After marriage love
விடியல் – 19
எப்போதும் பெண்கள் இயல்பாக இருப்பது தங்களுடைய பிறந்த வீட்டில் தானே.
அப்படித்தான் நந்தினியும் தான் எப்போதும் போல அணியும் குட்டை கவுன் ஒன்றை அணிந்திருந்தாள்.
அது சற்று முழங்காலுக்கு மேலே வரை மட்டுமே இருந்தது.
அவள் சோபாவில் அமர்ந்திருந்ததால் அந்த கவுன் தாறுமாறாக தொடைவரை மேலே ஏறி இருக்க அதைப் பற்றி சிறிதும் கவலையில்லாமல் கையில் இருந்த குளிர்களியை ருசித்தவாறு தொலைக்காட்சியில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
அவளை அப்படிப் பார்த்தவனுக்கோ பெரும் அதிர்ச்சி.
தாறுமாறாக அலையும் தன் பார்வையை இழுத்து அடக்கியவன் வாசலில் அப்படியே நின்று விட்டான்.
“உள்ள வாங்க மாப்ள.. ஏன் அப்படியே நினைட்டீங்க..” என்றவாறு ராமகிருஷ்ணன் உள்ளே அழைக்க தன் தந்தையின் குரலைக் கேட்டு மகிழ்ச்சியோடு “அப்பா வந்துட்டீங்களா…?” என்ற சிறு கூச்சலுடன் திரும்பியவள் அங்கே நின்ற தன் கணவனைக் கண்டதும் உறைந்து போனாள்.
மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவளுடைய முகமோ நொடியில் இஞ்சி தின்ற குரங்கைப் போல மாறிப் போனது.
அவனையும் தன்னையும் குனிந்து பார்த்தவள் சட்டென தன்னுடைய கவுனை இழுத்து விட்டாள்.
என்னதான் இழுத்து விட்டாலும் அது அவளுடைய தொடையை மட்டுமே மறைக்கப் போதுமாக இருந்தது.
முழங்கால்களும் கெண்டைக்கால்களும் அப்படியே தெரிய அவளுக்கோ கூச்சமும் சங்கடமும் ஒருமித்தது.
‘ஐயோ இந்த போலீஸ்காரன் எதுக்கு இங்க வந்திருக்கான்னு தெரியலையே…’ மனதிற்குள் புலம்ப ஆரம்பித்தாள் அவள்.
“பாப்பா என்ன அப்படியே ஷாக் ஆகி நிக்கிற..? மாப்பிள்ளைக்கு இன்னைக்கு ரொம்ப வேலை ஜாஸ்தி… டயர்டாகி வந்திருக்காரு.. உன்னோட ரூமுக்கு கூட்டிட்டு போ ஃபிரெஷ் ஆகட்டும்…” என அவர் கூற,
‘அடப்பாவி டாடி…’ என மனதிற்குள் அலறி வைத்தாள் நந்தினி.
இப்போது அவளுடைய பார்வை தன் கரத்தில் இருந்த குளிர்களியின் மீது பதிந்தது.
“அத அப்புறம் சாப்பிட்டுக்கலாம் கண்ணம்மா..” அவளைப் பற்றி புரிந்தவராய் கூறினார் அவளுடைய தந்தை.
அதே கணம் சமையலறைக்குள் இருந்து வெளியே வந்த நிர்மலாவிற்கோ தன்னுடைய மாப்பிள்ளையைக் கண்டதும் அவ்வளவு சந்தோஷம்.
“அடடா வாங்க மாப்ள.. உள்ள வாங்க.. உட்காருங்க…” என அவர் அவனை வரவேற்க சிறு தலை அசைப்புடன் சோபாவின் அருகே வந்தவன் உட்காராமல் அப்படியே நின்றான்.
“என்னாச்சுப்பா..?” எனக் கேட்டார் ராமகிருஷ்ணன்.
“இல்ல நான் கொஞ்சம் டர்ட்டியா இருக்கேன்.” என்றான் அவன்.
“அதெல்லாம் பிரச்சனை இல்ல.. நீங்க உட்காருங்க..” என நிர்மலா மீண்டும் கூற வேறு வழியின்றி அங்கே இருந்த சோபாவில் அவன் அமர்ந்து கொள்ள வெடுக்கென்று எழுந்து நின்றாள் நந்தினி.
“என்ன சாப்பிடுறீங்க மாப்ள..? ஜூஸ் இல்லன்னா டீ ஸ்னாக்ஸ்..?”
“காபி…” என்றான் அவன் ஒற்றைச் சொல்லாக.
“இதோ கொண்டு வரேன்..” என்ற நிர்மலாவோ சமையலறைக்குள் நுழைய முயன்ற கணம்,
“அம்மா நானே காபி போடுறேன்..” என்றாள் நந்தினி.
நிர்மலாவுக்கும் ராமகிருஷ்ணனுக்கும் பேசியது தன்னுடைய மகளா என தலை சுற்றலே வந்து விட்டது.
இங்கே இருக்கும் போது ஒரு வேலை கூட செய்ய மாட்டாளே..
தன் கணவனுக்கு என்றதும் காபி போடுகிறேன் என்ற மகளை மெச்சுதலாகப் பார்த்தார் நிம்மலா.
பெருமை பொங்க பார்த்தார் ராமகிருஷ்ணன்.
அவர்கள் இவருடைய பார்வையும் பார்த்தவளுக்கோ,
‘அடக்கடவுளே நீங்க எத்தனை தடவை காபி போட்டாலும் அவன் சக்கர கம்மியா வேணும்னு திரும்பத் திரும்ப காபி போட வைப்பான்.. உங்கள காப்பாத்துறதுக்காகத்தான் நான் காபி போடுறேன்னு சொன்னேன்.. இது தெரியாம என்ன இப்படி பார்க்கிறாங்களே..’ என மனதிற்குள்தான் கூறிக் கொண்டாள் அவள்.
பின்னே அவள் நினைப்பதை எல்லாம் தற்சமயம் வெளியே கூறவா முடியும்..?
அவளோ அவனுடன் எதுவும் பேசாது சமையலறையை நோக்கிச் செல்ல அவனுடைய பார்வை அவளைத்தான் தொடர்ந்தது.
அவள் இறுக்கமாக அணிந்திருந்த அந்த சிறிய கவுனோ அவளுடைய இடையின் வளைவை அப்பட்டமாகக் காட்டியது.
இடையில் பதிந்த பார்வையை அப்படியே கீழே இறக்கியவன் அவளுடைய கெண்டைக் கால்களைப் பார்த்து விட்டு சட்டென தன் பார்வையை திருப்பிக் கொண்டான்.
உடல் தகிக்க ஆரம்பித்தது.
‘இதுக்கு நடு ரோட்லயே நின்னுருக்கலாம் போலையே…’ என எண்ணிக் கொண்டது அவனுடைய மனம்.
ராமகிருஷ்ணனும் நிர்மலாவும் இயல்பாக அவனுடன் பேச ஆரம்பித்தனர்.
யாரும் நடந்து முடிந்த சம்பவத்தை பற்றிப் பேச விரும்பவில்லை.
அவர்கள் இயல்பாக பேசும் போது அவனால் அதை புறக்கணிக்கவும் முடியவில்லை.
முடிந்த அளவு அவர்கள் பேசுவதற்கெல்லாம் பொறுமையாக பதில் கூறிக் கொண்டிருந்தான் அவன்.
சற்று நேரத்தில் காபியுடன் அவன் அருகே வந்தவள் அதை அவனுக்குக் கொடுக்க அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு காபியை வாங்கிக் கொண்டவன் அதை அருந்தத் தொடங்கினான்.
அவனுடைய உடலில் இருந்த சோர்வுக்கு அந்த காபி புத்துணர்ச்சியை கொடுப்பது போல இருந்தது.
அவன் எதிர்பார்க்கும் சுவை அப்படியே இருந்தது.
ஆனால் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாது குடித்து முடித்தவன் வெறும் கப்பை முன்னிருந்த டீபாய் மீது வைத்தான்.
அதே கணம் உள்ளே இருந்த வெள்ளை நிற நாய்க் குட்டியோ வர்மாவை பார்த்து குரைத்தவாறு ஓடி வந்தது.
புசுபுசுவென்று அழகாக இருந்த நாய்க்குட்டியை எரிப்பது போல பார்த்தான் அவன்.
எத்தனையோ வேட்டை நாய்களுடன் பழகுபவனுக்கு இந்த சிறிய நாயைப் பார்த்தா பயம் வரும்..?
வேகமாக குரைத்துக் கொண்டு வந்த அந்த அழகான நாய்க்குட்டிதான் அவனைப் பார்த்து பின்வாங்க வேண்டியதாக இருந்தது.
“ஏய் டோரா உஷ்.. அவர கடிக்கக் கூடாது..” என அதட்டினாள் நந்தினி.
‘டோராவா.. இது வேறயா..?’ என எண்ணிக் கொண்டான் அவன்.
அவளுடைய டோராவோ சமத்தாக அவளுடைய கால்களை சுற்றத் தொடங்கி விட அப்படியே அதை அள்ளி அணைத்து தன் மார்போடு சாய்த்துக் கொண்டவள்,
“என்னடி பட்டுத் தங்கம்..? உங்களுக்கு பசி வந்துருச்சா…?” என நாயோடு அவள் கொஞ்சத் தொடங்கி விட அவனுக்கோ பொறுமை பறந்தது.
“சரி நான் கிளம்புறேன்..” என்றவாறு எழுந்து கொண்டான் அவன்.
“ஃப்ரஷ் ஆகலாமே மாப்பிள்ளை..?”
“இட்ஸ் ஓகே… தேங்க்ஸ்.. இன்னும் கொஞ்ச நேரம்தான் வர்க் இருக்கு..” என்றான் அவன்.
ஆனால் அவனுடைய மனமோ ஃபிரஷ் ஆகினால் சற்று நன்றாக இருக்கும் என்றுதான் எண்ணியது.
உடல் முழுவதும் வியர்வை வழிந்து கசகசவென்று இருந்தது.
“ரொம்ப டயர்டா இருக்கீங்க.. இப்படியே எப்படி ஒர்க் பண்ண முடியும்..? ஏன்டி இப்படியே அமைதியா நிக்கிற.. மாப்பிள்ளைய உன்னோட ரூமுக்கு கூட்டிட்டுப் போ.. அவர் ப்ரஷ் ஆகட்டும்..” என்றார் நிர்மலா.
‘வில்லங்கத்துக்கு ரூம் மேட்டா ஆயிட்டோம்… விபரீதத்த ஃபேஸ் பண்ணித்தான் ஆகணும்..’ என எண்ணியவள் வேறு வழியின்றி அவனை “வாங்க..” என்று அழைத்தவள் தன்னுடைய அறைக்கு அவனை அழைத்துச் சென்றாள்.
பெற்றோருடன் அவன் அருகே இருக்கும் போது அவளுக்கு எந்தவிதமான பதற்றமும் எழவில்லை என்பதே உண்மை.
ஆனால் அவனைத் தனியாக தன்னுடைய அறைக்குள் அழைத்துச் செல்வதை நினைக்கவே அவளுக்கு தேகம் படபடக்க ஆரம்பித்து விட்டது.
மெல்ல படிகளில் ஏறியவள் முதல் தளத்தில் இருந்த தன்னுடைய அறைக்குள் அவனை அழைத்துச் சென்றாள்.
அவனும் அவளிடம் எதுவும் பேசவில்லை
அவளுக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை.
அத்துடன் அவள் இப்போது கோபமாக அல்லவா இருக்க வேண்டும் கோபித்துக் கொண்டுதானே வீட்டை விட்டு வந்திருக்கிறாள்.
அந்தக் கோபத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டவள் “பாத்ரூம் அங்க இருக்கு..” என குளியலறையை அவனுக்குக் காட்டினாள்.
அவளை மேலிருந்து கீழ் வரை ஆழ்ந்து பார்த்தவன்,
“உன் டவல் கொடு..” என்றான்.
“என் டவலா..? என்கிட்ட புது டவல் இருக்கு..” என்றவள் மடித்து வைத்திருந்த புதிய துவாலையை எடுத்து அவனிடம் நீட்ட அவளை அழுத்தமாகப் பார்த்தவன்,
“உனக்கு இன்பெக்ஷஸ் டிசீஸ் இல்லன்னா ரேஷஸ் ஏதாவது இருக்கா..?” எனக் கேட்டான்.
அவளோ அதிர்ந்து போனவள் “வாட்..?” என்றாள் அவனைப் பார்த்து.
“இருக்கா இல்லையா..? எஸ் ஆர் நோ..?” மீண்டும் அவனிடம் அதே அழுத்தம்.
அவனை முறைத்துப் பார்த்தவள் “எனக்கு எந்த டிசீஸும் இல்ல.. ஐ ஆம் ஃபர்பெக்ட்லி ஆல்ரைட்..” என்றாள்.
“தென் வை திஸ் நியூ டவல்..?” எனக் கேட்டான் அவன்.
அவளோ பதில் சொல்ல முடியாமல் திணறிப் போனாள்.
என்னவென்று சொல்வது..?
நான் உபயோகித்ததை நீ உபயோகிக்க கூடாது என்று சொல்வதா..?
அவன்தான் மனதை படிக்கும் வித்தைக்காரனாயிற்றே.
கைதிகளின் கண் அசைவிலும் உடலின் அசைவிலும் உண்மையை அறிந்து கொள்பவன் அவளின் எண்ண ஓட்டத்தையும் அக்கணம் அறிந்து கொண்டான்.
“உன்னையே யூஸ் பண்ணிட்டேன்.. உன் டவலை யூஸ் பண்ண மாட்டேனா என்ன..?” என அவன் கேட்டதும் அவளுக்கோ மூச்சடைத்துப் போனது.
இதற்கு மேலும் விட்டால் எக்குத் தப்பாக பேசி வைப்பான் எனப் புரிந்து தன்னுடைய துவாலை எடுத்து சட்டென அவனை நோக்கி நீட்டி விட்டாள் அவள்.
அவனோ அதை வாங்கியவன் தன்னுடைய யூனிஃபார்மை கழற்றத் தொடங்க அவளுக்கோ இன்னும் பதற்றம்தான் அதிகரித்தது.
“ஓகே.. நீங்க ப்ரஷ் ஆயிட்டு வாங்க… நான் கீழ வெயிட் பண்றேன்..” என்றவள் அங்கிருந்து நழுவ முயன்ற நேரம்,
“இப்போ நீ ரூமை விட்டு வெளியே போனா நடக்கிறதே வேற..” என்றான் அவன்.
அதிர்ந்து விட்டாள் அவள்.
இது என்ன அநியாயம்..?
நான் இந்த அறையில் இருக்க வேண்டுமா இல்லை வெளியே இருக்க வேண்டுமா என்பதை நான் தானே முடிவு செய்ய வேண்டும்.
இவன் என்ன கூறுவது..?
அவளுக்கோ கோபம் கோபமாக வந்தது.
இங்கே வந்ததும் அராஜகம் பண்ண ஆரம்பித்து விட்டானா..?
“இந்த யூனிஃபார்ம் ரொம்ப டர்ட்டியா இருக்கு.. வேற ட்ரஸ் இருந்தா நல்லா இருக்கும்..” எனக் கூறியவன் யூனிஃபார்மை அங்கிருந்த இருக்கையில் கழற்றி வைத்து விட்டு திரும்ப அவர்களுடைய அறைக் கதவு தட்டப்பட்டது.
அவனோ காக்கி பேன்ட் மட்டுமே அணிந்திருந்தான்.
நந்தினியோ சென்று கதவைத் திறந்தவள் வெளியே நின்ற தன் தந்தையைப் பார்த்ததும் “உள்ள வாங்கப்பா..” என்று அழைத்தாள்.
“பாப்பா மாப்பிள்ளை இங்க மறு வீட்டுக்கு வந்தா கொடுக்கணும்னு கொஞ்சம் ட்ரஸ் வாங்கி வச்சிருந்தேன்.. இப்போ அது அவருக்கு யூஸ் ஆகும்னு நினைக்கிறேன்.. இது எல்லாத்தையும் அவர்கிட்ட கொடு..” எனக் கூறிவிட்டு அவர் சென்று விட, சில பைகளுடன் அவனிடம் வந்தவள் அந்த ஆடைகளை அவனிடம் கொடுத்தாள்.
ராமகிருஷ்ணன் கூறியது அவனுடைய செவிகளையும் எட்டத்தான் செய்தது.
“தேங்க்ஸ்..” என்றவன் அவளுடைய துவையாலையுடன் குளியலுக்குள் சென்றுவிட அவளுக்கோ பெருமூச்சு.
இவன் இங்க இருந்து கிளம்பும் மட்டும் இவன் கூடவே இருந்து இவனுக்கு பணிவிடை செய்ய வேண்டும் போலையே..
அப்படியே அங்கிருந்த சோபாவில் அமர்ந்து விட்டாள் அவள்.
அவளுக்கு அருகே இருந்த அவனுடைய யூனிபார்மை பார்த்தவளின் விழிகள் விரிந்தன.
‘அப்பா ஏதோ ஆக்சிடென்ட் கேஸ்னு சொன்னாரே.. வேலை ரொம்ப அதிகம்னு வேற சொன்னாரு.. இவரும் பாவம்தான்..” என எண்ணிக் கொண்டாள் அவள்.
என்னதான் வெளியே கோபம் போலக் காட்டிக் கொண்டாலும் அவன் தன்னுடைய வீட்டிற்கு வந்தது அவளுடைய அடி மனதில் இனிக்கத்தான் செய்தது.
சற்று நேரத்தில் குளித்து முடித்து அவளுடைய துவாலையை மட்டும் இடையில் கட்டிக் கொண்டு வெளியே வந்தவனைப் பார்த்ததும் அவளுக்கும் இதயம் எகிறி குதிக்கத் தொடங்கியது.
முகம் சிவக்க திரும்பி நின்றவளின் அருகே வந்தவன்,
“வாட்..?” என்றான்.
“மு.. முதல்ல ட்ரெஸ்ஸ போடுங்க..” என்றாள் அவள்.
“ஏன் இதுக்கு என்ன குறைச்சல்..?” என்றான் அவன்.
“எல்லாமே குறைச்சலாதான் இருக்கு..” என்றாள் அவள்
அவளைத் தன்னை நோக்கித் திருப்பியவன்,
“நீயும்தான் செ**ஸியா ட்ரெஸ் பண்ணிருக்க.. நான் ஏதாவது சொன்னேனா..?” என அவன் கேட்டதும் அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
🥀🥀
விடியல் – 18
கொய்யாப் பழத்தைக் கையில் வைத்து கொறித்துக் கொண்டிருந்த நந்தினியை கவலையோடு பார்த்தார் நிர்மலா.
அவருடைய மனமோ நந்தினியை நினைத்து பதறிக் கொண்டிருந்தது.
பின்னே திருமணம் முடித்துக் கொடுத்த சில நாட்களிலேயே கணவனுடன் கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டிற்கு வந்தால் எந்தத் தாய்தான் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும்..?
தன்னுடைய பெண்ணின் வாழ்க்கைக்கு ஏதாவது பிரச்சனையாகி விடுமோ என அந்தத் தாயின் உள்ளம் தவித்தது.
நிர்மலாவின் மனநிலைக்கு எதிராக இருந்தார் ராமகிருஷ்ணன்.
அவரைப் பொறுத்தவரை மகளின் மகிழ்ச்சி மட்டுமே பிரதானம்.
அவளுக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் சிறிதும் யோசிக்காமல் இந்த வாழ்க்கையிலிருந்து முழுதாக அவளை அழைத்து வந்துவிடும் மனநிலையே அவருக்கு.
ராமகிருஷ்ணனைப் பற்றி தெரிந்ததாலேயே நிர்மலாவின் மனதின் அச்சம் இன்னும் அதிகரித்தது.
சிறிய பிரச்சனையை பெரிதாக எண்ணி கோபித்துக் கொண்டு வந்த மகளுக்கு புத்தி சொல்லி மீண்டும் அவளுடைய வீட்டிற்கு அவளை அனுப்பி வைக்காமல் மகளுடன் சேர்ந்து மருமகனைத் திட்டிக் கொண்டிருந்தால் அவரால் வேறு என்னதான் செய்ய முடியும்..?
தன் மகளிடமாவது பேசி புரிய வைக்கலாம் என்ற நம்பிக்கையோடு அவளை நெருங்கினார் நிர்மலா.
“நந்து..”
“என்னம்மா..” என்றவள் கொய்யாப் பழத்தைக் கடித்து விட்டு தன்னுடைய அன்னையின் முகத்தை என்னவென்பது போலப் பார்க்க, அவளை நெருங்கி அமர்ந்து அவளுடைய கரங்களைப் பற்றிக் கொண்டார் அவர்.
“நீ இங்க வந்து முழுசா ஒரு நாள் முடிஞ்சிடுச்சு..”
“என்னம்மா.. என்னை துரத்தி விட பாக்கறீங்களா..”
“புரியாம பேசாதடி.. வாழ்க்கைல சின்னச் சின்ன பிரச்சனைகள் வரத்தான் செய்யும்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணலாமே..”
“அம்மா.. எனக்கு அவரை சுத்தமா பிடிக்கல.. கல்யாணத்தன்னைக்கே அவர் என்கிட்ட மன்னிப்பு கேட்டிருக்கணும்.. ஆனா இப்போ வரைக்கும் அவர் பண்ணது சரிதான்னு நினைச்சுக்கிட்டு இருக்காரு.. அன்னைக்கு நைட் ரெண்டு மணிக்கு திரும்பி வந்தவரு என்கிட்ட எதுக்கு போனேன்னு காரணத்தைக் கூட சொல்லல..”
“அடியே.. மா�ப்பிள்ளையோட வேலை அந்த மாதிரிடி..”
“எனக்கும் புரியுது.. அன்னைக்கு அவர் போனதாலதான் சைக்கோகிட்ட மாட்டிருந்த பசங்களைக் காப்பாத்த முடிஞ்சுது.. அவர நான் போக வேணாம்னு எல்லாம் சொல்லலம்மா.. ஆனா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போனா என்னன்னுதான் கேட்கிறேன்.. எப்பவுமே தான் பண்றது மட்டும்தான் சரின்னு நடந்துக்கிறாரு..” என்றாள் நந்தினி.
“அம்மாடி நந்து.. நீ என்ன நினைக்கிறேன்னு எனக்குப் புரியுது.. உன் மேலயும் தப்பு இல்ல.. அவர் மேலயும் தப்பு இல்ல.. அவரோட டியூட்டியைப் பண்ணத்தானே போயிருக்காரு.. அதை நாம தப்பு சொல்ல முடியாது..”
“அம்மா.. நீங்களும் அப்பாவும் கூட என்னை அடிச்சதே இல்லை.. தப்பு பண்ணாம அடி வாங்கியிருக்கேன்..” அவள் குரல் நடுங்கியது.
“உன்னை அடிச்சதுல எனக்கும் வருத்தம்தான்.. எதுவா இருந்தாலும் பேசி புரிய வச்சிருக்கலாம்.. சரி விடு.. நீ எல்லா விஷயத்துலயும் தைரியமா இருக்கணும்னு அவர் எதிர்பார்க்கிறார்போல.. அதனாலதான் இப்படி பண்ணிட்டாரு..”
“என்னம்மா.. நீங்களும் இப்படி பேசுறீங்களே..” என்றாள் நந்தினி.
“அடியேய் அவர் என்ன குடிச்சிட்டு வந்து அடிச்சு கொடுமைப்படுத்துறாரா.. இல்ல வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினாரா.. இல்ல வேற எந்த பொண்ணு கூடவும் தப்பான உறவுல இருக்காரா.? எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல மனுஷன்டி.. எங்க தேடினாலும் இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைக்காது..” என்ற அன்னையை நிமிர்ந்து பார்த்தவள் “நீங்க தான் மெச்சுக்கணும்..” என முணுமுணுத்தாள்.
“என்னடி.. என்னை திட்றியா..”
“சே சே இல்லம்மா.. அவரைத்தான் திட்டுவேன்..” என்றாள் நந்தினி.
“அப்படிலாம் திட்டக் கூடாது நந்து… இதுவரைக்கும் நீங்க ரெண்டு பேரும் சந்திச்சது கூட இல்ல.. இப்பதான் கல்யாணம் பண்ணியிருக்கீங்க.. ஒரு வாரம் கூட ஆகல.. நீங்க ரெண்டு பேரும் பேசி பழகி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க உங்களுக்கு டைம் தேவை.. அவருக்கான டைமை நீ கொடுமா.. எல்லாம் சரியாயிடும் நந்து..”
“இப்போ என்னம்மா சொல்ல வர்றீங்க.. என்னை மறுபடியும் அந்த வீட்டுக்கு போகச் சொல்றீங்களா..”
“இனி அதுதான் உன்னோட வீடு.. உங்க அப்பாவும்தான் நிறைய பிரச்சனை பண்ணுவாரு.. அதுக்காக நான் என்ன கோவிச்சுக்கிட்டு எங்க அம்மா வீட்டுக்கு போறேனா.. இல்லைல்ல.. புரிஞ்சுக்கோடி.. இதுதான் உன்னோட வாழ்க்கை.. இனி இத மாத்த முடியாது..”
“சரிம்மா.. கொஞ்ச நாள் இருந்துட்டு நானே போயிடுறேன்..” எனக் கூறிவிட்டு எழுந்தவள் கையில் இருந்த கொய்யாப் பழத்தை அப்படியே அங்கிருந்த மேசை மீது வைத்து விட்டு தன்னுடைய அறைக்குள் வந்து விட்டாள்.
என்னதான் விளையாட்டுத்தனமாக இருந்தாலும் அவளுடைய மனதிலும் வேதனை இருக்கத்தான் செய்தது.
அன்றைய நாள் இரவு தன்னுடைய சம்மதம் இல்லாமல் அவன் தன்னை எடுத்துக் கொண்டதை அவளால் இப்போதும் கூட ஜீரணிக்க முடியவில்லை.
அதைப் பற்றி எல்லாம் தன் அன்னையிடமோ தந்தையிடமோ சொல்லிவிட முடியாது.
விழிகளில் பொங்கிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள் என்ன செய்வது என சிந்திக்கத் தொடங்கினாள்.
இந்தத் திருமண வாழ்க்கையை முறித்துவிடும் எண்ணம் எல்லாம் அவளுக்கு இல்லை.
வர்மாவின் மீது கோபத்தில் இருந்தவள் தந்தையைக் கண்டதும் கிளம்பி வந்துவிட்டாள்.
ஆனால் இப்போது மீண்டும் அங்கே செல்வதற்கு சங்கடமாக இருந்தது.
அதுவும் அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பு அவன் அணைத்து முத்தமிட்டது நினைவில் வந்ததும் அவள் முகம் சிவந்து போனது.
அதே கணம் தன் மீது கோபமும் வந்தது.
எப்படி அவனுடைய முத்தத்திற்கு ஒத்துழைத்தோம்..?
அவனைத் தள்ளி அல்லவா விட்டிருக்க வேண்டும்..
தன்னை அடித்துவிட்டு அதற்கு மன்னிப்பும் கேட்காமல் முத்தமிட்டவனின் முத்தத்தில் உருகி குழைந்திருக்கின்றோமே என்று தன்னையே நொந்து கொண்டாள் அவள்.
“ஓ மை காட்.. இந்த போலீஸ்காரனோட போராடணும்னுதான் என் தலைல எழுதியிருக்கு போல.. இவன் மாறுவானா என்னனு கூட தெரியலையே..” என புலம்பியவாறு தன் நெற்றியை அழுத்தமாக வருடினாள் அவள்.
****
மூன்று நாட்களுக்குப் பிறகு..
நந்தினி வீட்டை விட்டுச் சென்று மூன்று நாட்கள் முழுதாக முடிந்திருந்தன.
வர்மா அவளுடைய வீட்டிற்கு சென்று அவளை அழைக்கவும் இல்லை.
அவளும் அவனுடைய வீட்டிற்கு கிளம்பி வரவும் இல்லை.
இவர்களுடைய பெற்றோர்கள்தான் அவர்களை எண்ணி தவித்துக் கொண்டிருந்தனர்.
அன்று காலையில் பிரதான சாலையில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் பலரின் உயிர் பறிபோயிருந்தது.
ஒன்று கூடிய மக்களை விலக்கி நிறுத்தி உயிருக்கு போராடியவர்களைக் காப்பாற்றி அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற கட்டளைகளை அங்கே நின்று மேற்பார்வையிட்டு வழங்குவதற்கே வர்மாவிற்கு நேரம் சரியாக இருந்தது.
முடிந்த அளவிற்கு பலரின் உயிரைக் காப்பாற்றியிருந்தார்கள்.
சிலர் அந்த இடத்திலேயே இறந்து போயினர்.
சிலர் பெரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
டிராஃபிக் போலீஸின் உதவியுடன் வாகன நெரிசல்களைக் கட்டுப்படுத்தி அந்த வீதியைக் கிளியர் செய்து தனக்குக் கீழே இருந்த காவல் அதிகாரிகளிடம் பொறுப்பை ஒப்படைத்து முடிக்கவே கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கும் மேலாகியது.
மதிய நேரம் தொடங்கிய பணி அன்று மாலை வரை நீடித்தது.
வர்மாவோ தண்ணீர் கூட அருந்தவில்லை.
இக்கட்டான சூழ்நிலையில் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் அதிகாரி அல்ல அவன்.
“சார்.. நீங்க போங்க.. இனி நாங்க பார்த்துக்குறோம்..” என்றார் கான்ஸ்டபிள்.
“இல்ல கணேசன்.. இப்போ வீட்டுக்கு போயிட்டு வர்றதுக்கு எல்லாம் டைம் இல்லை.. சம்டைம் பிரச்சனை வேற மாதிரி கூட போகலாம்.. லாரி டிரைவர் மேல நிறைய பேர் செம கோவத்துல இருக்காங்க.. முதல்ல அவருக்கு பாதுகாப்பு கொடுங்க..” என்றான் யுகேஷ் வர்மா.
சற்று நேரத்தில் மருத்துவமனையில் இருந்த அவனுடைய டீம் மெம்பர்களான ரகு சரவணன் மதன் மூவரும் அங்கே வந்து சேர்ந்தனர்.
“எத்தனை பேர் பிழைச்சிருக்காங்க..?”
“பிழைச்சவங்களை விட இறந்தவங்கதான் அதிகம் சார்..” என சற்று கவலையுடன் கூறினான் சரவணன்.
வர்மாவிடமோ பெருமூச்சு.
“இது ரொம்ப பெரிய இழப்பு சார்..” என்றான் மதன்.
“யாரோ ஒருத்தரோட கவனக் குறைவால எத்தனையோ உயிர் இப்படி பரிதாபமா போகுது.. ஷிட்.. எனக்கு தலைவலியே வந்துடுச்சு..” என் தன் தலையை அழுத்தமாக வருடினான் அவன்.
“சார்.. நாங்களாவது இருபது நிமிஷம் பிரேக் எடுத்தோம்.. நீங்க மதியத்துல இருந்து இப்போ வரைக்கும் இங்கேயே நிக்கிறீங்க.. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க சார்.. நாங்க பார்த்துக்க மாட்டோமா..?” எனக் கேட்டான் ரகு.
“வீட்டுக்கு போயிட்டு வரவே ரெண்டு மணி நேரம் ஆகும் டா..”
“அப்போ ஏதாவது ஹோட்டல்ல ஃபிரஷ் ஆகலாமே..”
“பாக்கலாம்..” என்றவன் தனக்கு அருகே வந்து நின்ற காரைப் பார்த்ததும் புருவம் உயர்த்தினான்.
காரிலிருந்து வேகமாக இறங்கி வந்தார் நந்தினியின் தந்தை ராமகிருஷ்ணன்.
“மாப்பிள்ளை..” என அழைக்க வந்தவர் அவன் யூனிஃபார்மில் இருப்பதைப் பார்த்து “சார்..” என்று தொடங்கினார்.
“வாங்க..” என்றான் வர்மா சோர்வான குரலில்.
அவனுடைய கம்பீரமான குரல் இப்படி சோர்ந்து ஒலிப்பதைக் கண்டதும் அவருக்கே ஒரு மாதிரியாகிப் போனது.
அவன் இவ்வளவு நேரமும் தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்ததை எல்லாம் தொலைக்காட்சியில் நேரலை செய்தி மூலம் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்.
அந்த விபத்து நடந்த இடத்திற்கு அருகில்தான் அவருடைய வீடும் இருந்தது.
ஏதாவது தன்னாலான உதவியைச் செய்து கொடுக்கலாம் என தன்னுடைய கம்பனியில் இருந்து தன் காரை எடுத்துக் கொண்டு அந்த இடத்திற்கே வந்துவிட்டிருந்தார் ராமகிருஷ்ணன்.
“ரொம்ப நேரமா இங்கேயே நிற்கிறீங்க.. நியூஸ்ல பார்த்தேன்.. அதுதான் ஏதாவது உதவி வேணுமான்னு கேட்க வந்தேன்..”
“நான் கொஞ்சம் பிரெஷ் ஆகணும்.. இங்க பக்கத்துல உங்களுக்கு தெரிஞ்ச ஹோட்டல் ஏதாவது இருக்கா..?”
“நம்ம வீடு இருக்கே மாப்பிள்ளை.. ஹோட்டல் எதுக்கு..?”
உணர்ச்சிவசப் பட்டு மாப்பிள்ளையென அழைத்து விட்டார் அவர்.
சரவணன் ரகு மதன் மூவருக்கும் அதிர்ச்சி.
“சார்.. உங்க மாமனாரா இவரு..?” சிரித்தபடி கேட்டான் சரவணன்.
சரவணனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன் ஆம் என்று தலையசைத்தான்.
“அப்புறம் என்ன.. பக்கத்திலேயே வீடு இருக்கு.. நீங்க அங்க போய் பிரெஷ் ஆகிட்டு ஏதாவது சாப்பிட்டு வாங்க.. நாங்க பார்த்துக்கிறோம்..” என்றான் ரகு.
“வாங்க மாப்பிள்ளை.. போகலாம்..” என்றவாறு ராமகிருஷ்ணன் கார் கதவையே திறந்து விட,
“இட்ஸ் ஓகே.. நானே ஓப்பன் பண்றேன்..” என்றவன் முன்புற கார்க் கதவைத் திறந்தவாறு சட்டென நின்றான்.
“எல்லார் மேலயும் ஒரு கண் வச்சிருங்க.. ரகு, சரவணன் நீங்க ரெண்டு பேரும் இந்த ஸ்பாட்லையே நில்லுங்க.. மதன் நீ கணேசனைக் கூட்டிட்டு ஹாஸ்பிடலுக்கு போ.. இன்னும் கொஞ்ச நேரத்துல நான் அங்க வந்துடுறேன்..” எனக் கூறி விட்டு காருக்குள் அமர்ந்தான் வர்மா.
ராமகிருஷ்ணனோ தானும் முன்புறம் அமர்ந்தவர் காரைச் செலுத்தத் தொடங்கினார்.
காரினுள் இருந்த ஏசி வர்மாவை சற்றே ஆசுவாசப்படுத்தியது.
“உங்களால வீட்டுக்கு வர முடியலன்னாக் கூட ஒரு கால் பண்ணியிருக்கலாமே மாப்பிள்ளை.. குடிக்கிறதுக்கு ஜூஸ் ஆவது கொண்டு வந்து கொடுத்திருப்பேனே..” என்ற தன்னுடைய மாமனாரை வியந்து பார்த்தான் அவன்.
இதுவரை அவன் அவருடன் சில வார்த்தைகளைத் தவிர வேறு எதுவும் பேசியது இல்லை.
வீட்டிற்கு வந்தவரை வரவேற்றது கூட இல்லை.
ஆனால் தனக்காக இவ்வளவு தூரம் சிந்திக்கின்றாரே என நினைத்தவன் “டென்ஷன்ல எனக்கு எதுவுமே தோணல..” என்றான்.
சற்று நேரத்தில் நந்தினியின் வீடு வந்திருந்தது.
“உள்ளே வாங்க மாப்பிள்ளை..”
முதல் முறையாக அவர்களுடைய வீட்டுக்குள் செல்கிறான்.
அவனுடைய தோற்றமோ படுமோசமாக இருந்தது.
உடல் முழுவதும் வியர்வை.
யூனிஃபார்மில் ஆங்காங்கே ரத்தக்கறை வேறு அப்பியிருந்தது.
பெருமூச்சுடன் உள்ளே நுழைந்தவன் வரவேற்பறையின் சோபாவில் எக்குத்தப்பாக அமர்ந்திருந்த நந்தினியின் தோற்றத்தைக் கண்டு அதிர்ந்து விட்டான்.
24. சிறையிடாதே கருடா
கருடா 24
சத்யராஜ் வழியாக அவ்விஷயத்தைக் கேட்டு அனைவரும் அதிர, அறைக்குள் படுத்திருந்தவன் அலறியடித்து வெளியே ஓடி வந்தான். மகன் கன்னத்தில் அறைந்த சரளா, “கேட்டியாடா… எல்லாம் உன்னால தான்.” மீண்டும் போட்டு அடிக்க, “ரி… ரி…” என்றதற்கு மேல் அவன் வாயிலிருந்து வார்த்தை வரவில்லை.
அடித்து ஓய்ந்த சரளா மருமகளைக் காண அழுது கொண்டே ஓட, அவரைத் தாண்டி ஓடினான். அதிவேகத்தையும் தாண்டி அசுர வேகத்தில் வந்தடைந்தவனை வாசலில் தடுத்துப் பிடித்த பொன்வண்ணன், “எதுக்குடா இங்க வந்த? என் பொண்ணு இருக்காளா, செத்துட்டாளான்னு பார்க்க வந்தியா…” அவ சாவுக்கு நீ தான்டா காரணம்! உன்னையும், உன் குடும்பத்தையும் என்ன பண்றேன்னு பாரு.” கத்திக் கொண்டிருந்தார்.
“ஐயோ மாமா, அவள் அங்க என்ன நிலைமைல இருக்கா… லூசு மாதிரிப் பேசிட்டு இருக்கீங்க. ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போகணும், தள்ளுங்க!” என்றவனை உள்ளே அனுமதிக்காதவர் கதவை மூட முயன்றார்.
அதற்கு இடம் தராது, திடமான தேக்குக் கதவை இடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தவன் மனைவியைப் பார்க்க ஓடினான். பின்னால் வந்த பொன்வண்ணன் அவன் சட்டையைப் பிடித்துக் கீழே தள்ளிவிட, அவன் வீட்டு ஆள்கள் அனைவரும் வந்துவிட்டனர்.
“முதல்ல அவளைக் காப்பாத்தணும் மாமா…”
“டேய்! என் பொண்ணைக் காப்பாத்த நீ யாருடா? இவ்ளோ பெரிய வசதியை விட்டுட்டு, உனக்காக வந்தவளை மனசாட்சியே இல்லாம துரத்தி விட்டுட்டு இப்ப என்னடா நடிக்கிற? ரிது அப்பவே உன்னைப் பத்திச் சொன்னா… நான் தான் முட்டாள் மாதிரி உன்னை நம்பி இப்படி ஒரு நிலைக்குத் தள்ளிட்டேன். என் பொண்ணு சொன்ன மாதிரி, குடும்பத்தோட சேர்ந்து என் சொத்தை அபகரிக்கத்தான இப்படி ஒரு நாடகத்தைப் போட்டிருக்கீங்க.”
“என்ன பேசுறதா இருந்தாலும் அப்புறம் பேசிக்கோங்க மாமா. முதல்ல அவளை நான் பார்க்கணும், போக விடுங்க.”
“மரியாதையா வெளிய போடா. இனிப் பார்க்கக் கூடாத எந்த வேலையும் பார்க்க நான் தயாரா இல்லை.” என்றதும் கையெடுத்துக் கும்பிட்டவன், “நான் பேசுனதெல்லாம் தப்புதான் மாமா… தயவுசெஞ்சு என்னை மன்னிச்சிடுங்க. வேணாம்னு சொன்னது அவளோட நல்லதுக்காகத்தான்! அவ நல்லா இருக்கணும்னு தான் அப்படி ஒரு வேலையைச் செஞ்சேன். என்ன ஏதுன்னு தெரியாம வார்த்தையை விடாதீங்க. அவளைக் காப்பாத்தணும்… ப்ளீஸ்!”
“இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினா அவ்ளோதான்! என் பெண்ணை எப்படிக் காப்பாத்தணும்னு எனக்குத் தெரியும். முதல்ல உன் வீட்டு ஆளுங்களைக் கூப்பிட்டுகிட்டுக் கிளம்புடா.” என மருமகனைப் பிடித்துத் தள்ளி விட்டார்.
விழுந்த வேகத்தில் எழுந்து நின்றவன், “யோவ்! அறிவில்ல உனக்கு. பொண்ணு சாகுற நிலைமைல இருக்கா, புத்தி கெட்ட தனமாப் பேசிட்டு இருக்க. நான்தான் சொல்றேன்ல, உன் பொண்ணு நல்லதுக்காகத்தான் அப்படிப் பண்ணேன்னு.” கத்தினான்.
அதைவிட அதிகக் கூச்சலோடு, “அப்படி என்னடா, என் பொண்ணு நல்லதுக்காகப் பண்ண… உன்ன மாதிரி ஒரு தரம் கெட்டவன் வார்த்தையை இன்னும் நம்புவேன்னு நினைச்சியா?” கேட்டார்.
“ஆமாய்யா! நான் தரம் கெட்டவன் தான்… தரமே இல்லாதவன் தான்! இந்தத் தரம் இல்லாதவனுக்கு, உன் பொண்ணு கூட வாழத் தகுதி இல்லன்னு தான்யா மனசக் கல்லாக்கிட்டு, அவ மனச உடைச்சு அனுப்பினேன். இப்படி ஒரு வசதிய என்னால கொடுக்க முடியுமா? காத்து படாம, கஷ்டம் தெரியாம வளர்த்த உன்ன மாதிரி என்னால வச்சிருக்க முடியுமா?
உன் பொண்ணு, அந்தக் குப்பை வீட்டுல வந்து சந்தோஷமா வாழ்வாளா? இந்த ஆட்டோக்காரனைப் புருஷன்னு சொல்லிக்க முடியுமா? தப்பே பண்ணாதவளை, எவ்ளோ அசிங்கப்படுத்த முடியுமோ அவ்ளோ அசிங்கப்படுத்திட்டேன். அந்தக் குற்ற உணர்ச்சியைத் தொடச்சிப் போட்டுட்டு, சந்தோசமா இருக்க முடியுமா? உண்மை தெரிஞ்ச நாள்ல இருந்து உள்ளம் குத்துதுய்யா! அவளுக்குச் செஞ்ச பாவத்துக்கு எப்படிப் பிராயச்சித்தம் தேடுறதுன்னு தெரியல.” ஆக்ரோஷமாகத் தன் மனத்தை உடைத்துக் காட்டியவன் அவரை நெருங்கி நின்று,
“உங்க பொண்ண நான் எவ்ளோ லவ் பண்றன்னு தெரியுமா? அவள் என்னை விரும்புறதை விட ஆயிரம் மடங்கு அதிகமா விரும்புறேன். ஏன் எப்படின்னு காரணம் தெரியல. ஆனா, அந்தப் பணப்பிசாசை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. எல்லாத்தையும் மறந்துட்டு, அவளுக்கு ஒரு நல்ல புருஷனா இருக்கணும்னு முடிவெடுத்துத் தான் என் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனேன். அவ முகத்துல வேர்வை சிந்திச்சு… ராத்திரி எல்லாம் தூக்கம் வராமல் தவிச்சா… பாத்ரூம் போக சங்கடப்பட்டா…
அதையெல்லாம் ஒரு புருஷனா என்னால பார்க்க முடியல. நீங்க சொல்லலாம், அவளை வசதியா வச்சிக்கலாமேன்னு. எத்தனை வசதியை என்னால தர முடியும்? ஏணி வச்சாலும், எட்ட முடியாத உசரம் உன் பொண்ணு! அந்த உசரத்தை அண்ணாந்து பார்க்கக் கூடத் தகுதி இல்லாதவன் நான்… எந்த ரெண்டு சேரக் கூடாதோ, அந்த ரெண்டைக் கடவுள் சேர்த்துட்டான். சேர்த்ததுக்காக, உன் பொண்ணைக் கஷ்டப்படுத்தி வாழச் சொல்றியா? இல்ல, என் குடும்பம் மொத்தத்தையும் விட்டுட்டு வந்து இந்த வீட்ல என்னை வாழச் சொல்றியா? இந்த ரெண்டுத்துல எது நடந்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல சலிப்பு வந்துடும். உன்னால தான் நான் இப்படி இருக்கேன்னு வெறுப்பு வரும். ரெண்டு பேருக்கும் நடுவுல இருந்த காதல் அர்த்தமில்லாமல் போகும்.” என்றவன் கண்ணில் இருந்து கண்ணீர் படை எடுத்தது.
பொன்வண்ணன் உட்படக் கேட்ட அனைவருக்கும் கருடன் எண்ணம் புரிந்தது. மாமனாரின் கருணைப் பார்வையை உணர்ந்து, “இது எல்லாத்தையும் தாண்டி, என் பொண்டாட்டிய என்னால கஷ்டப்படுத்த முடியாது. அவளோட கம்பீரத்தையும், மிடுக்கையும் பார்த்தவன் நான். அவ பார்க்குற பார்வைல இருந்து, கால் மேல கால் போட்டு ஆணவமா உட்காருற வரைக்கும் அணு அணுவா ரசிச்சு இருக்கேன். அது எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சுட்டு, எனக்குப் பொண்டாட்டியா கட்டுப்பட்டு வாழுன்னு சொல்ல என்னால முடியாது. அவளுக்கு நான் செஞ்ச எல்லாமே போதும். நான் வரதுக்கு முன்னாடி எப்படி இருந்தாளோ, அப்படியே இருக்கணும்னு தான்…”
அதற்கு மேல் பேச அவனிடம் வார்த்தைகள் இல்லை. மாமனார் முன்பு தலை குனிந்து கண்ணீர் சிந்தினான். அவனது கண்ணீர், அனைவரையும் அழ வைத்தது.
கருடன் செய்தது, ‘சரி தவறு’ என்ற நிலையைத் தாண்டி அவன் நிலையை எண்ணிக் கவலை கொண்டனர். எதிர்த்து நின்ற பொன்வண்ணனுக்குக் கூட மனம் இரங்கி விட்டது. மெதுவாக அவனது தோள் தட்ட, தலை நிமிர்ந்து பார்த்தான் மாமனாரை.
“போ…” என அவர் விலகிக் கொள்ள, ஓட்டம் பிடித்தான் தன்னவளைப் பார்க்க.
“ரிது… ஏய் கதவத் திறடி! ஏன்டி இப்படிப் பண்ண? ஏய் திறம்மா…”
எத்தனை முறை தட்டியும் அந்தக் கதவு திறக்கப்படவில்லை. அவசரத்தின் நிலை உணர்ந்து, வேகமாக நான்கு இடி இடித்து அந்தக் கதவைத் திறந்தவன் உள்ளே ஓடி வர, கால்கள் தட்டுப்பட்டது. தடுத்த இடத்தில் அப்படியே நின்றவனுக்கு இதயம் எக்குத்தப்பாக எகிறியது. கண்கள் விரிந்து, வாய் அகண்ட நிலையில் நின்று கொண்டிருந்தவன் முன்பு, கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்தாள் ரிதுசதிகா.
“அடடடா…” கை தட்டினாள்.
பின், “வெல்கம், மிஸ்டர் கருடேந்திரன்! உங்களுக்காகத் தான் ரொம்ப நேரம் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.” எனக் காலைத் தோரணையாக ஆட்டினாள்.
“நல்லா இருக்கீங்களா?” கேட்க, பதட்டம் குறைந்து முறைப்பு அதிகரித்தது அவனுக்கு.
“அச்சச்சோ… கண்ணெல்லாம் கலங்கி இருக்கற மாதிரி இருக்கு. உடம்புக்கு எதுவும் முடியலையா? காசு வாங்க வந்தியா… ப்ச்! முன்ன மாதிரி எல்லாம் நீ என் ரூம் வரைக்கும் வரக்கூடாது. அந்த டீலிங் அன்னையோட முடிஞ்சு போச்சு. பிச்சை கேட்கிற மாதிரி இருந்தா, வாசல்ல நின்னு அம்மா, தாயே! உடம்பு முடியல. பிச்சை போடுங்கமான்னு சொல்லணும். ஓகே!”
“அறிவு இருக்காடி உனக்கு!” என அடிக்கப் பாயும் அவனைக் கண்டு சத்தமிட்டுச் சிரித்தவள், “அப்புறம்… பர்பாமன்ஸ் எல்லாம் பயங்கரமா இருந்துச்சு. நீதான் ஸ்கிரிப்ட் எழுதுனியா?” கேலி செய்ய, அடிக்க வந்தவன் கைகள் அப்படியே நின்றது.
“ரிது, செத்த பாம்பா இருந்தாலும், விஷம் உள்ள பாம்பு! சாதாரண மனுஷன் உன்னால ஒன்னும் பண்ண முடியாது.”
“அசிங்கமா இல்லயாடி உனக்கு?”
“ப்ச்! இருந்துச்சு. அன்னைக்கு நீ எல்லாரு முன்னாடியும் என்னை அப்படிப் பேசும்போது.”
“அதுக்குத்தான் இப்படிப் பழி வாங்குறியா?”
“ச்ச! ச்ச!” என இதழ் வளைத்தவள், “நான் ஏமாந்துட்டனா, இல்லையான்னு தெரிஞ்சுக்கப் பண்ணேன்.” என இரு கண்களையும் சிமிட்டினாள்.
கருடேந்திரன் முறைத்தபடி நின்றிருக்க, “உன் கண்ணுல எனக்கான காதலைப் பார்த்திருக்கேன்.” எழுந்து வந்து அவன் முன்பு நின்று ஏளனத்தோடு கூறியவள், “என்ன சொன்னடா கருடா? தொட்டாலே அருவருப்பா இருக்கற உன்ன ரசிச்சுத் தொட்டேன்னா…” என்று அவனைச் சுற்றி வந்தாள்.
“இங்கதான் நீ தோத்துப் போன… நீ பொய் சொல்லலாம், உன் உணர்வு பொய் சொல்லுமா? எந்த நோக்கத்துக்காக என்னைத் தொடுறேன்னு தெரியாம கூடவா இருந்திருப்பேன். எந்தக் காரணத்துக்காக நீ அப்படிப் பேசி இருந்தாலும் தப்பு தப்புதான்! அந்தத் தப்புக்கான தண்டனையை நான்தான உனக்குக் கொடுக்கணும். அதனாலதான் இப்படி ஒரு டிராமா… ரொம்பப் பழைய டிராமாவா இருந்தாலும் செம்மையா ஒர்க் அவுட் ஆச்சுல்ல…” என்றவள் முன்பு, அவள் நின்றது போல் நிராயுதபாணியாக நின்றான் கருடேந்திரன்.
“நீதான் தாலி கட்டுன… நீதான் அன்பு காட்டுன… நீதான் நெருங்கி வந்த… நீதான் வேணாம்னு சொன்ன…” என அவனுக்கு நேராக நின்று கைகள் இரண்டையும் கட்டிக் கொண்டவள்,
“இவ்ளோ பண்ண உனக்கு நான் ஏதாச்சும் பண்ணனும்ல.” என்றுவிட்டு அமைதியாகினாள்.
நிசப்தமான அமைதி அங்கு நிலவியது. போதும் என்ற வரை அந்த அமைதியை அவனுக்குக் கொடுத்தவள், “உன்ன மாதிரிக் கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளுனாதான் போவியா?” என்ற வார்த்தைக்குள் ஒளிந்திருக்கும் அவளின் மனத்தைப் படித்தவன் கால்கள் அமைதியாக வெளியேறத் திரும்பியது.
அவன் செல்லும் வரை முறைத்துக் கொண்டு நின்றிருந்தவள் சட்டென்று திரும்பிட, ஒளித்து வைத்த கண்ணீர் உருண்டு திரண்டு விழியின் ஓரம் நின்றது.
***
பலம் பொருந்திய இருவரும் இருவரையும் தாக்கிக் கொண்டார்கள். இதில், இருவரின் காதலும் சேதப்படும் என்பதை உணர்ந்தும். ரிது, அந்தச் சம்பவத்தை நடத்தி ஒரு மாதம் ஆகிவிட்டது. சுனாமிக்குப் பின்னான சேதாரங்களைச் சரி செய்ய இந்த ஒரு மாதம் போதவில்லை மூத்தவர்களுக்கு.
ஒரு வாரம் அமைதியாக இருந்தவள், பழையபடி தன் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்து விட்டாள். முன்னர் இருந்ததை விட, இன்னும் கடுமை கூடியிருந்தது அவளிடம். பெற்ற மகளைச் சமாதானம் செய்ய முடியாது தினமும் தோற்றுப் போனவர் இன்றைக்கும் பேசுவதற்காக வந்தார். அவர் வரும் வரை ஏதோ சிந்தனையில் அமர்ந்திருந்தவள் உடனே மடிக்கணியைக் கையில் எடுத்துக் கொள்ள,
“இன்னும் எவ்ளோ நாள் இப்படி இருக்கப் போற?” பேச்சை ஆரம்பித்தார்.
வார்த்தைகளை வெளியிடத் தயாராக இல்லை அவரின் மகள். அவரது நினைவு, அன்றைய சம்பவத்திற்குத் திரும்பியது.
மனம் நோக உள்ளே வந்தவர் மருமகனைக் கண்டபடி திட்ட, “அவன் நடிக்கிறான் அப்பா…” என்றாள்.
குழப்பத்தோடு நிற்கும் தந்தையை ஏறெடுத்துப் பார்க்காது, “அவன் பண்ணதும், பேசினதும் உண்மை இல்ல. எதுக்காக இப்படிப் பண்றான்னு தெரியல. ஆனா, உண்மை இல்லன்னு மட்டும் தெரியும். அவன் மனசுல நான் இருக்கேன்.” என்றது வரை அமைதியாகப் பேசியவள்,
“இந்த அடங்காப் பிடாரியோட, கடைசி வரை வாழ முடியாதுன்னு இப்படிப் பண்ணிட்டான் போல.” எனக் கண் கலங்கினாள்.
பொன்வண்ணனுக்கு மருமகன் மீது நம்பிக்கை இருந்தாலும், நேரடியாகப் பேசிய பின் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. மகளுக்கும், மருமகனுக்கும் இடையில் சிக்கிக் கொண்டவரிடம், “நான் சொல்லற மாதிரிப் பண்ணுங்கப்பா.” எனத் தன் திட்டத்தைக் கூறினாள்.
அவர் வேண்டாம் என்று மறுக்க, “அவன் காதலுக்கு, நான் தகுதியானவள் இல்லயோன்னு வலிச்சுக்கிட்டே இருக்குப்பா. எனக்கு அதுக்கான விடை கிடைக்கும்! அதுக்கப்புறம் அவன நான் எந்த விதத்திலும் தொந்தரவு பண்ண மாட்டேன்.” என்றாள்.
“ரெண்டு பேரும் சண்டை போடும்போது ஒன்னா இருந்துட்டு, லவ் பண்ணும் போது இப்படிப் பிரிஞ்சு இருக்கீங்களே. மனச விட்டுப் பேசுனா எல்லாம் சரியாகிடும்னு தோணுது. ஒரே ஒரு தடவை கருடன்கிட்ட பேசிப் பாரு ரிது.”
“அவன் சொன்ன மாதிரி இந்த வாழ்க்கை ரெண்டு பேருக்கும் ஒத்து வராது. இது இப்படி இருக்குறதுதான் ரெண்டு பேருக்கும் நல்லது.” என்று விட்டாள் முடிவாக.
***
அவன் வாழ்க்கையில், தாலி என்ற ஒன்று நுழைவதற்கு முன் என்னவெல்லாம் இருந்ததோ அவை அனைத்தும் இருந்தது. அதைத் திருப்பிக் கொடுத்தவள் தான் இல்லை. ஆசையோடு வீட்டிற்கு அழைத்து வந்தவன், அவள் படும் அவஸ்தையில் மனம் நொந்து போனான். இப்படியான கஷ்டங்களை, மனதார நேசித்தவளுக்குக் கொடுக்கக் கூடாது என்பதற்காக ஒரு முடிவை எடுக்க, அந்த முடிவே இவன் வாழ்க்கையை அஸ்தமனம் ஆக்கிவிட்டது.
வெறுமையாக இருந்தது வாழ்வு. மூன்று இரவுகள் என்றாலும், ஒன்றாகப் படுத்திருந்தவள் ஓயாது இம்சை செய்தாள். அவளின் தொந்தரவு தாங்காது, அதிக நேரம் ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தான். பெற்றவர்களுக்குப் பிள்ளையின் வலி புரிந்தது. அவனாகச் சரியாகட்டும் என்று காத்திருந்து இரு மாதத்தைக் கடந்து விட்டார்கள்.
சோர்வாக வந்தமர்ந்த மகனை மடிமீது சாய்த்துக் கொண்ட சரளா, தலைகோதி விட்டார். அன்னையின் அரவணைப்பில் சுகமாகக் கண் மூடியவன் எண்ணத்தில் அவள். இந்த இரு மாதத்தில், எந்தத் தொடர்பும் இல்லை இவர்களிடம். அவன் ஆசை கொண்டது போல், அனைத்தும் முடிந்து விட்டாலும் வலி மட்டும் குறையவில்லை. நடுத்தர வர்க்கத்தில் பிறந்த தனக்கு, மேல்தட்டு வர்க்கத்திலிருந்து மனைவியைக் கொடுத்த கடவுளை வெறுத்தான்.
“கருடா…” என்றழைத்தார் சத்யராஜ்.
அமைதியாக எழுந்தமர்ந்த மகன் பக்கத்தில் அமர்ந்தவர், “ஏன்டா இப்படி இருக்க, நீதான இந்த முடிவை எடுத்த… அப்புறம் எதுக்காக உன்னை நீயே கஷ்டப்படுத்திட்டு இருக்க?” பேச்சைத் தொடங்க தலை குனிந்து அமர்ந்தான்.
“நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழறதுக்கு, வசதி தான் பிரச்சினைனு தப்பா நினைச்சிட்டு இருக்க… ஆக்சுவலா மனசுதான் பிரச்சினை!” என்றதும் அன்னையை நிமிர்ந்து பார்த்தான்.
“உன் பொண்டாட்டி சந்தோஷத்துக்கு என்ன தேவையோ, அதை நீ தான் பண்ணனும். கட்டுனவளுக்காக எவ்ளோ கஷ்டப்பட்டாலும் தப்பு இல்ல. திமிரா பார்த்த பொண்ணு உனக்காக இந்த வீட்ல வந்து வாழ்ந்தாளே, அதுக்கு என்ன காரணம்னு நினைக்கிற? நீ அவளுக்கு வேணும்! உன் கூட வாழுற வாழ்க்கை வேணும். ஏணி வச்சாலும் எட்ட முடியாத தூரம்னு சொல்றியே, அப்படிப்பட்டவள் கடைசிப் படிக்கட்டு வரைக்கும் இறங்கி வந்துட்டா… அவளுக்காக, நீ ஒரு பத்துப் படி ஏன் ஏறக்கூடாது? உன் பக்கம் வந்தா கஷ்டப்படுவான்னு நினைச்சா அவ பக்கம் நீ போயிடு.” என்றதும் கருடேந்திரன் எதிர்த்துப் பேச வர,
“பொண்ணுங்க மட்டும் தான் குடும்பத்தை விட்டுட்டு வாழ வரணுமா?” கேட்டு அவன் வாயை அடைத்தார்.
“நீ அவளை எவ்ளோ நல்லாப் பார்த்துக்கறியோ, அதைவிட அதிகமா அவ இந்தக் குடும்பத்தைப் பார்த்துப்பா… அவ மட்டும் இல்ல, எல்லாப் பொண்ணுங்களும் பார்த்துப்பாங்க. உனக்குள்ள ஆம்பளைன்ற எண்ணம் ஒளிஞ்சிருக்கு. அதுதான், அவள் கூடப் போய் அடிமையா வாழ மாட்டேன்னு தப்பா யோசிக்க வச்சிருக்கு… பொண்டாட்டிக்காக இறங்கிப் போனவன் தோற்க மாட்டான்.
அவளுக்காக அஞ்சு நாள் இரு. அவ உனக்காக ரெண்டு நாள் இந்த வீட்ல இருக்கட்டும். உங்களுக்குன்னு குழந்தை குட்டி வந்ததுக்கு அப்புறம் எங்க எல்லாரையும் மறந்திடுவீங்க. உங்க குடும்பத்துக்கு என்ன வேணும், உங்க குழந்தைங்களுக்கு என்ன வேணும்னு மட்டும் தான் யோசிப்பீங்க. அப்படி ஒரு தருணம் வர வரைக்கும் ரெண்டு பேரும் ஒத்துமையா ஒரு சேர முடிவு பண்ணி வாழ ஆரம்பிங்க.”
இரவெல்லாம் தூங்காமல், மொட்டை மாடியில் நடையாக நடந்து கொண்டிருந்தான் கருடேந்திரன். பெற்றவர்கள் பேசிய அனைத்தும் மனத்தைப் போட்டுக் குடைந்தது. ரிதுவைப் பிரிந்திருந்த இந்த இரு மாதமே, அவள் மீதான பிரியத்தைப் புரிய வைத்துவிட்டது. இனியும், இந்தப் பிரிவை வளர்க்க விரும்பவில்லை கருடேந்திரன். கடைசியாக ஒரு முடிவெடுத்து, மணியைப் பார்த்தவன் விடியற்காலை என்றும் நினைக்காது மாமனாரை அழைத்தான்.
***
“ரிது…” உற்சாகமாக அழைத்தார் மகளை.
தயாராகிக் கொண்டிருந்தவள், தந்தையின் குரலில் இருக்கும் குதூகலத்தை உணர்ந்து தலை உயர்த்த, “இன்ஸ்டிடியூட்டுக்குத் திரும்ப வரதா போன் பண்ணான்.” என்றார்.
“யாரு?” எனத் தெரியாதது போல் கேட்கும் மகளைக் கண்டு சிரித்தவர், “உன் புருஷன்!” என முறைப்பை வாங்கிக் கொண்டு நகர்ந்தார்.
அவனால் உருவாக்கப்பட்ட புது நிர்வாகத்தை, நேற்று வரை கட்டியவள் தான் கவனித்துக் கொண்டிருந்தாள். இன்று காதில் விழுந்த செய்தியால், அந்தப் பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்க விரும்பாது வேறு பக்கம் சென்று விட்டாள். விடிந்ததும், வீட்டில் இருக்கும் அனைவரிடமும் தன் விருப்பத்தைத் தெரிவித்தவன் உற்சாகத்தோடு கிளம்பினான்.
அந்த உற்சாகம் சிறிதும் குறையாது பயிலகம் வந்தவனை வரவேற்றார் பொன்வண்ணன். மாமனாரைக் கண்டு புன்னகைத்தவன் மனதார நலம் விசாரிக்க, தோள் மீது கை போட்டு அரவணைத்தவர், “ரொம்பச் சந்தோஷமா இருக்கேன்.” ஒரே வார்த்தையில் தன் மனத்தைத் தெரிவித்தார்.
தன்னறைக்கு வந்தவனுக்கு யோசனை எல்லாம் ரிதுவே. இந்நேரம் விஷயம் தெரிந்திருக்கும். இன்னும் அவளிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் இருப்பதில் சோர்ந்து போனவன், விடாது முயற்சிக்க முடிவெடுத்தான். அதன்படி நாளும் பொழுதுகளும் ஓட ஆரம்பித்தது. ஒவ்வொரு நாளும் ஆட்டோ ஓட்டி முடித்த கையோடு பயிலகம் வந்து விடுவான்.
மாமனாரிடம், மனைவியைப் பற்றி எப்படிக் கேட்பது என்று தெரியாமல் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தவன் இனியும் வேலைக்கு ஆகாது என்று, “என்ன மாமா, உங்க பொண்ணு மசியவே மாட்டேங்குறா…” என முகத்தைப் பாவமாக வைத்தான்.
“தன் வினை தன்னைச் சுடும் மாப்பிள்ளை.”
சட்டென்று முறைத்தவன், “நேரம் பார்த்துக் குத்திக் காட்டுறீங்களா?” கேட்டான்.
“முன்ன விட, இப்ப டபுள் ஸ்ட்ராங்கா இருக்கா… எனக்குத் தெரிஞ்சு ரொம்பக் கஷ்டம்! யானை தன் தலையில மண் அள்ளிப் போட்ட மாதிரி, நல்லா அள்ளிப் போட்டுக்கிட்டு இப்பப் புலம்பி என்ன ஆகுறது?”
“என்னை ஒரே ஒரு தடவை பார்த்தா அவ மனசு மாறிடும் மாமா.”
“அப்போ வீட்டுக்கு வந்துடுங்க மாப்பிள்ளை…”
“மரியாதை ரொம்பப் பலமா இருக்கே மாமா…”
“எல்லாம் அன்னைக்கு, யோவ்! அப்படின்னு பேசின மாயம்தான் மாப்பிள்ளை!”
“சாரி மாமா…”
“சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் மாப்பிள்ளை… வீட்டுக்கு வந்து அவகிட்டப் பேசிப் பாருங்க.”
“அது சரி வராது மாமா, முதல்ல அவ என்னை மன்னிக்கணும்!”
“என்னதான் இதுக்கு முடிவு?”
பதில் சொல்லாமல், உதட்டைப் பிதுக்கிய கருடேந்திரன் தீவிரமாக யோசித்தான். அதன் பலனாக, மூன்று சக்கர வாகனம் ஃபேக்டரியை நோக்கி நகர்ந்தது. தினம் அவள் வரும் நேரம், போகும் நேரம் எல்லாம் வாசலில் நிற்க ஆரம்பித்தான். கட்டியவளின் தரிசனம் சிறிதும் கிடைக்கவில்லை. அவனுக்குக் கிடைக்கக் கூடாது என்று சாமர்த்தியமாக ஒவ்வொரு நாளையும் கடத்தினாள்.
நாளுக்கு நாள் நொந்து போனான் கருடேந்திரன். என்ன செய்தும் ஒரு பலனும் கிடைக்கவில்லை. அவன் நிலை கண்டு அனைவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். கட்டியளோடு கைகோர்த்த பின்பு தான், இவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்ற வைராக்கியத்தை வளர்த்துக் கொண்டான். அவன் வைராக்கியத்தை உடைக்க வந்தாள் நதியா.
“என்னண்ணா, செலபரேஷன பத்தி யோசிச்சிட்டு இருக்க போல…”
“செலபரேஷனா?”
“என்ன அண்ணா இப்படிக் கேக்குற? வீட்ல இருக்கற எல்லாரும் நீ எப்படிக் கொண்டாடப் போறன்னு பார்க்க ஆர்வமா இருக்காங்க.”
“என்னன்னு சொல்லு?” என எரிந்து விழுந்தான்.
“ரொம்ப நல்ல மூட்ல இருக்க போல!”
“வெறுப்பேத்தாத நதியா. நானே உங்க அண்ணி திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேங்குறான்னு கடுப்புல இருக்கேன்.”
“அப்போ லவ்வர்ஸ் டேக்கு ஒன்னும் இல்லையா?”
“மண்டைய ஒடச்சிடுவேன், மரியாதையாப் போயிடு.”
“கூல் பிரதர்!” என அவனது தோள் தட்டிய நதியா, “வாழ்க்கை, உன்ன வச்சு விளையாடுதா? இல்லை நீ வாழ்க்கையோட விளையாடுறியான்னே புரியல!” தீவிரமாக விட்டத்தைப் பார்த்துப் பேசினாள்.
“இதுவரைக்கும் என்கிட்டக் கேவலமா திட்டு வாங்கினது இல்லையே.”
“இனித் திட்டி என்ன ஆகப்போகுது? போன வருஷம் லவ்வர்ஸ் டேக்கு என்ன பேச்சுப் பேசின, ஞாபகம் இருக்கா…” என்றவளோடு அந்த நாளிற்குச் சென்றான் கருடேந்திரன்.
சென்ற ஆண்டு காதலர் தினத்திற்கு, மனைவிக்குப் பூ வாங்கிக் கொடுத்தார் சத்யராஜ். அதைப் பார்த்தவன் செய்த கேலியில் வாங்கிக் கொடுத்த பூவைத் தலையில் கூட வைக்கவில்லை சரளா. பெற்ற மகனுக்கு, “உன் வாழ்க்கைல லவ்வர்ஸ் டேவே வராதுடா.” சாபம் கொடுத்தார் சத்யராஜ்.
தந்தை முன் நெஞ்சை நிமிர்த்து நின்றவன், “வருஷத்தில் ஒருமுறை தான் காதலர் தினம் வருது. அட, உங்க மருமகளுக்கும் எனக்கும் தான் வருஷம் முழுக்க வருது.” எதிர்காலம் தெரியாமல் ஆடிப்பாடி வெறுப்பேற்றியவன்,
“அடுத்த வருஷம் லவ்வர்ஸ் டேக்குப் பாருங்க நைனா, என் பொண்டாட்டியும் நானும் சும்மா ஜிகுஜிகுஜிகுன்னு செலப்ரேட் பண்ணப் போறதை…” என்றிருந்தான்.
அதை ஞாபகப்படுத்திய நதியா, “போன வருஷம் ஆள் இல்லாம சபதம் போட்ட, இந்த வருஷம் ஆள் இருந்தும்… ம்ஹூம்!” என்ற விட்டுச் செல்ல ரத்த நாளங்கள் கொதித்தது இவனுக்கு.
23. சிறையிடாதே கருடா
கருடா 23
இரவெல்லாம் சரியாகத் தூங்காமல், விடியலை வரவேற்றவளைக் காபியோடு வரவேற்றார் சரளா. கனிந்த அவர் முகத்தைக் கண்டபின் அனைத்தும் காணாமல் சென்றது. மருமகள் வந்த நாளைக் கொண்டாட நினைத்தவர், உறங்கிக் கொண்டிருந்த பிள்ளைகளை எழுப்பினார். ஆளாளுக்கு வாய்க்கு வந்ததைத் திட்டிக்கொண்டு அவர் முன்பு நிற்க, அதை இதை வாங்கி வரச் சொல்லிக் கட்டளையிட்டார்.
அங்கிருக்கும் நால்வருக்கும், அரசியைக் கவனிக்கும் சேவகியாகத் தான் தெரிந்தார் சரளா. அவள் அமர்ந்தால் இருக்கையைத் துடைத்து விடுவது, வேர்த்தால் விசிறியை எடுத்து வீசுவது, ஓயாது சாப்பிட எதையாவது கொடுப்பது என்று அமர்க்களம் செய்து விட்டார். ஒரு கட்டத்திற்கு மேல், அங்கிருந்தவர்கள் வயிற்றெரிச்சலை உணர்ந்தவள் அவரைச் சமாளித்துவிட்டு,
“நான் உங்களுக்கு குக் பண்ணித் தரேன் அத்தை.” என்றாள்.
“அய்யய்யோ! அதெல்லாம் வேண்டாம்மா. நீ அவனோட டிவி பார்த்துட்டு இரு. சாப்பாட்டு வேலைய நான் பார்த்துக்கிறேன்.”
“உங்க பர்த்டேக்கு என்னோட ட்ரீட்.”
மொத்தமாக மாமியார் வாயை அடைத்தவள், பிரியாணி செய்வதற்காக அனைத்தையும் வாங்கி வரக் கட்டியவனோடு கிளம்ப, “அவன் மட்டும் போகட்டும் மா.” தடுத்தார்.
ஏன் என்று மூத்த மகன் காரணம் கேட்க, “ஊருக் கண்ணு பொல்லாத கண்ணுடா. என் வீட்டு மருமகள் இப்படிச் செவசெவன்னு இருக்கிறதைப் பார்த்தா வயித்தெரிச்சல்ல புலம்புவாங்க… யாரு கண்ணும் என் மருமகள் மேல படக்கூடாது.” என்றதைக் கேட்டதும் மாமியாரைக் கட்டிக் கொண்டு ரிது சிரிக்க,
“எங்க போய் முடியப் போகுதோ…” கருடேந்திரனின் உடன்பிறப்புகள் புலம்பினார்கள்.
அவர்கள் புலம்பலுக்கு நடுவில், சமைக்க அடுப்பங்கரைக்குச் சென்றவளுக்கு எது எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. போதாக்குறைக்கு இருவர் மட்டுமே நிற்கும் இடம் என்பதால், விசாலமாக நடந்தவளுக்கு எதுவும் ஒத்துப்பட்டு வரவில்லை. அவள் நிலையறிந்து உதவிக்கு வந்தான் கட்டியவன். அவனோடு சேர்ந்து நதியாவும், மூர்த்தியும் வந்து உதவி செய்தார்கள்.
ஜன்னல் வழியாக வரும் காற்றுப் போதவில்லை அவளுக்கு. சமையலின் வெப்பம் வேறு பாடாய் படுத்தியது. அங்கு வளர்ந்தவர்களுக்கு அது சகஜமாக இருக்க, கழிவறையில் கூட குளிரூட்டியை வைத்திருந்தவளுக்கு இது நரகமாக இருந்தது. அதிலும், அந்தக் குளிரூட்டியை அதிகபட்சக் குளிர்ச்சியில் வைத்து வளர்ந்த உடம்பு அது. குபுகுபுவென்று வேர்த்ததில் மயக்கம் வருவது போல் இருந்தது. வேகமாக நடுக்கூடத்திற்கு ஓடி வந்தவள் மின்விசிறியின் முன்பு நின்று கொள்ள,
“இதுக்குத் தான்மா நான் சொன்னேன்.” குறைப்பட்டுக் கொண்டார் சரளா.
“நீ உட்கார்ந்து டிவி பாருமா, அத்தையே சமைப்பா…”
“இல்ல மாமா, இன்னும் கொஞ்ச நேரத்துல முடிஞ்சிடும்.”
“பரவால்லம்மா, எல்லாத்தையும் அவ பார்த்துப்பா. உனக்கு என்ன படம் பிடிக்கும்னு சொல்லு, போட்டு விடச் சொல்றேன்.”
மாமனாரின் வார்த்தையை மீற முடியாது அவரோடு தொலைக்காட்சி முன்பு அமர்ந்தாள். இருவரும் கதை பேசிக்கொண்டே நேரத்தைக் கடந்தனர். மதிய உணவை வெற்றிகரமாகச் சமைத்து முடித்த சரளா, அதைச் சிறு கிண்ணத்தில் போட்டுவந்து மருமகளிடம் கொடுத்து ருசி பார்க்கச் சொன்னார்.
அள்ளிப் பருகியவளுக்கு தேவாமிர்தமாக இருந்தது. கண்களை விரித்துத் தலையாட்டும் அவள் அழகில், திருஷ்டி கழித்துப் போட்டவர் சாப்பிட அனைவரையும் அழைத்தார். தனியாகச் சாப்பிட்டுப் பழக்கப்பட்டவள் குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிட்டாள். எல்லாம் புது அனுபவமாக இருந்தது. சிரித்துப் பேசி மதிய உணவை முடித்த அனைவரும் மாலை எங்காவது சென்று வரத் திட்டமிட்டனர். அவர்கள் பேசுவதை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு மனதாக முடிவு செய்து மெரினா கடற்கரையைத் தேர்ந்தெடுத்தார்கள்.
இவை அவளுக்குச் சாதாரண ஒன்று. அறையில் இருந்து பார்த்தாலே கடல் அலை துள்ளிக் குதிக்கும். அப்படியான ஒன்றிற்கு, ஒரு மணி நேரத்திற்கு மேலாகத் திட்டமிடும் அவர்களை மனமகிழ்வாகப் பார்த்தவள், அதிசயித்துப் போனாள். எப்படிச் செல்வது என்று தனியாகத் திட்டமிடுவதில். கடைசியாக ஒரு முடிவை எடுக்க, நெஞ்சில் கை வைத்தாள் கருடனின் மனைவி.
முன்னிருக்கையில் கருடனோடு சத்யராஜ் அமர்ந்து வர, பெண்கள் மூவரும் பின்னால் அமர்ந்து கொண்டனர். மூர்த்தி நின்றிருப்பதைக் கண்டு, “நீங்க எப்படி வருவீங்க?” கேட்க, “கம்பில உட்கார்ந்துட்டு வருவேன் அண்ணி.” என ஓடி வந்து அமர்ந்தான்.
அமளி துமளியாக, மெரினாவைச் சென்றடைந்தவர்கள் ஆசை தீரப் பொழுதைக் கழித்தார்கள். வீட்டில் இருப்பவர்கள் கைகாட்டிய அனைத்தையும் வாங்கிக் கொடுத்து அழகு பார்த்தான் கருடேந்திரன். இவையும், ரிதுவின் வாழ்வில் மிகவும் புதிது. இதுபோன்ற அனுபவத்தை ஒரு நாள் கூட இதற்கு முன் சந்தித்தது இல்லை. எல்லாம் அவள் இருக்கும் இடத்திற்கு வந்துவிடும். இவளாகத் தேடிச்செல்லும் பொருளும், இவளைப் போன்று மினுமினுப்பாக உயர்ந்த இடத்தில் தான் இருக்கும். அங்கெல்லாம் பணம் மட்டுமே அனைத்துமாகத் தெரிந்திருக்கிறது. அவை அனைத்தையும் ஓரம் கட்டியது இந்தக் குடும்பம்.
“உனக்கு ஏதாச்சும் வேணுமா?”
“ம்ஹூம்!”
“சும்மா எதையாவது கேளு.”
பார்வையைச் சுழற்றியவள், “அது!” ஒன்றைக் கை காட்ட, “ஹா ஹா… வா.” அழைத்துச் சென்று வாங்கிக் கொடுத்தான்.
நெருப்பு மூட்டிச் சுட்டுத் தரும் சோளத்தைத் தான் கேட்டாள். ஒன்றுக்கு இரண்டாக வாங்கிக் கொடுத்தான். ஆசைப்பட்டுக் கேட்டவளுக்கு நான்கு வாய் கூட உண்ண முடியவில்லை.
“ஊ… ஆ…” ஓசை கொடுக்க ஆரம்பித்து விட்டாள்.
குடும்பத்தோடு அமர்ந்திருந்தவன் பார்வையில் அவை விழுந்தது. படபடக்கும் கண்களும், உப்பு மிளகாய்த்தூள் சுவையில் நிறம் மாறிப்போன அந்த அதரங்களும் ரசிக்கத் தூண்டியது. அடிக்கடி வலது கையால் உதட்டைத் துடைத்து, அதை ஆடையில் துடைத்துக் கொள்பவள் அவஸ்தை அழகாகத் தெரிந்தது. சுற்றி இருக்கும் குடும்பத்தாரை மறந்தவன் அவள் பின்னே அலைய ஆரம்பித்தான்.
பேசிக் கொண்டிருந்ததால், இவன் நிலையை யாரும் அறியவில்லை. தீவிரமாகச் சோளத்தோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தவளும் இவனைக் கவனிக்கவில்லை. தலைமுடி முதல், மணலில் புதைந்திருந்த பாதம் வரை எல்லாம் அவனுக்காக என்ற எண்ணம் மெய்சிலிர்க்க வைத்தது. முதல்முறையாக இவளைப் பார்க்கும் பொழுது, இப்படியான தருணத்தில் இருப்போம் என்பதை எதிர்பார்த்திடாதவனுக்கு, இந்தத் தருணம் பொக்கிஷமாக அமைந்தது.
“ஊஃப்!” என்றவள் நுனி நாக்கால் இதழை எச்சில் செய்து, “வேண்டாப்பா!” அவனை நோக்கி நீட்ட, அவள் செய்த செயலோடு அவன் இதயம் தொப்பென்று கடற்கரை மணலில் விழுந்தது.
நீட்டிய கையோடு அவனையே ரிது பார்த்திருக்க, அவனது பார்வை அந்த அதரத்தை மொய்த்தது. குடும்ப ஆள்களை எண்ணிக் கண்ணால் கண்டிக்கும் மனைவியைக் கண்ணடித்துக் கவர்ந்தவன், யாரும் அறியா வண்ணம் பறக்கும் முத்தத்தைத் தூதுவிட, அந்தி மறையும் சூரியன் இவள் வெட்கத்தைப் பார்த்து விட்டது.
***
சரளாவின் பிறந்தநாள் அன்றைய இரவை எட்டியது. நேற்று இரவு சரியாக உறங்காதவள், இன்றைய இரவையும் உறங்கா இரவாகக் கழித்தாள். காலை கண் விழித்ததும், கடவுளைத் தேடி ஓடாமல் மருமகளைத் தேடி வந்த சரளாவோடு, சகஜமாகப் பழக ஆரம்பித்தவள் அன்றைய வேலைகள் அனைத்தையும் அவளே செய்ய ஆரம்பித்தாள். அவர் வேண்டாம் என்றதையும் ஏற்காமல் அனைத்தையும் செய்ய ஆரம்பித்தாள்.
கருடன் எழுவதற்கு முன்னால், காலை உணவை முடித்துவிட்டுத் தயாராகி வந்தவள் அழகை அங்கிருந்த அனைவரும் ரசித்தார்கள். நீல நிறப் பட்டுடுத்தி, மிதமான அலங்காரத்தில் நின்றவளுக்குச் சிகை மட்டுமே குறையாகத் தெரிந்தது. அதை வாய் விட்டுச் சொன்னால், எப்படி எடுத்துக் கொள்வாளோ என அங்கிருந்த அனைவரும் மனதிற்குள் வைத்துக் கொள்ள, கண்ணாடியைப் பார்த்தவளுக்கு அந்த எண்ணம் சிறிதாக எட்டிப் பார்த்தது.
அதற்குக் காரணம் அன்று அவன் சொன்னதுதான். எப்படியான பெண் பிடிக்கும் என்ற கேள்விக்குப் பதிலாக நிற்கிறாள் ரிது. அன்று பூ வாங்கித் தர ஆசையாக இருக்கிறது என்றவனுக்காக, முடியின் மீது ஆசை பிறந்தது. எப்படியாவது அதையும் வளர்த்து அவனுக்காக அர்ப்பணிக்க முடிவு செய்தவள் மெல்லத் தட்டி எழுப்பி இன்பத்தில் ஆழ்த்தினாள்.
கதவு திறந்து இருப்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை அவனால். அவன் அவஸ்தை கண்டு ஏளனம் செய்தவள், காலை உணவைப் படையல் இட்டு பாராட்டையும் வாங்கினாள். அத்தோடு நிற்காமல், அந்தக் குடும்பத்தோடு சேர என்னென்ன வேண்டுமோ அவை அனைத்தையும் அவளாக ஓடிச் சென்று செய்ய,
“எதுக்கு இவ்ளோ கஷ்டப்படுற?” தாழ்ந்த குரலில் கேட்டான்.
“உனக்கு இப்படி இருந்தால் புடிக்கும்ல.”
“உன்ன ரொம்பக் கஷ்டப்படுத்துறன்னு தோணுது.”
“ப்ச்!” என அவன் சட்டை பட்டனைத் திருகியவள், “நீ என் கூட இருக்கிறது தான் எனக்குச் சந்தோஷம்! அது இந்த வீட்ல கிடைக்கும்னா இப்படி எல்லாம் இருக்க நான் ரெடி!” என்றவளை நெஞ்சோடு சேர்த்துக் கொண்டு உச்சந்தலையில் முத்தமிட்டான். அனைத்தும் சுகம் என்ற மகிழ்வில் சிரித்தபடி அவள் இருக்க, முத்தமிட்டவன் முகம் தான் நிறம் மாறியது.
அடுத்த நாளும் அழகாகப் பிறக்க அவளின் வாழ்வு இனிதே தொடங்கியது. இரவானால், தூக்கம் தான் வசப்படவில்லை. காலை எழுந்ததிலிருந்து பரபரப்பாக வேலை செய்து கொண்டிருப்பவள் மீது தான் அவன் பார்வை இருந்தது. அதை அறிந்தவள் காதலோடு கண்ணடிக்க, இதழ் அசைத்துச் சிரித்தான் குரோதத்தோடு.
வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு ஓய்வெடுக்க வந்தவளிடம், “இந்த டிரஸ்ஸை மட்டும் கொஞ்சம் வாஷ் பண்ணித் தரியா.” கொடுக்க, மொட்டை மாடிக்குச் சென்றாள். சமையல் தெரியும் என்பதால் அதில் கடினப்படாதவள், துணி துவைத்து முடிப்பதற்குள் ஒரு வழி ஆகிவிட்டாள். பின் இடுப்பு வலியில் நகர மறுத்தது. அதை முடித்த கையோடு,
“காஃபி போடுறியா?” கெஞ்சலோடு கேட்டான்.
“இந்தாப்பா.” என்றதை வாங்கிக் கொண்டு டிவி பார்க்க ஆரம்பித்தான்.
“என்கிட்டக் கேட்டு இருந்தா நான் போட்டுக் கொடுத்திருப்பேன்ல டா.”
“அவ எதுக்கு இருக்கா?” என்று விட்டான் வெடுக்கென்று.
ஒரு நொடி அங்கிருந்த அனைவருக்கும் முகம் வாட, “இப்படி எல்லாம் இருப்பன்னு எதிர்பார்க்கவே இல்லம்மா… சரளா சொன்ன மாதிரி நீ ரொம்ப நல்ல பொண்ணு. நாங்கதான் உன்னைத் தப்பா புரிஞ்சுகிட்டோம்.” என்றார் சத்யராஜ்.
“ஆமா அண்ணி. நாங்களும் இதையெல்லாம் எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் அண்ணனை நீங்க கவனிக்கிற விதத்தைப் பார்க்கும்போது ஆச்சரியமா இருக்கு.” நதியா.
“உங்களை மரியாதை இல்லாமல் பேசிட்டேன் அண்ணி. மனசுல எதுவும் வச்சுக்காதீங்க.” மூர்த்தி.
“ஹா ஹா… ஹி ஹி…”
கருடேந்திரன் போட்ட கூச்சலில் அனைவரின் பார்வையும் அவனிடம் திரும்ப, “யாரு! இவ நல்லவளா?” என்று விட்டு அண்ணாந்து சிரித்தான்.
தன்னவள் தன்னைப் பார்ப்பதை உணர்ந்தவன், சிரிப்பை நிறுத்தி முறைப்பை வீசினான். வானிலை மாற்றம் போல் மாறும் அவன் முக பாவனைகளைப் புரிந்து கொள்ள முடியாமல் புருவம் சுருக்கினாள். அதில் ஏளனத்தைக் கொட்டியவன்,
“இப்படி எல்லாம் பண்ற ஆளா இவ… உங்க பாராட்டெல்லாம் எனக்கு வர வேண்டியது. இந்தப் பணக்காரிக்கு மருமகள் வேஷம் போட்டு மூணு நாளா கூத்தாட வச்சது நான்தான்.” என்றதும் இடியே இடித்தது அவள் இதயத்தில்.
மெல்ல எழுந்து அவள் முன்பு நின்றான். தந்திரத்திற்குள் சிக்கிக் கொண்டவள் காதலித்தவனை இன்னும் நம்பிக் கொண்டிருக்க, நின்றவனுக்கோ மலையை உடைத்து எறிந்து வெற்றி பெற்ற மகிழ்வு. தோல்வியின் பக்கமே செல்லாதவளைக் குண்டுக் கட்டாகத் தூக்கிப் போட்ட மகிழ்வில் மிதப்பாகச் சிரித்தவன்,
“பரவாயில்லையே…” என மேலும் கீழும் பார்த்தான்.
“நான் கூட உன்னை ஜெயிக்கவே முடியாதுன்னு நம்பிட்டேன். அட மடையா, நீ ஜெயிப்படான்னு நம்பிக்கை கொடுத்து அதை நிறைவேத்தி வெச்சிட்டியே!”
“கருடா…”
“எஸ்! கருடனே தான். எப்படி இருக்கு நம்ம ஆட்டம்? பெரிய பணக்காரி! சொடக்குப் போட்டா நாலு பேர் கும்பிடு போட்டு ரெடியா நிப்பாங்க. நடை, உடை, பாவனை எல்லாத்துலயும் பணத்தோட வாசம் தூக்கலா இருக்கும். மரியாதை எல்லாம் என்னன்னே தெரியாது. குடிச்ச டம்ளரை எடுத்து வைக்கக் கூட காலிங் பெல் அடிச்சு ஆளக் கூப்பிடுவ… இந்தப் பட்டுக் கால் மண்ல பட்டதே இல்ல. அப்படி இருந்த உன்னை எப்படி நிக்க வெச்சிருக்கேன் பார்த்தியா?
உன்கிட்ட இப்பவும் காசு இருக்கு. ஆனா, நீ ஒரு செல்லாக்காசு! மரியாதை இல்லாமள் பேசுன என் பெத்தவங்ககிட்ட உன்னை நிக்க வச்சுருக்கேன். என் வீட்ல ஒரு வேலைக்காரி மாதிரி எல்லா வேலையும் செய்ய வச்சிருக்கேன். என்னைத் தூங்க விடாம டார்ச்சர் பண்ண உன்னை, மூணு நாளா இம்சை குடுக்காமலே தூங்க விடாமல் செஞ்சிருக்கேன். ரோட்டுல நடக்க வச்சிருக்கேன். என் வீட்டுச் சாப்பாட்டுக்கு, மூணு வேளையும் உட்கார வச்சிருக்கேன்.” என்ற வார்த்தைகள் அனைத்தும் சாட்டை அடியாக அவள் உடலை வதைத்தது.
அவன் குடும்பத்தார்கள் அனைவரும் நம்ப முடியாத திகைப்பில் நின்றிருக்க, “அது எல்லாத்தையும் விட, நாயி, நாயின்னு சொன்ன ஒருத்தனுக்காக உன்ன நாயா அலைய வச்சிருக்கேன் பார்த்தியா…” என்றதும் அவள் விழிகள் அழுத்தமாகப் பார்த்தது அவனை.
“எப்படி எப்படி? உனக்காகத் தான் எல்லாம் பண்ணேன். உண்மை தெரிஞ்சா உனக்கும் எனக்குமான உறவு முடிஞ்சு போயிடும், நீ எனக்கு வேணும்! ஹா ஹா…”
அழுத்தமான விழிகளுக்குள் தோல்வி ஊடுருவியது. மெல்ல அவள் மனத்திற்கும், புத்திக்கும் அவன் நடத்திய நாடகம் புரிந்தது. தன்னை நேரில் நின்று அடிக்க முடியாததால், அன்பெனும் ஆயுதத்தை நேராக இதயத்தில் குத்தி ரத்தத்தைப் பார்த்திருக்கிறான் என்பதைத் தாமதமாக உணர்ந்தவளால், ஒன்றும் செய்ய முடியவில்லை. அவன் முன்பு நிராயுதபாணியாக நின்றாள். அதை முழுதாக ரசித்தவன் தாவி அவள் கழுத்தைப் பிடித்து, “என் அம்மாவை வச்சு அடக்கப் பார்த்த உன்னை, உன் அம்மாவ வச்சு அடக்கிட்டேன் பார்த்தியா…” என்று பின்னால் தள்ளி விட்டான்.
பிடிக்க வந்த சரளாவையும், தன்னிடம் பேச வந்த குடும்பத்து ஆள்களையும் ஒரே பார்வையில் அடக்கியவன், “இப்படி ஒரு நாளுக்காகத் தான்டி கனவுலயும் பிடிக்காத உன்னைப் பிடிச்ச மாதிரி நடிச்சேன். என் வீட்ல வந்து இப்படி நீ உட்காரனும்னு தான்டி ஒவ்வொன்னத்தையும் பார்த்துப் பார்த்துச் செஞ்சேன்… கருடா கருடான்னு பைத்தியம் பிடிச்சு அலையத் தான்டி தொட்டாலே அருவருப்பா இருக்க உன்ன, ரசிச்சுத் தொடுற மாதிரி நடிச்சேன்.” என்றதும் அவளது கண்கள் இறுக்கமாக மூடிக்கொண்டது.
“சும்மா சொல்லக் கூடாது. என்ன அருமையா என்னை லவ் பண்ற… அப்படியே உருகி ஊத்திடுச்சு உன் அன்பு. உனக்குள்ள இப்படி ஒரு காதலா!” என்றவன் கைகள் இரண்டையும் நீட்டி, “சொல்லும்போதே எப்படிச் சிலிர்க்குது பாரு!” சிரித்தான்.
அவளோ கண்களைத் திறக்காமல் அதே நிலையில் இருக்க, அழுத்தமாகக் கன்னத்தைப் பிடித்து, “கண்ணத் திறடி! நீ தோத்துப் போய் நிற்கிறதை நான் பார்க்கணும். ஆணவத்துல எவ்ளோ ஆட்டம் போட்ட… எல்லாத்தையும் சுக்கு நூறா உடைச்சு, என் காலுக்குக் கீழே நிக்க வச்சுட்டேன் பார்த்தியா?” என்றவனை அந்நிலையிலும் பார்க்கத் தயாராக இல்லை ரிதுசதிகா.
“ம்ம்… நீ செத்துப்போன பாம்பு! இனி உன்ன அடிச்சு ஒன்னும் ஆகப் போறது இல்ல. இந்த அசிங்கத்தைத் தாங்கிக்க முடியாம ஏதாச்சும் பண்ணிக்கணும்னு தோணுச்சுன்னா, சீக்கிரம் பண்ணிக்க… கோர்ட், டைவர்ஸ்னு அலையுற வேலை மிச்சம்!” என்றவன் சிறிதும் இரக்கம் பார்க்காமல் அவள் பின்னங்கழுத்தில் கை வைத்து, “வெளிய போடி!” தள்ளி விட்டான்.
“என்னடா பண்ற?” என அவசரமாக ஓடிவரும் அன்னையைத் தடுத்துக் கதவைச் சாற்றியவன், “நீங்க என்ன கேட்டீங்களோ, அதை நான் செஞ்சிட்டேன். இதுக்கு மேலயும் இந்த விஷயத்துக்குள்ள வராதீங்க. அவளுக்கும், எனக்குமான உறவு இந்த நிமிஷத்தோட முடிஞ்சு போச்சு.” என்றதையும் மீறி அவர் கதவைத் திறக்கப் போக,
“அந்தக் கதவு திறந்துச்சுன்னா, உங்க புள்ள செத்துடுவான்.” என்றான் அழுத்தமாக.
பிள்ளையின் வார்த்தையைத் தாங்கிக் கொள்ள முடியாதவர் அழுகையோடு நிற்க, மற்ற மூவருக்கும் அங்கிருப்பது கருடனாகத் தெரியவில்லை. இதுபோன்று பேசிக் கூடக் கேட்டதில்லை. அப்படிப்பட்டவனா, இப்படி அரக்கனாக நடந்து கொண்டது என்ற பெரும் அதிர்வில் அப்படியே இருந்தார்கள். குடும்பத்தார்கள் பார்வையைப் பற்றிக் கவலை கொள்ளாது, தன் அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டான்.
***
எப்படி வீடு வந்து சேர்ந்தோம் என்பதைக் கூட அறியாதவள், பிரம்மை பிடித்தவள் போல் ஒவ்வொரு படியாக ஏறிக் கொண்டிருந்தாள். மகளைக் கவனித்தவர், “என்னடா, அதுக்குள்ள வந்துட்ட. கருடன் வரல…” சிரித்த முகமாக விசாரித்தார்.
புகுந்த வீட்டிற்கு வாழச் சென்ற மகளை அன்போடு விசாரிக்க, பதில் சொல்லும் நிலையில் இல்லாதவள் தாயின் அறை முன்பு நின்றாள். அதுவரை ஒரு சொட்டுக் கண்ணீர் கூட அவள் விழிகளில் இல்லை. அவ்வளவு அழுத்தமாக வீடு வந்து சேர்ந்தவள், அன்னையைப் பார்த்ததும் உடைந்து விட்டாள்.
ஓடிச்சென்று ராதாவின் மீது சரிந்தவள் சத்தமிட்டு அழுதாள். அங்கிருந்த பொன்வண்ணனுக்கு உடல் நடுங்கியது. ராதாவிற்காகவும், மூத்த மகனுக்காகவும் அவள் இப்படி அழுது பார்த்திருக்கிறார். அதன்பின் இப்போது தான் பார்க்கிறார். நன்றாகப் புகுந்த வீட்டிற்கு வாழச் சென்ற பெண், இப்படி அழுவதைப் பார்க்க எந்தத் தந்தைக்குத் தான் துணிவிருக்கும்.
பாய்ந்தோடி மகளை அரவணைத்தவர் பயத்தோடு என்னவென்று கேட்க, அப்போதும் எதுவும் சொல்லாமல் அழ மட்டுமே செய்தாள். நேரம் கடந்தும் அவள் அழுகைக்கான காரணம் தெரியவில்லை. எவ்வளவு சமாதானங்கள் சொல்லியும் ரிதுவைச் சரிப்படுத்த முடியவில்லை.
பயத்தில், மருமகனைத் தொடர்பு கொண்டவருக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. சத்யராஜைத் தொடர்பு கொண்டு மகளது அழுகைக்கான காரணத்தைக் கேட்டார். சங்கடத்தோடு நடந்த அனைத்தையும் தெரிவிக்க, இதயம் துடிப்பதை நிறுத்தியது. நம்ப மறுத்தவர் இரண்டு மூன்று தடவை, “நிஜமாவா?” கேட்டார்.
இவ்விருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று முதலில் ஆசை கொண்டது இவர் தான். இவரின் அந்த ஆசைதான் பெற்ற மகளின் நிலைக்குக் காரணம். பிள்ளையின் அழுகையைச் சகித்துக் கொள்ள முடியாத தந்தை ஆதரவாக அரவணைத்து, “நான் பேசிப் பார்க்கிறேன்டா” என்றவரைப் பார்த்தாள்.
அப்பார்வையில் இருக்கும் குற்றத்தை உணர்ந்து, தலை குனிந்தவரை முடிந்த வரை முறைத்து விட்டு அறைக்குச் சென்று விட்டாள். பெரிய சுனாமியே இரு வீட்டையும் சுற்றி அடித்தது போல் இருந்தது நிலவரம். இரு வீடும் பலத்த சேதாரங்களைச் சந்தித்து, எப்படித் தலையெடுப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தது.
இரண்டு நாள்கள் அமைதியாக இருந்த பெரியவர்கள் பேசிக் கொண்டனர். அதன்படி மகனைச் சமாதானம் செய்ய சரளாவும், சத்யராஜும் போராடிக் கொண்டிருக்க, அந்த வாய்ப்பையே தந்தைக்குக் கொடுக்கவில்லை ரிது. தன் முடிவில் மாற்றம் இல்லை என்று விட்டான் கருடன். நடந்ததைப் பற்றிப் பேசத் தயாராக இல்லை ரிது. இவர்களின் இந்த முடிவோடு இரண்டு வாரங்கள் கடந்தது.
மிடுக்காகச் சுற்றித் திரியும், மகள் முகத்தில் தெரியும் வேதனையைக் கண்டு மன உளைச்சலுக்கு ஆளானவர், சொல்லிக் கொள்ளாமல் மருமகனைப் பார்க்கச் சென்றார். வழக்கம்போல் ஆட்டோ ஓட்டிவிட்டுக் காலை உணவிற்கு வந்தவன் இவரைச் சிறிதும் மதிக்காது டீவி பார்த்துக் கொண்டிருக்க, “உன் மேல நிறையக் கோபம் இருந்தாலும், அதைக் காட்ட முடியல. காரணம் என் பொண்ணு…
ஒரு பொண்ணப் பெத்தவனா மட்டும்தான் உன்கிட்டப் பேச வந்திருக்கேன். ரிது அன்புக்கு அடங்கற குழந்தை! எதை அவகிட்டக் காட்டக் கூடாதோ அதைக் காட்டித் தோற்கடிச்சிருக்க. என் பொண்ணு ரொம்ப உடைஞ்சு போய் இருக்கா, ஏற்கெனவே அவள் நிறைய இழப்பைப் பார்த்திருக்கா… உன்னோடதை நிச்சயம் தாங்க மாட்டா. தயவு செஞ்சு எல்லாத்தையும் மறந்துட்டு…” என அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கருடனின் குரல் ஒலித்தது.
“மரியாதையா வெளிய போயிடுங்க.” என்று.
“என்னடா ஆச்சு உனக்கு? அந்தப் பொண்ணு தான் எந்தத் தப்பும் பண்ணலன்னு தெரிஞ்சிருச்சே. அப்புறம் எதுக்காகடா இப்படி நடந்துக்கிற? எங்களைத் தான அவ தப்பா பேசினா. அதை நாங்களே மறந்துட்டோம். உனக்கு என்னடா? தப்பே பண்ணாதவளுக்குத் தாலி கட்டி நீ தான் பெரிய தப்புப் பண்ணிருக்க. இதுல பேச வந்தவரை மரியாதை இல்லாமல் பேசுற. நீ பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல கருடா…”
திட்டிக் கொண்டிருக்கும் தந்தையைச் சிறிதும் கருத்தில் கொள்ளாது, “பொண்ண ஒழுக்கமா வளர்க்கத் துப்பில்லை. இதுல நியாயம் பேச வந்துட்டீங்க. நான் அவ கழுத்துல கட்டினது தாலியே இல்ல. உங்க பொண்ணும் அதை ஒருநாளும் மதிச்சதும் இல்ல. இந்நேரம் கழற்றித் தூக்கிப் போட்டு இருப்பா. வேற எந்த இளிச்சவாயனாவது கிடைச்சா கட்டி வையுங்க.” என்றவனை நம்ப முடியாது பார்த்தார் பொன்வண்ணன்.
சொல்லியும் நகராமல் அமர்ந்திருப்பவரைக் கேவலமாக ஒரு பார்வை பார்த்தவன், “எந்த வேலையப் பார்க்கக் கூடாதோ, அந்த வேலையைப் பார்க்குறீங்க.” எனத் தன்னால் எழுந்து செல்ல வைத்தான்.
***
மனம் நொந்து தனியாக அழுது புலம்பியவர் மகளைப் பார்க்க வந்தார். மெத்தையில் கவிழ்ந்து படுத்திருந்தவள் அருகில் வந்தவர், “ரிது…” என அந்த ஏழு அடுக்கு மாடி இடிந்து விடும் அளவிற்குக் கத்தினார். மெத்தை முழுவதும் மாத்திரைகள் சிதறி இருந்தது. அரை மயக்கத்தில் தந்தையின் குரலைக் கேட்டபடி படுத்திருந்தாள். அலறித் துடித்த பொன்வண்ணன், மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்ல முயல, திறக்க முடியாத கண்களைக் கடினப்பட்டுத் திறந்து,
“என்னோட இந்த நிலைமைக்கு நீங்க தான் முதல் காரணம்!” என அவரைத் தள்ளி விட்டாள்.
தலையில் அடித்துக் கொண்டு, செய்த தவறைச் சொல்லிப் புலம்பியவர் கெஞ்சி மருத்துவமனைக்கு அழைக்க, அவரை விரட்டி அடித்துக் கதவைச் சாற்றிக் கொண்டாள்.
கதவைத் தட்டித் தோற்றுப் போனவர் ஆத்திரமடங்காது சத்யராஜை அழைத்து, “என் பொண்ணுக்கு மட்டும் ஏதாச்சும் ஆச்சு, அவனை நான் சும்மா விடமாட்டேன். பாவிப் பையன, நம்பிக் கட்டிக் கொடுத்ததுக்கு என் பொண்ணை இப்படிப் பண்ணிட்டானே!” பேரிடியை இறக்கினார்.