மாதவஞ் செய்திட வேண்டும்…” என்று கவிமணி கூறியது போல் பெண்ணாகப் பிறப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். பெண்களால் தான் உலகத்தில் அறம் கட்டமைக்கப்படுகிறது. ஒவ்வொரு பெண்ணும் குழந்தைகளை மட்டும் வளர்க்கவில்லை. ஒரு சமுதாயத்தையே மாற்றியமைக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் வீட்டின் குடும்பப்பொறுப்பை பார்ப்பதோடு, வெளி வேலைகளையும் திறம்பட நிர்வகிக்கின்றனர். இன்று பெண்கள் கால்ப்பதிக்காத துறையே இல்லை எனலாம். நட்சத்திரமாக ஜொலிக்கும் பெண்களைப் போற்ற வேண்டும்.
ஒவ்வொருவரும் வீட்டில் உள்ள பெண்களான அம்மா, மனைவி, மகள், சகோதரியென அவர்கள் வாழ்வில் சம்பந்தப்பட்ட அனைவரையும் மதிக்க வேண்டும். அவர்களைச் சிறப்பிப்பதற்காக இந்த மகளிர் தினம் கொண்டாடுவது சிறப்பு தான். அதுமட்டும் அல்லாமல் இன்று ஒரு நாளாவது அவர்களுக்கு வீட்டு வேலையிலிருந்து ஓய்வளிக்க வேண்டும்”என்று பிரபல டிவியில் நேரலையாக ஓடிக் கொண்டிருந்த, மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியான, மகளிர் தின கொண்டாட்டம் அவசியமா? அநாவசியமா? என்ற பட்டிமன்ற நிகழ்ச்சியில் சர்வேஷ் உணர்ச்சிகரமாகப் பேசிக்கொண்டிருந்தான்.
அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும், கைத்தட்டல் அள்ளியது.
அதைக் கவனத்தில் கொள்ளாமல் மாதுளை முத்துக்களை உரிப்பதில் கவனமாக இருந்தாள் சுபாஷினி.
“மாம்! இங்கே பாருங்க… இந்த ப்ரோகிராம் செம்ம இன்ஸ்ட்ரஸ்டிங்கா போகுது. யூவார் லக்கி.” என்று குறும்பு புன்னகையுடன் கூறினான் பதினைந்து வயதான ஜீவன்.
அவனைப் பார்த்துச் சிறு புன்னகையை சிந்தியவள், “ஜீவா! இதைப் பார்த்துட்டு நான் உக்கார்ந்துட்டு இருந்தா, உங்க அப்பா வரும்போது அவருக்குத் தேவையான ஜுஸ் ரெடியா இருக்காது. நான் அதிர்ஷ்டசாலியா? இல்லையான்னு அப்போ உனக்குத் தெரிய வரும்.” என்றாள்.
“என்ன சொல்றீங்க மாம்? புரியலை.”என்றுக் கூறிய ஜீவனுக்கு ஏதோ புரிவதுப் போல இருந்தது. ஆனால் மனது ஏற்க மறுக்க. தாயிடமே தஞ்சமடைந்தான்.
“ஜீவா! காலையிலே உங்க அப்பா இந்த ஷோல கலந்துக்கிறதுக்காகப் போகும் போதே, ஜுஸ் போட்டு வைக்கச் சொல்லிட்டு போயிருக்காங்க. அவங்கத் திரும்பி வரும்போது கேட்டது இல்லைன்னா, அவரோட இன்னொரு முகம் தெரிய வரும்.”
“மாம்! டாட் அப்படிக் கிடையாது. மத்தவங்க வேணும்னா அப்படி இருக்கலாம். டாட் உங்களை நல்லாத் தானே பார்த்துக்கிறார். உங்க விருப்பப்படி தானே இந்த வீட்ல எல்லாம் நடக்கும். நான் எதுக் கேட்டாலும் கூட, அம்மாக் கிட்ட கேளுன்னு தானே சொல்வாங்க.” என்று படபடத்தான் ஜீவன்.
“உன்னை வளர்க்குறதுல இருந்து, இந்த வீட்டை நிர்வகிக்கிற வரைக்கும் எந்தப் பொறுப்பையும் அவர் ஏத்துக்க தயாரா இல்லை. வீட்ல எல்லா வேலையும் நான் தான் செய்யணும். ஆனால் அவர் கிட்ட எல்லாத்தையும் சொல்லணும். இல்லைன்னா ஈஸியா சொல்லிடுவார் சம்பாதிக்கிற திமிர்னு…”என்று மகனுக்குப் புரிய வைத்து விடும் வேகத்தில் வார்த்தைகளை விட்டார்.
“மாம்! டாடி உங்களுக்கு டெய்லி எவ்வளவு ஹெல்ப் பண்ணுவாருன்னு எனக்குத் தெரியும். பொய் சொல்லாதீங்க.”என்று தந்தைக்காக வரிந்து கட்டிக்கொண்டு வந்தான் ஜீவன்.
ஜீவனை அடிப்பட்ட பார்வைப் பார்த்தவள், தோளைக் குலுக்கிக் கொண்டு கிச்சனுக்குள் நுழைந்தாள்.
அம்மாவின் பார்வை அவனை வருத்தியது.
அவள் பின்னேயே வந்த ஜீவனோ, “மாம்! நீங்க ஏதோ அப்பாவைப் பத்தி தப்பா புரிஞ்சுட்டுருக்கீங்க. மை டாட் இஸ் ஜெம்.”என்றான்.
“ஆஹான்!”என்று கிண்டலாகச் சுபாஷினி வினவ.
“மாம்! ஐ வில் ப்ரூஃப் இட். இன்னைக்கு நீங்க ஜூஸ் போட வேண்டாம்.” என்று முகம் சிவக்கக் கூறினான் ஜீவன்.
“ஓகே!அதையும் பார்த்துடலாம்.” என்ற சுபாஷினியோ, உரித்த மாதுளை முத்துக்களை கிண்ணத்தில் போட்டு மூடி வைத்து விட்டு, ஹாலில் வந்து அமர்ந்துக் கொண்டாள்.
ஜீவனும் மௌனமாக அவனது அறைக் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு ஸ்டடி டேபிளில் அமர்ந்து ஹாலை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான்.
*******************
சற்று நேரத்தில் வந்த அந்த வீட்டின் தலைவனோ,”ப்ரோகிராம் பார்த்தியா? என்னோட ஸ்பீச் நல்லா இருந்துச்சா சுபா?“ என்று வினவியவாறே மனைவியின் அருகில் அமர்ந்தான்.
“வாட்? ஜூஸ் போடலையா? காலையில சொல்லிட்டு தானே போனேன். இவன் என்ன சொல்றது நாம என்ன கேட்கிறதுன்னு இருக்கியா? எல்லாம் சம்பாதிக்கிற திமிரு.” என்று வார்த்தைகளைக் கொட்டினான் சர்வேஷ்.
“இல்லைங்க, எனக்கு…” என்று சுபாஷினி ஏதோ சொல்ல வர, அதைக் காதுக் குடுத்துக் கூடக் கேட்காமல்,
“ப்ச்! சண்டே அதுவுமா ரெஸ்ட் எடுக்காம வெளியில போறானே, அவனுக்கு ஏதாவது செய்வோம்னு இல்லாமல் மகாராணி ஒய்யாரமா ஓய்வெடுத்துட்டு இருக்கீங்க. ஆஃபீஸ் போகும்போது நானும் உனக்கு எல்லா உதவியும் செஞ்சுட்டு தானே போறேன். வீட்ல இருக்கிற அன்னைக்குக் கூட எனக்கு ஒரு சின்ன உதவி செய்ய முடியாதா?” என்று படபடத்தவன், அவளுக்கு என்ன பண்ணுது என்றுக் கூட விசாரிக்காமல் அறைக்கதவை அறைந்து சாத்தினான்.
தனது அறையிலிருந்து வந்த ஜீவனின் முகமோ, தந்தையின் இன்னொரு முகத்தைப் பார்த்து வெளிறிப் போனது.
“ஜீவா! ரியலுக்கும், இந்த மாதிரி ஷோல பேசுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறதுன்னு இப்போ புரியுதா? நீ ஸ்கூலுக்கு கிளம்பும்போது, அவர் செய்யுற ஒன்னு, ரெண்டு வேலையைப் பார்த்துப் பிரம்மிச்சு போயிருப்ப. அதுவும் கூட அவருக்கு லேட்டாயிடுமேன்னு தான் செய்வார். ஒரே ஆஃபிஸ். ஒன்னா போகணும்னு கட்டாயம்.
அங்க வாய் கிழிய பேசினாரே அது நிஜம் கிடையாது. இது தான் நிதர்சனம். இன்னைக்கு மகளிர் தினம் தானே. அந்த ஓய்வை எனக்குக் குடுக்க வேண்டியது தானே. இந்த மகளிர் தின கொண்டாட்டம் எல்லாம் ஷோவிலும், சமூக வலைத்தளங்களிலும் நடக்கும் ஒருநாள் கூத்து.” என்று ஏளனமாகச் சுபாஷினி கூற.
“மாம்!” என்ற ஜீவனது கண்கள், தந்தையின் நடத்தையை ஏற்க முடியாமல் கலங்கியது.
“டோண்ட் க்ரை ஜீவா. நிதர்சனத்தைப் புரிஞ்சுக்கோ.
வீட்ல ஒன்னு, ரெண்டு வேலை செய்துட்டு, நான் உனக்கு உதவி செய்யுறேன்னு உங்க அப்பா பெருமையடிச்சுக்குறார். அவருக்கு ஒன்னுப் புரியலை. குடும்பத்தில் உள்ள பொறுப்புகள் இருவருக்கும் சமம். அப்போ வேலைகளும் இருவருக்கும் பொதுவானது தான். அதை அவர் தான் உணரலை, நீயாவது புரிஞ்சுப்பேன்னு நினைச்சேன்.” என்று அவர் தொடர்ந்து கூறுவதற்குள்,
“சாரி மாம்!” என்று மன்னிப்பு கேட்டான் ஜீவன். காலையில் தனது தாயிடம் பேசியதை நினைத்துப் பார்த்தவனுக்கு, தாயின் அடிப்பட்ட பார்வைக்கான அர்த்தம் புரிந்தது.
“ஜீவா! நீ மன்னிப்பு கேட்கணும்னுங்குறதுக்காகச் சொல்லலை. உங்க அப்பா டிவில பேசுனதுல ஒண்ணு மட்டும் தான் உண்மை. இந்தச் சமுதாயத்தில் மாற்றத்தை எங்களால் மட்டும் தான் கொண்டு வர முடியும்னு சொன்னார். அதை நான் உன் கிட்ட இருந்து எதிர்ப்பார்க்கிறேன்.” என்று தனது மகனை அர்த்தத்துடன் பார்த்தாள் சுபாஷினி.
அவள் சொல்லாமல் விட்டதைப் புரிந்துக் கொண்ட ஜீவனோ, “நீங்கப் போய் ரெஸ்ட் எடுங்க மாம். நான் போய் உங்களுக்கும், டாட்டுக்கும் சேர்த்து ஜுஸ் போட்டுட்டு வர்றேன்.”என்றான்.
“ஹாய்! ஹாய்! எவ்ரிஓன்! நான் உங்கள் மாம் அண்ட் ப்ரின்ஸ்.” என்றவரின் குரல் லேசாகக் கலங்கியதோ, என்னவோ அடுத்த நொடி தன்னை மீட்டுக் கொண்டார் சாதனா.
அவரது கணீர் என்ற குரலுக்கும், அவரது மகனும், அவரும் சேர்ந்து போடும் கலாட்டாவான வீடியோக்களைப் பார்ப்பதற்காகவுமே லட்சக்கணக்கான வ்யூவர்ஸ் அவர்களது சேனலைச் சப்ஸ்க்ரைப் செய்து இருந்தனர். அவரது வீடியோவில் ஏதாவது ஒரு கருத்து நிச்சயம் இருக்கும். அது தான் அவரது பலம்.
அவரது நொடி நேர தடுமாற்றத்தை யாரும் கண்டுக் கொள்ளவில்லை. ஆனால் அவரது மகன் அருகில் இல்லாததை கண்டுக் கொண்டனர்.
வீடியோவில் சாதனா தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
“அனைத்து மகளிருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் சொல்லணும்னு தான் இந்த வீடியோ எடுக்கும்போது நினைத்தேன். ஆனால் என்னால் சொல்ல இயலவில்லை.” என்றவரின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
அதைத் துடைத்தவர், தனது கனீர் குரலை மீட்டுக் கொண்டுத் தொடர்ந்தார்.
“ஆனாலும் இந்த வீடியோ பெண்களுக்கு உபயோகமானதா இருக்கும்னு நம்புறேன். அப்புறம் இந்த வீடியோ கொஞ்சம் பெரியதாகத் தான் போகும். ப்ளீஸ் ஸ்கிப் பண்ணாமல் பாருங்க. எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஓகே நேரா கன்டென்டுக்கு வர்றேன்.
‘பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை.’என்ற பாரதியாரின் வாக்கினை இன்றைய பெண்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர். பெண்கள் எல்லா துறையிலும் முத்திரை பதிப்பதைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன். ஆனால் இந்த நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா? என்றால் இல்லை என்பது தான் வேதனையான பதில்.
அங்கொன்றும், இங்கொன்றுமாகப் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள் இன்று பெருகிப் போனதற்கு, உடனடியாகத் தண்டனை தராத நம்முடைய அரசாங்கம் மட்டும் காரணமில்லை. நாமும், நம்முடைய வளர்ப்பும் தான் காரணம்.
நம்முடைய வளர்ப்பு என்றதும் பெண்களை ஒழுங்காக வளர்க்காதது என்று தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். பெண் பிள்ளைகளுக்கு நம்பிக்கை தர்ற மாதிரி நாம் நடந்துக்கலை.
இப்போ இருக்கிற இயந்திர உலகத்துல, டெக்னாலஜியால நிறைய நல்ல விஷயங்கள் இருந்தாலும், சில கெடுதல்களும் இருக்கு.
வெளியிடங்களுக்கு சென்று வருகின்ற குழந்தைக்களுக்கும், பெண்களுக்கும் பாதுக்காப்பு இல்லை. நம்மை அறியாமலே நம்முடைய அந்தரங்கத்தை போட்டோ எடுத்து ப்ளாக்மெயில் பண்றாங்க. இல்லை சோஷியல் மீடியாவில போடுற ஃபோட்டோவை மார்பிங் பண்ணி, அதை வச்சு மிரட்டுறாங்க. சில பெண்கள் அறியாமையால் காதல்ங்குற பெயருல சிக்கி சீரழியிறாங்க.
ஒரு சின்னத் தப்பை செஞ்சிட்டு, வீட்டுக்குத் தெரிஞ்சா என்னாகுமோ, இல்லை சோஷியல் மீடியாவில் லீக்காகிடுமோன்னு பயந்து, மேலும், மேலும் துன்பத்தை அனுபவிக்கிறாங்க.
பெண்களோட பயம் தான், அவர்களின் பலவீனம். அந்தப் பலவீனத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் அந்த வக்கிரம் பிடித்த அயோக்கியர்கள்.
பெத்தவங்கக் கிட்ட சொல்ல எதுக்கு பயப்படணும். கொன்னே போட்டாலும் பெத்தவங்கக் கையால சாகலாம். கண்டவன் கிட்ட இறங்கிப் போகத் தேவையில்லை. அதேப் போல நாமும் பிள்ளைங்க சொல்றதைக் காதுக் குடுத்துக் கேட்கணும்.
அவங்க சொல்றதை முழுவதா கேட்காமல் திட்டக் கூடாது. அடுத்து என்ன செய்யணும்ங்குறதை பார்க்கணும். அவங்களுக்கு சப்போர்ட்டிவா இருக்கணும். எந்தத் துன்பம் வந்தாலும் பெத்தவங்க சப்போர்ட்டா இருப்பாங்க என்ற நம்பிக்கையைப் பெண் குழந்தைக்களுக்கு குடுக்கணும்.அந்த அளவுக்கு நம்ம ஃப்ரெண்ட்லியா இருக்கணும்.
அதேப் போலத் தப்பு செய்தது தன்னுடைய மகனோ, கணவனோ, தந்தையோ யாராக இருந்தாலும் அவர்களது தப்பை பகிரங்கமாக வெளிப்படுத்தணும். அதை விட்டுவிட்டு அந்தத் தவறை மறைச்சாலே, நாம மறைமுகமாக அவங்களுக்கு ஆதரவுக் கொடுக்குறதுப் போலாகிடும். அடுத்த முறையும் துணிஞ்சு அதே தவறை அவங்க செய்வாங்க. அதைத் தடுக்கணும்னா, நாம சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுக்கணும். இல்லை நாமே தண்டனையைக் கொடுக்கணும். அப்போ தான் பெண்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.
அதை விட்டுட்டு, பொம்பளைப் பிள்ளை
நேரங்கெட்ட நேரத்துல ஏன் வெளியில் போறாங்க? அவங்க ஒழுங்கா டிரஸ் பண்ணா ஏன் இப்படி நடக்கப் போகுது? ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியுமான்னு மடத்தனமா கேள்விக் கேட்காமல், பிள்ளைகள் வளர்ப்பில் எல்லோரும் கவனத்தை செலுத்துங்க.
மகளாக இருந்தால் தைரியமாக வாழவும், மகனாக இருந்தால் பெண்களிடம் கண்ணியமாக இருக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும். பிள்ளைகளோட எதிர்க்காலத்திற்காக ஓடுறோம்னு, அவங்களை கவனிக்காமல் விட்டுடாதீங்க. வருங்காலம் இளைய தலைமுறையினரின் கையில் தான் இருக்கிறது. இளையதலைமுறையினரின் வருங்காலமோ, நம்முடைய வளர்ப்பில் தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மீண்டும் சொல்கிறேன், தப்பு செய்தது தன்னுடைய மகனா இருந்தாலும் சரி, தண்டனைக் கொடுக்கத் தயங்காதீங்க. இதை என்னுடைய சப்ஸ்க்ரைபர்ஸ் ஃபாலோ செய்வீர்கள் என்று தெரியும். ஆனாலும் சொல்லுவது என்னுடைய கடமை.
இதுவரை உங்கள் குழந்தைக்களுடன் நேரத்தைச் செலவளிக்கலைன்னா, பரவாயில்லை. இன்றிலிருந்து ஆரம்பியுங்கள். ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம். வருங்கால பெண்களாவது சுதந்திரமான மகளிர் தினத்தைக் கொண்டாட வாழ்த்துக்கள். மறுபடியும் சந்திப்போமான்னு தெரியலை. குட் ஃபை ஃப்ரெண்ட்ஸ்!” என்று அந்த வீடியோ முடித்திருக்க.
அதற்குக் கீழே ஏகப்பட்ட கமெண்ட்ஸ்.
என்னாச்சு சிஸ்? எதுவும் பிரச்சினையா? சரணை காணோமே? என்று ஏகப்பட்ட கேள்விகள்.
ஆனால் எதற்கும் சாதனா பதிலளிக்கவில்லை.
அதற்கான பதில் அடுத்த நாள் எல்லா பத்திரிக்கையிலும் கொட்ட எழுத்தில் முதல் பக்கத்தில் வந்திருந்தது.
பிரபல யூட்யூபரான சரண், அவனைத் தேடி வந்த பெண்களை மயக்கும் வார்த்தைகளைப் பேசி, ஃபோட்டோ எடுத்து, ப்ளாக்மெயில் பண்ணி சீரழித்ததையும், அதைத் தெரிந்துக் கொண்ட அவரது அன்னை விஷம் வைத்துக் கொன்று விட்டுப் போலிஸ் ஸ்டேஷனில் சரணடைந்ததையும் பத்தியும் விலாவரியாக எழுதியிருந்தனர்.
அந்த நியூஸைப் படித்தவர்களுக்கு, பிறகு தான் அவரது வீடியோவில் சொல்லியிருந்த விஷயமே புரிந்தது. தப்பு செய்தது தன் மகனாக இருந்தாலும் தண்டனை வழங்கிய அந்தச் சிங்கப் பெண்மணிக்கு மனதார தலை வணங்கினர் அவரது ஃபாலோவர்ஸ்.
ஆனாலும் அவர்களுக்குச் சாதனா செய்த காரியம் பிரம்பிப்பைத் தான் தந்தது. ஏனென்றால் சரணுக்கும், அவருக்கும் உள்ள பாண்டிங் அப்படி. அப்படி இருக்கும் போதே சரண் ஏன் இப்படியொரு ஈனக் காரியத்தைச் செய்தான் என்று புரியாமல் குழம்பித் தவித்தனர். அவனுக்குத் தண்டனைக் குடுக்கும்போது பெத்த மனம் எப்படித் தவிச்சிருக்கும் என்று சாதனாவை நினைத்தும் வருந்தினர்.
ஆனால் அவர்கள் அறியாதது, சாதனாவின் நெஞ்சுரத்தைத் தான். மகனைப் போலீஸில் பிடித்துக் கொடுத்தால், கணவர் எப்படியும் மகனை வெளியில் எடுக்க முயற்சிப்பார் என்றுத் தெரியும். அதனால் தான் அதற்கு வாய்ப்பளிக்காமல், தானே தண்டனைக் கொடுக்கும் முடிவுக்கு வந்தார். அதுமட்டுமல்லாமல் அவரது மகனின் இறுதி நிமிடத்தையும் வீடியோவாக எடுத்திருந்தார்.
தன் மகனைப் பற்றிய அருவருப்பான மறுபக்கம் தெரிந்ததும், என்ன செய்வது என்று முடிவெடுத்துக் கொண்ட சாதனா, தன் மகனுக்குப் பிடித்த உணவைத் தயார் செய்வதிலிருந்து, அதில் விஷத்தைக் கலப்பது, பிறகு மகனுக்கு ஊட்டுவது என எல்லாவற்றையும் வீடியோ எடுத்திருந்தார். அதைவிட ஹைலைட், அவனுடைய கீழ்த்தரமான செயல் எல்லாம் தனக்குத் தெரியும் என்ற உண்மையையும், அதற்குத் தண்டனையாக விஷத்தைக் கொடுத்ததையும் சொல்லி, அவன் சாகும்போது நரகவேதனையையும் கொடுத்தார். பூட்டிய அறையிலிருந்து ஜன்னல் வழியாகத் தாயிடம் உயிருக்காக அவன் மன்றாடுவதையும் வீடியோ எடுத்திருந்தார். இதை அவரது சேனலில் டைம் செட் பண்ணி அப்லோட் செய்தார்.
அதைப் பார்த்துத் தவறுச் செய்பவர்கள் திருந்துக்கிறார்களோ, இல்லையோ, தீர்ப்புகள் திருத்தப்படும்.
” ரித்தீஷ் எழுந்து வர்றியா? இல்லையா?” என்ற குரல் கிச்சனிலிருந்து ஒலித்தது.
” எதுக்கு தீபா இப்படி கத்திட்டு இருக்க? இன்னைக்கு சன்டே தான. அப்புறம் என்ன? குழந்தையைத் தூங்க விடு.” என்றவாறே காக்கி நிற சட்டையைப் போட்டுக் கொண்டு வந்தான் ரிஷி.
“உங்களுக்கு என்ன ? வேலைக்குப் போயிடுவீங்க. நானில்லை இந்த லாக்டவுன்ல அல்லாடுறேன். வீட்டு வேலையையும் கவனிக்கணும். அவனையும் பார்த்துக்கணும். ஸ்கூல் இருந்தாலாவது பரவால்ல. அவங்களுக்கு பணத்தை லம்பா கட்டிட்டோம். அவங்க வாட்ஸ்அப்ல வீடியோ அனுப்பிட்டு, நம்ம உயிரை வாங்குறாங்க. கொஞ்சமாவது நியாய, அநியாயம் பார்க்கிறவங்களா இருந்தா, பணத்தையாவது குறைக்கணும். அதுவும் இல்லை.” என்று எதிலோ ஆரம்பித்து எதிலேயோ முடித்தாள் தீபா.
” சரி விடு தீப்ஸ். அவங்க, அவங்க பண்ற அநியாயத்துக்குத் தண்டனை கிடைக்கும். நீ டென்ஷனாகாத. நான் ஈவினிங் வந்து ரித்துவை படிக்க வைக்கிறேன்.” என.
அதுவரை இருந்த கோபமெல்லாம் மறைய,” சாரி ரிஷி. நானும் டென்ஷனாகி, உங்களையும் டென்ஷனாக்கிட்டேன். சரி சாப்பிட உட்காருங்க. உங்களுக்கு டியூட்டிக்கு வேற டைம் ஆயிடுச்சுல்ல.” என்றவள் அவனுக்குப் பரிமாறத் தொடங்கினாள்.
” தீப்ஸ்… கோபப்படாதடா. நம்ம ஹெல்த் தான் பாதிக்கும். எத்தனை காமராஜர் வந்தாலும் இவனுங்கள்லாம் திருந்தமாட்டானுங்க. அவர் இலவச கல்விக் கொடுத்தாரு. அதை விட்டுட்டு, தனியாருக்கு போனா, அவனுங்களும் கொள்ளை அடிக்கத் தான் செய்வாங்க. விடுடா. மைண்ட ரிலாக்ஸாக வச்சுக்கோ. வேணும்னா, ஹாஃப் டே பர்மிஷன் கேட்குறேன். நாம ரித்திஷுக்கு, தங்கச்சி பாப்பா ரெடி பண்ணுவோமா.” என்று கண் சிமிட்டி சிரிக்க…
” ம்ச். போங்க. கேலி பண்ணாதீங்க. நீங்கத் தான் கடமை தவறாத போலீஸ் ஆஃபிஸராச்சே. வம்பு பண்ணாமல் கிளம்புங்க.” என்று தனது வெட்கத்தால் சிவந்த முகத்தை மறைத்தப் படி பேசினாள்.
“ஹா… ஹா… ” என்று சிரித்தவன், எழுந்துக் கைக்கழுவியவாறே, “தீப்ஸ் நான் வரட்டுமா…” என்று கிளம்ப….
” ரிஷி… லஞ்ச்க்கு என்ன செய்யட்டும். நான்வெஜ் சமைக்கட்டுமா?”
மகனைப் படிக்க வைக்கிறேன் என்று ரிஷி சொன்னதிலே பாதி டென்ஷன் குறைந்து விட, பிறகு அவன் செய்த கலாட்டாவில் எல்லாவற்றையும் மறந்து உற்சாகமாகவே வளைய வந்தாள் தீபா.
தனது அலுவலக வாகனத்தில் ஏறியவனின் முகத்திலும் புன்னகை வந்தமர்ந்தது.
‘ இரண்டு நாட்களாகத் தீபாவின் மனநிலை சரியில்லை. அதை அறிந்து தான் இருந்தான். எல்லாம் இந்தக் கொரனாவால் வந்தது.
இல்லையென்றால் போன வருடமே ரித்தீஷை எல்கேஜியில் சேர்த்து இருக்க வேண்டியது. ஆன்லைனில் அவனுக்குப் பாடத்தைப் புரிய வைக்க முடியாது என்று எண்ணி சேர்க்காமல் இருந்தார்கள்.
இந்த வருடம் எப்படியும் கொரனா சரியாகி விடும் என்று நினைத்திருக்க… இந்த வருடமும் அது தொடர்கதையாகத் தொடர்ந்தது. இன்னும் அப்டேட்டாக நியூ வெர்ஷன். அது இன்னும் பயங்கரமாக எல்லோரையும் ஒரு வழியாக்கியது. சரி தான் என்று அவர்கள் இருக்கும் ஊரிலே உள்ள, இப்போது தான் பிரபலமாகிட்டு இருக்கும் ஸ்கூலில் சேர்க்க முடிவெடுத்தனர்.
எல்கேஜி சேர்க்க முயன்றால், அவன் வயசுக்கு யூகேஜி தான் படிக்கணும். நீங்க ரெண்டு வருஷம் பீஸையும் சேர்த்து கட்டிடுங்க. உங்க பையனை யுகேஜியில் சேர்த்துடலாம் என்று ஸ்கூல் மேனேஜ்மென்ட் கூறியது.
அதெல்லாம் சரி வராது.எல்கேஜியே படிக்கட்டும் என்று ரித்திஷை ஒரு வழியாகச் சேர்த்து விட்டு வந்தனர்.
அதிலிருந்து தீபா டென்ஷனாக இருந்தாள். வாட்ஸ்அப்ல வீடியோ அனுப்பிடுவாங்க, நாம தான் எல்லாம் சொல்லிக் கொடுக்கணும், ஆனால் ஸ்கூல் ஃபீஸை கொஞ்சம் கூடக் குறைக்க மாட்டாங்க என்று கொந்தளித்துக் கொண்டே இருந்தாள். அது தான் அவளைச் சமாதானம் செய்ய முயன்றான்.’ தான் செய்தது நினைவில் வர முகத்தில் ரகசிய புன்னகை வந்தமர்ந்தது.
அதற்குள் போலீஸ் ஸ்டேஷன் வந்து விட. அதற்குப் பிறகு அவனது கடமை அழைத்துக் கொண்டது. அதில் ஆழ்ந்தான். அவன் காவல்துறை அதிகாரி. அனாவசியமாக ரோடுகளில் சுற்றுபவரை, விரட்டி வீட்டிற்கு அனுப்புவது தான் அவனது வேலை. ஞாயிறன்றுக் கூட விடுமுறை கிடையாது. மனைவியின் எண்ணங்கள் கூடப் பின்னே சென்று விட்டது. வேலையைப் பார்க்கக் கிளம்பி விட்டான்.
ஜீப்பை மெதுவாகச் செலுத்த சொன்னவன், வழியில் நடந்து வருபவர்களை, “ஏன் வெளியே வர்றீங்க. வீட்டுக்குப் போங்க.” என்று மிரட்டி அனுப்பினான். டூவிலரில் வருபவர்கள் சந்துப் பொந்துகளில் செல்ல… அவர்களைப் பிடிக்க, சிலரை அனுப்பியாயிற்று. அதையெல்லாம் யோசித்துக் கொண்டே வந்தவன்,
. ஒரு இடத்தில் கூட்டமாக இருக்க. அங்கு ஜீப்பை நிறுத்தச் சொன்னான்.
அங்கு ஒருவர் மீன் விற்றுக் கொண்டிருந்தார். ஞாயிறன்று ஃபுல் லாக்டவுன். எந்தக் கடையும் திறக்க அனுமதியில்லை. தடையையும் மீறி மீன் விற்பனை செய்துக் கொண்டவரின் அருகே சென்றவன், “யோவ்… இன்னைக்கு எந்தக் கடையும் திறக்கக் கூடாதுன்னு தானே சொல்லியிருக்கோம். அதையும் மீறி மீன் விக்கிறேன்னு, கூட்டத்தைச் சேர்க்கிறீயே… உன்னையெல்லாம் என்ன செய்யுறது. முதல்ல தராசைக் கொண்டா… இரண்டு நாள் கழிச்சு ஸ்டேஷன்ல வந்து வாங்கிக்க... அப்பத் தான் நீங்கள்லாம் ஒழுங்கா இருப்பீங்க.” என்றவாறே அவன் கையிலிருந்த தராசை பிடுங்க…
” சார்… சார்… மன்னிச்சுடுங்க சார். புள்ளைங்க பசியோட வீட்ல கெடக்குதுங்க. ஏதாவது டெய்லி வித்தா தான் அதுங்களுக்கு ஆக்கிப் போட முடியும்.அதான் சார் வந்தேன். என் பொழைப்புல மண் அள்ளிப் போட்டுறாதீங்க சார். நான் இப்பவே எடத்தைக் காலி பண்ணிடுறேன்.” என்று கெஞ்ச.
” ஆமாம் சாமி… நாங்கப் போயிடுறோம்.” என்று அவரது மனைவியும் கைக்கூப்ப.
“ம்…” என்று தாடையை தடவியவாறே யோசனையில் ஆழ்ந்தான்.
கண்களோ விற்காமல் இருந்த மீன்களைப் பார்த்தது. அதைப் பார்க்கவும் மனைவியின் ஞாபகம் வந்து போனது.
” சரி தான்… இரண்டு மீனைப் போடு.” என்று அங்கு உயிரோடு துள்ளிக் கொண்டிருந்த விரால் மீனை வாங்கிக் கொண்டு நகர்ந்தான்.
அவ்விடத்தை விட்டு ரிஷி அகன்றதும், பெருமூச்சு விட்டுக் கொண்டார் அந்த வியாபாரி. அருகிலிருந்த மனைவியிடம்,” பார்த்தியா சரசு. எப்படி இருக்கிறாங்க. எரிகிற வீட்டில் புடுங்குற வரை லாபம் என்று இருக்காங்க. யார் தான் இவங்களை கேட்பது? என்று சொல்லிக் கொண்டே, ஏற்கனவே பணம் கொடுத்தவர்களுக்கு மீனின் எடையைக் குறைத்து, கவரில் போட்டுக்கொண்டிருந்தார்.
” யோவ்… ஒழுங்கா எடை போடுயா… ஏய்யா இப்படி பண்ணுற.” என்று கடிய…
” ம்… ஒரு கிலோ மீனைச் சும்மா தூக்கிக் கொடுத்திருக்கேன். அதை எப்படி சமாளிக்கிறது. இப்படி நூறு, இருநூறு குறைச்சுக் கொடுத்தா தான் நமக்குக் கட்டுப்பிடியாகும் புள்ள.” என.
” ஐயோ! ஐயோ! ஏன் யா உன் புத்தி இப்படி போவுது. உன் நியாத்தெல்லாம் ஒடப்புலக் கொண்டு போடுய்யா. இப்போ நீ செய்றதெல்லாம் பாவம் இல்லையா? பாவம் மட்டுமில்லை. நம்பிக்கை துரோகமும் யா. போலீஸப் பார்த்ததும், மீன் வாங்க பணத்தைக் குடுத்தவங்களை, அந்தக் கோயில்லப் போயி நில்லுங்க என்று சொன்னோமே. சொன்னப் பேச்சுக்கு, மறுப்பேச்சு பேசாம நம்பிக்கையோடு போனாங்களே. அவங்களை ஏமாத்தலாமா யா. அதாடோ பாவப்புன்னிய கணக்கு நம்பப் புள்ளைங்களதாய்யா சேரும்.” என்ற சரசுவின் வார்த்தையைக் கேட்டு, “மன்னிச்சிடு புள்ள… நல்ல வேளை என் கண்ணத் தொறந்தே.” என்றவன் மீண்டும் எல்லா பையிலும் சரியாக எடைப் போட்டு மீனை வைத்தான்.
அவனது கண்களை மட்டும் திறக்கவில்லை சரசு. சற்று முன் மீன் வாங்கிச் சென்று இருந்த ரிஷியையும், அவனது முரண்பட்ட நியாயத்தை உணரச் செய்திருந்தாள்.
ஏதோ ஞாபகத்தில் மீனை வெட்டிச் சுத்தம் செய்து வாங்காமல் அப்படியே எடுத்துச் சென்றான். கைகளில் துள்ளி குதித்த மீன் சுய உணர்வுக்கு இழுத்து வந்தது.
‘ அடடா… மீனை வெட்டாமல் எடுத்து வந்துட்டோமே.’ என்று நினைத்துத் திரும்பி வந்தான்.
அதனாலே அவர்கள் பேசிய அனைத்தையும் கேட்க நேர்ந்தது.
அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவனைச் செருப்பால் அடிப்பதைப் போல் உணர்ந்தான்.
காலையில் தானும், தன் மனைவியும் பேசியது சமயசந்தர்ப்பம் இல்லாமல் கண் முன்னே வந்து போனது. அப்போது தான் அவன் செய்த தவறும் புத்தியில் உரைக்க…
தன்னுடைய பதவியைக் கூட நினைக்காமல், அந்தப் பெண்மணியிடம் கைகூப்பினான். ” மன்னிச்சிடுங்க மா. ஒருத்தவங்க தப்பு செய்தாங்கன்னு திட்டுற நாம், அடுத்தவங்க கிட்ட அதே தப்பு செய்யுறோம். இன்னைக்கு நானும், என் மனைவியும் எங்க பையனைச் சேர்த்த ஸ்கூல்ல நடக்குற அநியாயத்தைப் பத்தி பேசுணோம். அவங்கவங்க செய்யுற தப்புக்கு தண்டனை அனுபவிப்பாங்க என்று பேசிட்டு இருந்தோம். அப்படி பட்ட நானே வந்து தவறு செய்ய இருந்தேன். பெரியதோ, சின்னதோ, தப்பு தப்பு தான். எனக்குப் புரிய வச்சதுக்கு நன்றி. இந்தாங்க மீன். நான் நாளைக்கே வந்து காசுக் கொடுத்து வாங்கிக்கிறேன். உங்களைக் கஷ்டப்படுத்துனதுக்கு என்ன மன்னிச்சிடுங்க.” என்றுக் கூறி விட்டுத் திரும்பிய ரிஷி அதிர்ந்தான். அங்கிருந்தவரை ஒரு பார்வை பார்த்து விட்டு, பிறகு விறுவிறுவென வெளியேறினான்.
ரிஷி மட்டும் அதிரவில்லை. அதைக் கேட்டுக் கொண்டிருந்தவரும் அதிர்ந்தார். சற்று முன் பணம் கொடுத்துவிட்டு மீன் வாங்குவதற்காகக் காத்திருந்த, அவ்வூரில் வளர்ந்து வரும் பிரபல பள்ளியின் ஓனர்.
லாக்டவுனில் வீட்டில் இருக்க போரடிக்கவே… மீன் வாங்குவதற்கு அவரே வந்திருந்தார். பணம் கொடுத்து விட்டு, காத்திருக்கும்போது போலீஸ் வந்து விடவே, சற்று தள்ளி இருந்த கோவிலில் காத்திருந்தார்.
போலீஸ் செல்லவும், மீண்டும் அவர்கள் அருகே வந்தவர், ரிஷி கூறிய அனைத்தையும் கேட்டார்.
” இந்தாங்க சார்.” என்று அந்தப் பெண்மணி நீட்டிய கவரை, குனிந்த தலையுடன் வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் சென்றார்.
குற்றமுள்ள மனசு, முரண்பட்ட நியாயத்தை எண்ணி வெட்கப்பட்டது. அந்தப் போலீஸ்காரர் சொன்னது தன்னைப் பற்றித் தான் என்று புரிந்து இருந்தது. ஏனென்றால் அவரது மகனை அவரது பள்ளியில் தான் சேர்த்து இருந்தனர். தான் செய்த தவறு புரிய… ‘தன் குடும்பத்துக்கும் எதுவும் ஆகக் கூடாது.’ என்று கடவுளுக்கு மானசீகமாக ஒரு வேண்டுதலை வைத்தவர், ‘இனிமேல் நேர்மையான வழியில் செல்ல வேண்டும்.’ என்று எண்ணிக் கொண்டே சென்றார்.
இருவர் மனதில் நல்ல விதையை விதைத்தது பற்றி எதுவும் அறியாமல், “ஏன் யா… கொடுக்கும்போது அப்படி பேரம் பேசினாரு. அந்தப் பெரியவரு. இப்போ மீதி காசைக் கேட்காம போயிட்டாரு. அப்புறம் அந்தப் போலீஸ்காரரும், வாங்குன மீனைக் கொடுத்துட்டுப் போயிட்டாரு. என்னாச்சுனு தெரியல?” என்று சரசு கூற…
” அட விடு புள்ள. நீ சொல்றதும் சரி தான். நம்ம நியாயமா நடந்துக் கிட்டா, கடவுள் நம்மளை நஷ்டப்பட விடமாட்டார் போல… குறைச்சு கேட்டவரும் சொன்ன விலைக்கு வாங்கிட்டுப் போயிட்டார். பணம் கொடுக்காமல் வாங்கிட்டு போன போலீஸ்காரரும் மீனைத் திருப்பிக் கொடுத்துட்டுப் போயிட்டாரு. ” என்றுக் கூறியவன் தனது மனைவியைப் பார்த்துச் சிரிக்க.
அவளும்,” அதுவும் சரி தான்.” என்றும் கூறியப் படியே மிச்ச வியாபரத்தை முடித்து விட்டுக் கிளம்பினர். மீன் கூடையை, வியாபரித் தூக்கிக் கொள்ள. தராசை ஆசையாகக் கையில் ஏந்திக் கொண்டாள் அந்தத் தேவதை.