்தில் காட்டியதே கிடையாது.
இன்றளவும் அவளது பெயரை அரோமா என்று தான் காணொளிகளில் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.
அவளது இனிமையான குரலும், பக்குவமாக செய்யும் சமையலும் மட்டுமே தஞ்சாவூர் அரோமா சமையலின் ஆணிவேர்.
அதுமட்டுமின்றி அவள் தனித்துவமாக சமைக்கும் விதம்! பாட்டி ராஜேஸ்வரியின் செம்பு பித்தளை பாத்திரங்களிலும், மண்பாண்டங்களிலும் மட்டுமே சமைப்பாள். சில நேரங்களில் இயற்கை சூழலில் தோட்டத்திற்கு சென்று விறகு அடுப்பில் சமைத்தும் வீடியோ போடுவாள்.
அன்வி உடைய சமையல் காணோளிகளின் மற்றொரு முக்கிய சிறப்பம்சமே அவளது கையில் இருக்கும் செந்நிற மருதாணியும், அவள் அணிந்திருக்கும் வானவில் நிறத்திலான கண்ணாடி வளையல்களும் தான்! அதுவே அவளது காணொளிகளுக்கு தனி அழகினை சேர்த்திடும் விதமாக அமைந்திருந்தது.
இவை அனைத்தும் தான் மற்ற சமையல் காணொளிகளுக்கும் இவளது காணொளிக்கும் உள்ள வித்தியாசத்தினை அழகாக பிரித்துக் காட்டிடும் வகையில் இருந்திருப்பது கூட தஞ்சாவூர் அரோமா சமையலின் வளர்ச்சிக்கு காரணம் எனலாம்.
அன்விதா தன்னுடைய முகத்தினை எப்பொழுதும் காட்ட நினைத்தது கிடையாது, ஏனெனில், அவளுக்கு அதிலெல்லாம் துளியும் விருப்பமில்லை.
அவள் அவளது திறமையை வெளிக்கொண்டு வர நினைத்தாலே ஒழிய முகத்தினை அல்ல! ஏனோ, அவளுக்கு இந்த சமூக வலைத்தளங்களில் முகத்தை காட்ட துளியும் இஷ்டமில்லாது இருந்தது.
ஆரம்பத்தில் அவளது நண்பர்கள் கூட அவளிடம் கொஞ்சம் சொல்லி பார்த்தனர், ஆனால், பெண்ணவளோ திட்டவட்டமாக மறுத்து விட, கடைசியில் அவர்களும் அன்வியின் விருப்பப்படி விட்டுவிட்டனர்.
அன்விதா குலுக்கு ரொட்டி செய்ய ராகி மாவை எடுத்து அதனுடன் கொஞ்சம் கொக்கோ பவுடரையும் பால் பவுடரையும் சேர்த்து, சிறிது உப்பையும் நெய்யையும் சேர்த்து சுடு தண்ணீரில் பிசைந்து விட்டு, அதனை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வேக வைத்துக் கொண்டிருந்தாள்.
அன்வி செய்யும் அனைத்தையும் விதவிதமான கோணங்களில் அழகாக படம் பிடித்த படி இருந்தான் வந்தியத்தேவன், ஆதித்யனும் அவனுக்கு ஏதேனும் உதவிகளை செய்தபடி இருக்க, ஷிவாஷினியும் சமத்து பிள்ளையாக நண்பிக்கு உதவிக் கொண்டிருந்தாள்.
முதலில் அன்வியின் சமையல் வீடியோவிற்கு வந்தியத்தேவனும் ஆதித்ய கரிகாலனும் அவர்களுக்கு தெரிந்த அளவில் படம் பிடித்து, எடிட்டிங் செய்து கொண்டிருக்க, காலப்போக்கில் அதுவே அவர்களுக்கு பிடித்துப் போய் விட, இருவருமாக கல்லூரியில் காட்சி தொடர்பு (Visual communication) பிரிவையே தேர்ந்தெடுத்து படித்து முடித்தனர்.
ஆரம்பத்தில் அன்விதா தான் வருத்தமாக அவர்களிடம் பலமுறை உங்களுக்கு பிடித்து தானே படிக்கிறீர்கள் இல்லை எனக்கு உதவ வேண்டும் என்று இதை எடுத்தீர்களா என கேட்டபடியே இருப்பாள், அதன் பிறகு, அவர்களின் உண்மையான ஆர்வத்தை கண்டு அதுபற்றி கேட்பதை நிறுத்து விட்டு, அவளால் முடிந்த உதவிகளை செய்து கொடுத்தாள்.
தற்பொழுது இருவருமாக சேர்ந்து ஒரு ஸ்டூடியோ ஒன்றையும் வைத்து, கல்யாணம், பிறந்தாள், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு பிரத்தியேகமாக புகைப்படங்கள் வீடியோக்கள் என்று எடுத்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி இருவரும் இணைந்து நான்கு குறும்படங்களையும் எடுத்து இருக்கின்றனர். அவர்களது கனவு தாங்கள் ஒரு திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்பது தான்.
கடைசியாக, ஒரு செம்பு பாத்திரத்தில் கருப்பட்டியில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, சிறிது ஏலக்காயை தட்டிப் போட்டு, வேக வைத்த உருண்டைகளையும் சேர்த்து துருவிய தேங்காயை கொட்டி இறக்கி விட்டாள் அன்விதா.
ஷிவாஷினி அதனை ருசி பார்க்க, அதன் சுவை நாக்கில் நாட்டியம் ஆட, “அம்மு வேற லெவல் போ… செம டேஸ்டா இருக்கு டி… அப்படியே சாக்லேட் சாப்பிடற போலவே இருக்கு…” என சப்புக் கொட்டி சாப்பிட்டாள்.
ஆதித்ய கரிகாலனோ ஷிவுயை ஒரு கேவலமான பார்வை பார்த்துவிட்டு, வந்தியத்தேவன் எடுத்த வீடியோவை எடிட்டிங் செய்ய அமர்ந்து விட்டான்.
அதன் பின்னர், அனைத்தையும் ஒழுங்கு படுத்தி விட்டு, நால்வருமாக வீட்டிற்கு சென்று ராஜேஸ்வரி பாட்டி சமைத்திருந்த மட்டன் குழம்பை ஒரு பிடி பிடித்ததும் தான் அவரவர் வீட்டிற்கு சென்றனர்.
அன்விதாவும் அவர்களை அனுப்பி விட்டு, ஆதி எடிட்டிங் செய்த காணொளிக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்து விட்டு, அதனை வலையொளியில் பதிவேற்றிய பிறகு, அவளுமே ஒரு குட்டி தூக்கத்தை போட்டாள்.
2. ஆரோனின் ஆரோமலே!
written by Competition writers
அரோமா – 2
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந்தா
என்று முணுமுணுப்பாக சொல்லிவிட்டு, கண்களை திறந்து பார்த்தார் 60 வயதை பூர்த்தியடைந்த ராஜேஸ்வரி. அந்த வீட்டின் மூத்த பெண்மணி.
அவருக்கு வயதானாலும் தன்னுடைய வேலைகளை தானே செய்து கொள்ளும் அளவிற்கு அவருடைய உடல்நிலை சற்று நன்றாகவே இருந்தது.
காலம்பர எழுந்து குளித்து விட்டு வந்ததும், நேராக தோட்டத்திற்கு சென்று பச்சை பசேலென இருந்த மருதாணிகளை ஒடித்து வந்து, அதன் இலைகளை மட்டும் பறித்து, அம்மியில் இட்டு அதில் கொஞ்சம் சர்க்கரை, இரண்டு கிராம்பு, நெல்லிக்காய் அளவு புளி மற்றும் சில துளி எலுமிச்சை சாற்றையும் சேர்த்து, சதக் சதக் என்று அரைக்கும் சத்தத்தில்,
வேக வேகமாக குளித்து விட்டு வந்து, “ஈசு… உனக்கு எத்தன வாட்டி சொன்னாலும் புரியாதா… எனக்கு தேவையானதா நானே பண்ணிக்க மாட்டேனா… குடு அத… கொஞ்சம் அப்படி தள்ளி உட்காரு…” என்று சிடுசிடு குரலில் சொல்லி அவரது பக்கத்தில் அமர்ந்த பேத்தியை கண்டு,
“ப்ச், அம்மு நீ ஏண்டி எந்திரிச்சு வந்த, அதுக்குள்ள குளிச்சும் முடிச்சு இருக்க… இன்னைக்கு ஞாயிற்று கிழமை தானே… கொஞ்சம் தூங்க வேண்டியது தானே…” என்று சொல்லவும் அவரை முறைத்து பார்த்தாள் அன்விதா.
அவளது கைகளோ அம்மியில் இருக்கும் மருதாணியை அரைத்த படி இருந்தாலும், “உனக்கு என்ன இளமை ஊஞ்சல் ஆடுதா ஈசு… வயசான காலத்துல இப்படி வந்து ஜங்கு ஜங்கு னு அம்மியில அரைச்சிட்டு இருக்க…” என்று கிண்டலாக கூறவும்,
“யாருக்கு டி வயசு ஆச்சுன்னு சொல்ற, உனக்கு கல்யாணம் செஞ்சு வச்சி, நீ பெக்குற பிள்ளைக்கு பிள்ளை பொறக்கும் வரைக்கும் எனக்கு ஒன்னும் ஆகாது… ஆமா…” என்று ராஜேஸ்வரி சொல்ல, புன்னகை செய்தாள் பெண்.
“அதுக்கு நீ உன் உடம்பை ஒழுங்கா பார்த்துக்கணுமாக்கும்…” என்று உதட்டை சுழித்து சொல்லிய அன்வி, அரைத்த மருதாணியை ஒரு கிண்ணத்தில் வழித்து வைத்தவளை கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் ராஜேஸ்வரி.
அன்விதா, பத்தொன்பது வயதில் துள்ளி விளையாடும் பூஞ்சிட்டு இவள். மாறன் மற்றும் ரோஷினி ஜோடியின் ஓரே ஒரு மரிக்கொழுந்து.
அவளுடைய ஐந்தாம் வயதில் ரோஷினிக்கு மஞ்சள் காமாலை வந்து, அது மிகவும் முற்றிப் போய் இறைவடி சேர்ந்து விட்டார், அன்றில் இருந்து மாறனே அவளுக்கு தாயுமானவராகி போனார்.
ரோஷினியின் மறைவுக்கு பின்னர் மாறனின் ஒரே ஒரு பற்றுக்கோல் அன்விதா தான். அன்வி அப்பாவின் செல்ல பெண், அவர் சொன்னது தான் வேதம் என்பவள், மாறனும் மகளை எதற்கும் ஏங்க விட்டதே இல்லை.
மாறனின் தாய் தான் ராஜேஸ்வரி. மாறன் பார்த்துக் கொண்டாலுமே அன்விதாவை அன்னையாக இருந்து வளர்ப்பவர், அன்வி தந்தையின் இளவரசியாக இருந்தாலும், பாட்டியின் தேவதையும் அவள் தான். தாய்க்கும் மேலாக இருந்து, அவளின் சிரிப்பில் மகிழ்பவர் அவர்.
அன்விதா டேடிஸ் லிட்டில் பிரின்சஸ் என்பதை விட பாட்டிஸ் லிட்டில் பிரின்சஸ் என்றே சொல்லலாம்.
ராஜேஸ்வரியின் கணவர் முத்துவேல் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தான் இறந்தார். அவருக்கும் பேத்தி என்றால் உயிர். சில விஷயங்களில் மாறனும் ராஜேஸ்வரியும் கண்டிப்பு காட்டினால் கூட, தாத்தா எதற்கும் கண்டிப்பு காட்டியதில்லை. அவருக்கு பேத்தி சொல்லே வேதவாக்கு.
அவருடைய இழப்பு சிறு பெண்ணை மிகவும் பாதித்து இருந்தாலும், பாட்டிக்காக தன்னை தேற்றி அவரையும் கொஞ்சம் கொஞ்சமாக தேற்றினாள்.
அன்விதாவின் வட்டம் என்பது சிறிது தான், அதில் இவர்கள் மட்டுமன்றி இன்னும் சிலரும் உடன் இருந்தனர், அவர்கள் வந்தியத்தேவன், ஆதித்ய கரிகாலன் மற்றும் ஷிவாஷினி.
இவர்கள் மூவரும் தான் அவளுடைய அறுந்த வாலு கூட்டத்தின் உறுப்பினர்கள், அந்த கூட்டத்தின் அமைதியான தலைவி இவளே!
அன்விதாவிற்கு கொஞ்சம் குறும்பு தனம் இருந்தாலும், பொறுப்பான அமைதியான பெண்ணே! வீட்டில் மட்டுமே அவள் கலகலப்பான பெண், வெளியே அவள் எல்லோரிடமும் அளந்து அளந்தே பேசுபவள். அவளுக்கு உரியோரிடமே அவள் குழந்தை தனம் வெளிப்படும்.
அன்விதா இப்பொழுது B.sc. Nutrition and dietetics பிரிவில் கல்லூரி முதலாம் ஆண்டை முடித்து விட்டு இரண்டாம் ஆண்டில் பயின்று கொண்டு இருக்கிறாள்.
அவளுடன் ஷிவாஷினியும் படித்து வருகிறாள். உயிர் தோழி, இருவருக்கும் ஒரே வயது, பக்கத்து பக்கத்து வீடு என்பதால், சிறு வயதிலிருந்தே ஒன்றாக தான் உள்ளனர். ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் இருந்து, தற்பொழுது ஒரே துறையில் ஒன்றாக கல்லூரியும் சென்று வருகின்றனர்.
“என்னடி அம்மு மருதாணி வாசம் மூக்கை தொலைக்குது…” என்று முகர்ந்த படி வீட்டில் நுழைந்தாள் ஷிவாஷினி.
ராஜியோ, “என் பேத்தி இன்னும் அடுப்பை கூட பத்த வைக்கல டி… நீ என்னனா மருதாணி வாசத்துக்கே மோப்பம் புடிச்சிட்டு வந்துட்ட…” என்க,
அவளோ, “என்ன ஈசு…” என்று பேச ஆரம்பிப்பதற்கு முன்பே,
“ஈசு பீஸுன்னு சொன்ன, இடுப்பு எலும்பை உடைச்சு அடுப்பில போட்டுடுவேன் பார்த்துக்க…” என்று கோபத்தில் கத்த,
‘நமக்கு எதுக்கு வம்பு…’ என்று எண்ணியவள் ஈஈஈ என பல்லைக் காட்டினாள்.
அன்வியோ, “ஈசு… அவ கிட்ட சண்டைக்கு போகாம சும்மா இருங்களேன்…” எனவும்,
“நீ என்னையே சொல்லு, அவளை ஒன்னும் கேட்டுடாத…” என்று முறுக்கிக் கொள்ளவும்,
“ஷிவு… எதுக்கு டி அவங்களை கத்த வைக்குற… கொஞ்சம் சும்மா தான் இரேன்… வா நம்ம உள்ள போகலாம்… நேத்து நான் புதுசா ஒன்னு கண்டு பிடிச்சு இருக்கேன்…” என்று இருவருக்கும் சமாதான கொடியை பறக்க விட,
ஷிவாவும் அவரை முறைத்து கொண்டே சென்றவள், “உங்க ஆயா எப்ப பார்த்தாலும் என்னைய திட்டிக்கிட்டே இருக்கு டி…” என்று சலித்துக் கொள்ள,
“மொதல்ல நீ அவங்களை வம்பு இழுக்காம இருக்கீயா…”
“அப்படி இருந்தா தான் எனக்கு தூக்கமே வர மாட்டேங்குதே டி…”
“ம்ம்… அதே போல என் ஈசுக்கும்…” என்று சொல்லி சிரித்தாள் அன்விதா.
ராஜியும் ஷிவாவும் இப்படி தான் வம்பு சண்டை போட்டுக் கொண்டே இருந்தாலும், அவளை சொந்த பேத்தி போல தான் பார்த்துக் கொள்வார். இவளுக்குமே பாட்டி இல்லை, அந்த குறையை தீர்த்து வைப்பவராக இருந்தாலும், அவரிடம் ஏதாவது சண்டை போட்டு திட்டு வாங்கிக் கொள்வதில் அலாதி பிரியம். இவர்களின் பாவமான தூது புறா என்னவோ அன்விதா தான்.
சமையல் அறையில் இருந்தே தேங்காயை கடித்து கொண்டே, “என்ன வானரமும் கருங்குரங்கும் இன்னும் இங்க ஆஜர் ஆகாம இருக்காங்க… அதிசயமா இருக்கே அம்மு…” என்று கேட்கவும்,
“ஷிவு… ஈசு போய் இப்ப அவங்க ரெண்டு பேருமா… எல்லார் கிட்டயும் சண்டைக்கு போகாம உன் வாய் சும்மாவே இருக்காதா டி… இப்ப நீ கம்முனு இல்ல நானே உன் லொடலொட வாய்க்கு டேப் போட்டு ஒட்டி விட்ருவேன்…” என்ற நண்பியை கண்டு திருதிருவென விழிக்க,
“இனி நீ திங்க மட்டும் தான் வாயை திறக்கணும்… சரியா…” என்றதற்கு தலையை மட்டும் ஆட்டினாள் ஷிவா.
அன்வியோ நேரத்தை பார்க்க ஏழரை ஆகி இருந்தது.
“அண்ணாவும் ஆதியும் இன்னும் காணும்… இன்னைக்கு கொஞ்சம் வேலை இருக்கு, ஏழு மணிக்கெல்லாம் வாங்கன்னு நேத்தே சொல்லி தான் அனுப்பனேன்… ஆனா, கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாம இன்னும் வராம இருக்காணுங்க பாரு ஷிவு…” என்று புலம்ப,
“அம்மு நான் வேணா கால் பண்ணட்டா?”
“ஒன்னும் வேணா தாயே… நானே பண்ணிக்கறேன்…” என்று விட்டு அவளே அவளது அண்ணனான வந்தியத்தேவனுக்கு அழைப்பு விடுத்தாள்.
இரண்டு முறை அழைத்தும் ஏற்காமல் இருக்க, நண்பனான ஆதித்ய கரிகாலனுக்கு அழைத்துப் பார்த்தாள். அவனுமே எடுக்காமல் இருந்தான்.
“பாரு ஷிவு… ரெண்டும் ஃபோன் எடுக்கல… லேட் ஆகும்னு அட்டென்ட் பண்ணியாச்சு சொல்லணும் தானே… அது கூட சொல்லாம உன் ஃபோனையே எடுக்காம இருக்கானுங்க பாரேன் டி…” என்று தோழியிடம் புகார் செய்தாள் அன்விதா.
“ஹ்ம்ம்…”
“ஹிஹி… அம்மு… நீ வேணுன்னா பாரு அவனுங்க ரெண்டு பேரும் இப்போ ஒன்னா தான் இருப்பானுங்க… அதான் நீ ஃபோன் அடிச்சும் எடுக்கவே இல்ல…” எனக் கூறி நண்பியின் கோபத்தில் மண்ணெண்ணெய்யை தாராளப் பிரபுவாக ஊற்றிக் கொண்டிருந்தாள் ஷிவாஷினி.
1. ஆரோனின் ஆரோமலே!
written by Competition writers
அரோமா – 1