உயிர் தொடும் உறவே -19

4.3
(6)

உயிர் -19

மீனாட்சி -ஆதியின் திருமணம் முடிந்த கையோடு பாண்டியன் மும்பைக்கு கிளம்பி விட்டான்.

இங்கிருந்து தங்கையின் வேதனையை காண சக்தியில்லை, மேலும் தான் இருந்தால்  தன் வாய் தன் பேச்சினை கேட்காமல் ஏதாவது பிரச்சினையை இழுத்து விட்டுவிடும்‌ என்பதால் கோமதியிடம் மட்டும் கூறிக்கொண்டு மும்பைக்கு கிளம்பிச்‌ சென்றான்.

சங்கர பாண்டியனின் வீட்டு பணியாள்‌ ஒருவன் வேகமாக ஒடி வந்து வடிவாம்பாளிடம் நடந்ததை கூறினான்.

பதறியபடி வெளியே வந்தவர் மருத்துவமனைக்குச் செல்ல காரினை எடுக்க யாராவது இருக்கிறார்களா..? என கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தார்.

அங்கு வந்த நேஹா அவர் பதட்டத்துடன் நிற்பதைக் கண்டு ,” என்ன ஆன்ட்டி இந்த நேரத்துக்கு இங்க நிக்குறீங்க…? “ என்றாள்.

“ உனக்கு கார் ஓட்டத் தெரியுமா…?” என்றார் வடிவு.

“ தெரியும் ஆன்ட்டி …ஏன் கேக்கறீங்க…?”

நடந்ததை சுருக்கமாக கூறியவர் , “ சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு போகனும்…வண்டி எடும்மா…” என பதறினார்.

கலக்கத்துடன் “ இ…இதோ ஒரு‌நிமிஷம்….சாவி..எடுத்துட்டு வந்துடுறேன்…” என்றவள் உள்ளே சென்று கார் சாவியை எடுத்துக் கொண்டு தனது அலைப்பேசியை எடுத்து புகழினிக்கு அழைத்தாள் .

இரண்டு மூன்று முறை முழுமையாக அடித்து ஓய்ந்த பின்னர் தான் எடுத்தாள் புகழினி.

கொட்டாவி விட்ட படி, “ஹலோ…! யாரு..?” என்றாள்.

“ நான்….நேஹா‌ பேசுறேன்…! கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி ஹாஸ்பிட்டல் வாங்க…. மீனாட்சி கையை அறுத்துக் கிட்டா….ப்ளீஸ்…” என்றாள்.

தூக்கம் பட்டென்று பறந்து போக, “ என்ன சொல்ற…? என்னாச்சு…? எப்படி…? ஏன்..?” என பதறினாள்

“ ப்ளீஸ் …சீக்கிரம் கிளம்புங்க..நான் மீதி விபரம் அப்பறம் சொல்றேன்…” என அழைப்பினை துண்டித்து விட்டு மருத்துவமனைக்கு வடிவாம்பாளுடன் கிளம்பினாள்.

புகழினி வேகமாக கிளம்புவதை கண்ட ஈஸ்வரன், “என்ன புகழு…? இந்த நேரத்துல எங்கன கிளம்புற..? மணியை பாத்தியா…? பாதி ராத்திரி…? நினைச்ச நேரத்துல பொம்பிளை புள்ள வெளிய போகாத டா…” என்றான்.

புகழினி அண்ணனின் முகத்தை பார்த்தாள்.

தலை கலைந்து சரியான தூக்கமின்றி கண்கள் சிவந்து போயிருந்தது.

கண்களில் எப்போதும் இருக்கும் திமிர் அது காணாமல் போயிருந்தது.

“ என்னவே என்னையவே பாக்குற…?”

“ அண்ணன் ஒரு எமர்ஜென்சி ‌என் கூட ஆஸ்பத்திரி வரைக்கும் வந்து விடுதியா..?”

“ ஒ…சரி இரு சட்டையை போட்டுட்டு வாறேன்…” என்றவன் நொடியில் இருசக்கர வாகனத்தின் சாவியோடு வந்து நின்றான்.

“ கிளம்பலாமா…?”

“ ம்ம்..”

வண்டியை மெதுவாக ஓட்டினான்.

“ அண்ணே…!சீக்கிரம் போண்ணே…!ப்ளீஸ்…!” என்றாள் பதறியபடி.

“ ஏன்ல…? இப்படி பதறுற…? சரி …சரி.. வேகமா போறேன்…” என்றவன் வண்டியின் வேகத்தை அதிகரித்தான்.

சில நிமிடங்களில் மருத்துவமனை வந்துவிடவே…

“ சரி நா கிளம்புறேன்…பாத்து சீக்கிரம் வீட்டுக்கு வந்துடு…” என்றான்.

வண்டியிலிருந்து சாவியை எடுத்து தன் கையில் வைத்தவள் ,

“என் கூடவே வா…ப்ளீஸ்…ஏன்‌னு கேக்காத‌‌..” என்று கூறி விட்டு முன்னால் நடந்தாள்.

“ ஏய்…புகழு….புகழு…” என்றவன் பார்வையில் சங்கர பாண்டியனின் கார் மருத்துவமனை வாசலிலேயே நிற்பது தெரிந்தது.

யோசனையுடன் புகழினியை பின்தொடர்ந்தது சென்றான்.

மருத்துவமனை உள்ளே நுழைந்ததும் இரத்தம் தோய்ந்த பட்டு வேஷ்டி சட்டையில் கைகட்டி நின்றிருந்த ஆதியும் கவலை தோய்ந்த முகத்துடன் நின்ற கோமதியும் தான் பார்வையில் விழுந்தார்கள்.

“யாருக்கு என்னவாயிற்று…?” என்ற யோசனையுடன் கோமதியின் அருகில் வந்து நின்றான் ஈஸ்வரன்.

தன் முன்னே நிழலாடவும்.. யார் என நிமிர்ந்து பார்த்தவருக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

அவனது கூரிய பார்வையின் வீச்சினை தாள முடியாமல் , “ஈஸ்வரா…. மீனாட்சி கையை அறுத்துக்கிட்டா…டா…எல்லாரும் சேர்ந்து என்‌ பொண்ணை எந்த நிலைமைக்கு ஆளாக்கி வச்சிருக்காங்க பாத்தியா…? பெத்த மனசு பதறுது டா….முடியலை டா..என்னால..டாக்டருங்க எல்லாம் என்னென்னவோ சொல்றாங்க…என்னன்னு கேளு…டா…” என அவ்வளவு நேரம் அமிழ்ந்திருந்த அழுகை அவனைக் கண்டதும் பீறிட்டு கிளம்பியது.

புடவை தலைப்பினால் முகத்தை மூடியபடி அழுதார் கோமதி.

மனதிற்கு நெருக்கமானவர்களிடம் மட்டுமே நமது சுகமும் துக்கமும் வெளிப்படும்.

அது போல் தான் இவ்வளவு நேரம் அழுத்தமாக இருந்த கோமதி ஈஸ்வரனை கண்டதும் உடைந்து போனார்.

அவரது வார்த்தைகளில் விதிர்த்து போய்‌ நின்றிருந்தான் ஈஸ்வரன்.

கலங்கத் தொடங்கிய கண்களை அழுத்தமாக மூடி திறந்தான்.

“ ஏன்…?எதுக்கு..?” என்றான்.

ஆதியைப்  பார்த்தவாறே கோமதி,” தெரியல பா… மொத ராத்திரி ரூம்ல இருந்து இரத்த வெள்ளத்தில எம்‌ பெண்ணை கையில தூக்கிட்டு வந்தாரு பா…என்ன சங்கதின்னு தெரியல…” என்றார்.

கைகளை கட்டிக்கொண்டு அவசர சிகிச்சை பிரிவின் வாசலையே வெறிக்கப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த ஆதியை கொலைவெறியோடு பார்த்தான் ஈஸ்வரன்.

காரணம் இதுவென்று தெரியாத நிலையிலும் ஈஸ்வரனுக்கு ஆதியை கொன்று போட ஆத்திரம் வந்தது.

பூவின் மென்மையானவளை ஆளாளுக்கு கசக்கிக் தூக்கிப் போட்டால் என்ன தான் செய்வது..?

அவனை ‌‌நோக்கி வேகமாக செல்ல முற்பட்டவனை தடுத்து நிறுத்தியது மருத்துவரது குரல்.

“ஏங்க…பேஷண்ட் ஹஸ்பண்ட் யாருங்க..? அவங்க ஃபர்தரா ட்ரீட்மெண்ட் பண்ண விட மாட்டேங்கறாங்க…பல்ஸ் ரேட் குறைஞ்சிட்டே வருது…ப்ளீஸ் சீக்கிரம் வந்து அவங்களை ட்ரீட்மெண்ட்க்கு கோவாப்ரேட்‌ பண்ண‌ சொல்லுங்க….” என கிட்டத்தட்ட கத்தினார்.

ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றதால் போலீஸ் கேஸ் ஆகும் என்பதால் அந்த பதட்டம் ‌வேறு‌ மருத்துவருக்கு..

ஆதியோ எதையும் யோசிக்காமல் சட்டென்று உள்ளே ஓடினான்.

அவன் பின்னே ஈஸ்வரனும் கோமதியும் சென்றனர்.

சற்று நேரத்திற்கெல்லாம் நேஹா வடிவாம்பாளுடன் வந்து சேர்ந்தாள்.

அவசர சிகிச்சை பிரிவில் ஈஸ்வரன், கோமதி, ஆதி. நிற்பதை கண்டு வெளியே வாசலிலேயே நின்றிருந்தாள்‌.

பாதி கண்கள் திறந்த நிலையில் படுத்திருந்தாள் மீனாட்சி.

வேகமாக அவளருகே வந்த ஆதியோ , “ மீனாட்சி ப்ளீஸ்…என் ‌‌மேல எந்த‌ கோபமா ‌இருந்தாலும்‌ இதுல காட்டாத மா….ப்ளீஸ் டிரீட்மெண்ட்க்கு ஒத்துக்கோ மா…ப்ளீஸ்..பல்ஸ் ரேட் குறையுதுங்கறாங்க….டா…நீ என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்குறேன்….நீ வந்துடு டி…” என அவளது கைகளை பிடித்துக் கொண்டு மன்றாடினான்.

அவளது பார்வையோ ஆதிக்கு பின்னால் நின்றிருந்த ஈஸ்வரன் மீது பதிந்தது.

அவளருகே வந்து நின்றான் ஈஸ்வரன்.

இருவரின் பார்வையும் அழுத்தமாக இருந்தது.

ஆதியோ தன் பின்னால் நின்றிருந்த ஈஸ்வரனுக்கு வழியை விட்டு தான் ஒதுங்கி நின்றான்.

“ மாமா…” என‌ ஈனஸ்வரத்தில் அழைத்தாள் மீனாட்சி.

அவ்வளவுதான் அவனது இறுகிய மனம் மெழுகாக உருகி, “ ஏன் மீனாட்சி இப்படி பண்ணுன..? எங்களையெல்லாம் விட்டுட்டு போக உனக்கு அம்புட்டு ஆசையா…? முதல்ல சிகிச்சைக்கு சரின்னே சொல்லு‌ ….ஏன் இப்படி பண்ணுறவ…? “ என கைகளை பிடித்து கொண்டு கலங்கினான்.

முடியாதென தலையை ஆட்டினாள்.

“ ஏய்…! ஏன்‌டி இப்படி பண்ணுன..? என்ன தான் வேணும் உனக்கு…? சொல்லித் தொலை…? எப்ப வந்து என்ன திமிர் தனம் பண்ணிட்டு இருக்கவ…?”என சற்று ஆக்ரோஷமாகவே கேட்டான்.

அவனது பழைய பேச்சுத் தொனி வெளிபடவே , “நா..ஒண்ணு கேப்பேன்…நீ சரின்னு சொல்லனும்..”

 

அவனோ யோசனையுடன் அவளது முகத்தை பார்த்தான்.

“ நீ சரின்னு சொல்லி எனக்கு சத்தியம்‌ பண்ணுனா தான்.. நா…நா.. மேற்கொண்டு சிகிச்சைக்கு ஒத்துக்கிடுவேன்…” என்றாள்.

கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு,  “சொல்லு மா…எதுவானாலும் செய்யுறேன்…” என்றான்.

“ சத்தியமா…?”

அவனோ அவளது எண்ணம் புரியாமல்,  “சத்தியமா…” என்றான்.

“ நீ கல்யாணம் கட்டனும்…அதுவும் சீக்கரமே…” என்றாள்.

அவனோ அதிர்ந்து போய் அவளைப் பார்த்தான்.

“முடியாது…மீனாட்சி…என்னால முடியவே முடியாது…தயவு செஞ்சி வேற எதுன்னாலும்‌ கேளு…உனக்காக செய்யுதேன்…திரும்ப திரும்ப என்ன உயிரோட எறிக்காதீக…உங்களை கெஞ்சி கேக்குறேன்…வேண்டாம் மீனாட்சி…விட்ரு…நான் தனி கட்டையா இருக்கேன்…அதான் நல்லது…”என்று அறவே மறுத்தான்.

அவளோ அவனை விட தீவிரமாக, “ அப்ப‌ சரி…நானும் நிம்மதியா செத்து போறேன்…” என்றவள் அவள் கையில் இருந்த டிரிப்சினை பிடித்து இழுக்க ஆரம்பித்தாள்.

பதறியபடி ஈஸ்வரன், “என்ன‌டி பைத்தியமா பிடிச்சிருக்கு உனக்கு…? ஏன் இப்படி‌ உசுற வாங்குற…? “ என கத்தினான்.

அவளுக்கோ கண்கள் சொருக ஆரம்பிக்க,  “ஹலோ….எல்லரும்‌ ஏன் இப்படி பண்ணுறீங்க…?அவங்களுக்கு சீரியசாகிட்டு இருக்கு….ப்ளீஸ்…அவங்கள ஒத்துக்க வைங்க…”என கத்தினார்.

ஆதியோ தவிப்புடன் அவனருகே வர முற்படும் போது கை நீட்டி அவனை தன் தடுத்தவன்,

மீனாட்சியின் முகத்தருகே குனிந்து , “ எம்புட்டு வீம்பு உனக்கு…?.சரி நான் கல்யாணம் கட்டுறேன்…”என்றான் வேதனையில் கசங்கிய முகத்தோடு.

மெல்ல தன் கைகளை நீட்டி வாசலில் இருந்த நேஹாவை அருகில் வருமாறு அழைத்தாள்.

அவளோ யோசனையுடன் ஈஸ்வரன் அருகில் வந்து நின்றாள்.

“ மாமா…மாமா..வ‌…நீ கட்டிக்கோ….அவ…அவரு.. ரொ..ம்..பப நல்லவரு…” எனக் கூறி விட்டு மயங்கினாள்.

“ மீனாட்சி…! மீனாட்சி…!” ஆளாளுக்கு கத்த.

“ப்ளீஸ் எல்லாரும் வெளியே போங்க…நாங்க ஃபர்தரா டிரீட்மெண்ட் ஆரம்பிக்கனும்…” எனக் கூறி அனைவரையும் வெளியேற்றினார்.

உணர்வுகளை துடைத்து முகத்துடன் வெளியே வந்த ஈஸ்வரனை காணவே நேஹாவிற்கு பக்கென்றது.

சிறிது நாட்களுக்கு முன்பு ஆதி கூறிய அதே வார்த்தைகளை நினைவுகூர்ந்தாள் நேஹா…

“ இன்னும் கொஞ்ச நாள்ல மீனாட்சி வாய்ல இருந்தே நீ ஈஸ்வரனை கட்டிக்கோன்னு வரும் பாரு…”அசிரீரியாய் ஒலித்தது அவளது காதில்.

அனைவரையும் பதற வைத்த விட்டு ஆறு மணி நேரம் கழித்து கண் விழித்தாள் மீனாட்சி.

மருத்துவர்களோ கோமதியிடம, “ இங்க பாருங்க மா ரொம்பவே போராடி அவங்கள காப்பாத்தியிருக்கோம்….அவங்களை கவனமா பாத்துக்கோங்க…” என்று அறிவுறித்து விட்டு சென்றனர்.

புகழினியும் ,” அண்ணே…! ரொம்ப பிடிவாதம் பண்ணாத…உனக்கு மேல பிடிவாதமா இருக்கா மீனாட்சி…திரும்ப ஏதாவது அவ பண்ணிக்கிட்டா நிச்சயம் நம்மால காப்பாத்த முடியாது. யோசிச்சுக்க…” என தன் பங்கிற்கு அவளும் கூறிவிட்டு சென்றாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.3 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!